Friday, April 6, 2012

சிவபுராணம் - 11

                                    பசுபதாஸ்திரம்

தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;

வேடனாய் உருவெடுத்து
வேகமாய் வந்தான்,
பார்த்திபன் கொல்ல எண்ணிய
பன்றியின் மேல்
பானம் விடுத்தான்;
இருவரின் கணையும்
இரையைத் தாக்க
அக்கணமே
அப்பன்றி
அசைய முடியாது உயிர் விட்டது;

பன்றி இறந்த இடத்திற்கு
பரமேஸ்வரனும் வந்தான்,
பார்த்திபனும் வந்தான்;
இறந்தது எனக்கே சொந்தமென்று
இருவரும் வாதிட்டனர்;
இதனைத் தொடர்ந்து
இருவரும் அம்பெடுத்துச் சண்டையிட்டனர்;
இரு தரப்பிலும் அம்பு
இல்லாது போகவே,
மல்யுத்தச் சண்டை இட்டு ஒருவர்
மற்றவரைச் சாய்த்து விட எண்ணினர்;

மலைக்காது போரிட்டான் குந்தி
மைந்தன்;
சளைக்காது அவனை எதிர் கொண்டான்
சர்வேஸ்வரன்;

சிறிது நேரம் கழித்து
தன் வேடம் மறைத்து
சுய உருவம் எடுத்தான்;

ஆரண்யத்தில் எவனை எண்ணி தவம் செய்தென
அவனிடமே சண்டை இட்டதை அறிந்து
அர்ச்சுனன் வருந்தினான்,
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்;

'கவலை எதற்கு அர்ச்சுனா,
உன் பானங்கள் எல்லாம்
என்மேல் மாலைகளாகவே விழுந்தன; எனவே
வருத்தம் விடு,
பசுபதாஸ்திரம் பிடி,
எல்லாப் புகழும் பெறு;'



வாழ்த்தி மறைந்தான் விஷ்வேஷ்வரன்.
வணங்கி நின்றான் விஜயன்.

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment