Sunday, April 1, 2018

பொன்மாலைப் பொழுதில் 16


இப்போல்லாம் தினம் பல்துலக்குகிறேன்
தீவாளியோ பொங்கலோ மார்கழியோ
நாளெதுவாகினும் தினம் குளிக்கிறேன்.
எண்ணையில் ஊறவைத்துத் தலை சீவிக்கொள்கிறேன்.
அழகாய் உடுத்த ஆசைப்படுகிறேன்
இருப்பதை துவைத்துக் கசக்கி காயவைத்து
இடையிருக்கிக் கட்டிக்கொள்கிறேன்
இருப்பு ஏதுமில்லையென்றாலும்
ஈகை செய்வதில் முழுமனதோடு ஈடுபடுகிறேன்
மெல்லிசைப்பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கிறேன்
துள்ளிசைத் தகடுகளைத் தூக்கியெறிந்து விட்டேன்
நல்லவனாகவே இருந்து விடுகிறேன்,
இன்னொருமுறை ... இன்னும் ஒரு முறை...
மெல்..ல ... தலைசாய்த்து ... கண் சிமிட்டி ... கன்னத்தில் குழி விழ ...
ஒரு  சிறு புன்னகை
ஐயையோ நெஞ்சு அலையுதடி ஆகாசம் இப்போ வளையுதடி

***

இப்பொழுதெல்லாம் என் இதயம்
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது.
கண் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும்
காணும் காட்சி உன்முகமாகவே இருக்கிறது.
தூரத்திலிருந்த வட்ட நிலவு
வான் விட்டு என் ஐன்னல் பக்கம் வந்து நின்றுப் பேசுகிறது.
இதுநாள்வரை தழுவிக்கிடந்த உறக்கம்
எனைவிட்டு எங்கோ தூரம் சென்று விட்டது.
என் சிந்தனை, செயல், சொற்கள் எல்லாம்
இன்று உனைச்சுற்றியே இருக்கையில்
நேற்று வரை வேறென்னெல்லாம் செய்து வந்தேன்
என்று எனக்கேப் புரியாதிருக்கிறது
எல்லாம் காதல் செய்த மாயமோடி ?
நீ ஆனாய் என் உயிரடி, சந்தேகமா ?
ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடி

***

கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
கனவு கண்டிரு
கடவுளைத் துதித்திரு
காலம்கனியும் வரை கண்திறந்துக் காத்திரு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

***

பார்த்து ரசிக்க ஆளில்லையெனினும்
நீரில் தவழும் நிலவின் பிம்பம்

பறித்து நுகர ஆளில்லையெனினும்
மலர்ந்து மணம் வீசும் மலர்

கூட விளையாட ஆளில்லையெனினும்
தனக்குள் மகிழ்ந்து சிரிக்கும் குழந்தை

குதித்துப் பரவசப்பட ஆளில்லையெனினும்
கரைநோக்கி ஆடிவரும் அலைகள்

அருகில் நீ இல்லையெனினும்
அகலாது எனைச் சுற்றும் உன் நினைவு

கவிதை படிக்க ரசிக்க ஆளில்லையெனினும்
தினம் தினம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலிலாடும்

***

காலை கண் திறக்கையில் கையில் காபியோடு நிற்கிறாய்
முத்தம் தர எத்தனித்தால் கெட்டவார்த்தை பலவோடு கண்டபடி திட்டுகிறான் அறை நண்பன்.

குளிக்கையில் கூடவே நனைகிறாய்
துடைத்து விட எண்ணுகையில் கதவு படபடவென்று அடிக்கப்பட திறக்கிறேன். வயிரைப் பிசைந்து கொண்டு உள்ளே ஓடுகிறான் நண்பன்.

உனக்கு ஊட்டி விட்டுக் கொண்டே உண்கிறேன் நான்
எனக்குக் கையிருக்குடா கபோதி என்கிறான் நண்பன்

இரவில் இருளில் ஏகாந்தமாய் நாமிருக்க
தொந்தரவு தாங்காது தரையில் படுக்கப் பழகிக்கொண்டான் நண்பன்

சரி விழி திறந்திருப்பதால் உன் உருவம் மட்டும் தெரிகிறதோ என் கண்ணே என்றெண்ணி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே

***

 என்னுள் ஒரு ஆனந்தம்
எனக்கேப் புரியாது எங்கிருந்து வந்தாய் ?

வார்த்தைகள் வரிசையில் தானே வந்தமருது
கவிதையின் உட்பொருளாய் நீ இருக்காய்.

அழகாய் உடுத்த ஆசையாய் இருக்கே
எனைப் பார்த்து ஏன் சிரித்தாய்

திடீரென்று பூத்து மணக்கும் மல்லிகை
எதற்காக இதுவரை நீ காத்திருந்தாய் ?

எனைத்தேடி வந்திருக்கும் தேவதையே,
இதுநாள் வரை ஏனடி மறைந்திருந்தாய் ?

என்மேல் விழுந்த மழைத்துளியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

***


No comments:

Post a Comment