Tuesday, October 22, 2019

பொன்மாலைப் பொழுதில் 64

492. வாரணம் ஆயிரம் சூழ வந்து நாரணன் தன் கைத்தளம் பற்றியக் கனவு கண்டாள் ஆண்டாள்.
நாலைந்து நரிகள் சூழ இடையில் மான் ஒன்று நின்று தவிக்க, கருங் காளையொன்று தனைக் காத்த கனவைச் சொன்னாள் ராதை.
காத்திருந்தேன்,எதிர்பார்த்தேன், வருவான் என்று நம்பியிருந்தேன், வந்தான் ... தாடி மீசையோடு, சிங்கம் போல் ... எனக்காக, இந்த ஜானுவிற்காக ராம் வந்த கனவு சொன்னாள்.
ம்ம்ம் ... இதெல்லாம் சரி தான்,
ஆனால் நான் ஆரம்பத்திலிருந்து  இப்படியில்லையே இப்போது என்ன ஆயிற்று என்று யோசித்தபடியே,
என்ன இது என்ன இது என்று குழம்பியபடியே உறங்கிப்போக
அப்போது ... அட இது கனவா? இதுதான் அதுவா ?.
கா வில் ஆரம்பிக்க ல் லில் முடிய ...
*காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*


491. ஐயனே பிறவாமை வேண்டும், பிறந்தால் உமை மறவாமை வேண்டியது ஔவையார்.
நா தங்கள் நாமம் செப்ப வேண்டும், கை தங்களைக் கும்பிட வேண்டும், கால் தங்கள் சேவையில் ஈடுபட வேண்டியது அனுமன்.
ஹே பண்டரிநாதா தாங்கள் இங்கேயே தங்கி  பக்தர்கட்கு அருள வேண்டியது துகாராம்.
மழை பொழிய, வயல் விழைய, கொட்டில் நிறைய நல்லோர் வாழ வேண்டியது ஆண்டாள்.
அவரவர்க்கு வேண்ட ஆயிரம் இருக்க, எனக்கு ... ம்ம்ம் ...
கொடுத்துப் பழக வேண்டும்,
இரவில் உறக்கம்  வேண்டும், செயல் முடிக்கும் துணிவு வேண்டும்
கம்பனின் கவிநயம் கசடறக் கற்க வேண்டும், காளிதாசனின்
*மேக தூதம் பாட வேண்டும்*.


490. சந்தோஷமாயிருக்கிறது. மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
பாவையினுள் பரவசம் படர்கிறது.
நன்றாய்த் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்ட போதினும், என்றும் இருக்கும் சோர்வு இன்று இல்லை.
எல்லாம் உன்னால்தானென சொல்லவும் வேணுமா ?
சொல்லாவிட்டால் உனக்குத் தான் புரியாது போகுமா ?
கள்வா, புயலாய் இப் பூவையின் நெஞ்சினுள் நுழைந்தக் காத.....
காலையில் ... வந்திடுவாய் தானே?
என் காத்திருப்புக்கெல்லாம் பலன் கிட்டும் தானே.
நீ வந்ததும் உன்னோடு கதை பல பேச வேண்டும். கை கோர்த்த படி பனியில்  நடக்க வேண்டும்.
உனக்குப் பால் போளி செய்துத் தர வேண்டும். எனக்கு அதை நீ ஊட் ~டினால்~ டும் போது உன் விரலைக் கடித்து விட வேண்டும்.
வரைந்த ஓவியங்களை உனக்குக் காட்டித் தகுந்த பரிசு கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் ... இன்னும் ... ஐயோ மணி எட்டு தானா ? இந்த இரவு 'மட்டும்' விரைந்து  முடியாதா? நிலவு மறையாதா ? கிழக்கு விடியாதா ?
*செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா?*


489. 'காடோ கடலோ நீயிருக்கும் இடந்தான் னெனக்கு அயோத்தி, இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சீதை.
'போரா? நரகாசுரனா? இரு, நானும் வரேன், இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சத்யபாமா.
'கனிகண்ணன் போகிறான், நானும்; நீரும் உம் பைநாகப்பாயை சுருட்டிக் கொள்ளும்,  சேர்ந்தே போவோம்' சொன்னது திருமழிசை ஆழ்வார்.
'என்னது குற்றமா, என் பாட்டிலா, வா, நீயும் நானும் சேர்ந்தே போய் அந்த பாண்டியனை ஒரு கை பார்ப்போம்' என்று கோபத்தோடு கிளம்பியது சிவம்.
ஆடி, செல்வம் தொலைத்து வந்தவனை, 'கவலை விடு, பாண்டிய நாடு போவோம், இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் கண்ணகி.
நாம் மட்டும் ஏன் பிரிந்திருக்கணும்? வேறுபாடுகளை ரசிப்போம். ஒன்றாய் இருப்போம்.
*இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்*


488. கடலைக் கடக்கணும் என்றதும் வருண பகவான் பூஜையோடு தொடங்கினானே ராமன்.
வள்ளியை வளைக்க அண்ணனிடம் உதவி  வேண்டினான் வடிவேலன்.
பாரதப் போரில் வெற்றி பெற களபழியோடு ஆரம்பித்தான் துரியோதனன்.
சபரிமலை போவதற்கு முன் ஒரு மண்டலம் விரதம் தினம் பூஜை உண்டே.
இன்றும் கிராமங்களில் திருவிழா தொடங்குமுன் காப்பு கட்டுவதுண்டு.
அட எந்த கடிதமெனினும் மேலே புள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோமே.
ஒரு காரியம் செய்வதற்கு முன் ...
நானும் ... உன் கன்னத்தில் முத்தமிட *நேந்துக்கிட்டேன் நெய் விளக்கு ஏத்தி வச்சி*


486. கருவறையில் சந்திர காந்தக் கல் இருப்பதால் வெயில் காலம் குளிராகவும் குளிர் காலம் வெப்பமாகவும் இருக்கும்  பெரிய கோவில் - அதிசய கோவில்.
கேரளபுரத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் கருப்பு வெள்ளை நிறத்தை மாற்றிக் கொள்கிறார் - அதிசய விநாயகர்.
விஜயவாடா அருகே, தரும் பானகத்தில் சரி பாதியைக் குடித்து மீதியை உமிழ்ந்து விடுகிறார் - அதிசய நரசிம்மர்.
ஒப்பிலியப்பன் கோவிலில், உப்பு இல்லை என்பதே தெரியாது அங்கு தரப்படும் - அதிசய ப்ரசாதம்.
தாராசுரம் கோவிலில் கல் ஒன்றை உருட்டி விட சரிகமபதநி ஓசை ஒலிக்கும் - அதிசய படிகட்டு.
அதிசயங்களோடு அதிசயம் நேற்று கற்றுக் கொண்டது, புதிய ஒரு ஆலாபனை, உன்னைக் கவர்வதற்கென்று அபூர்வமான, அழகான, ஆனந்தமான - *அதிசய ராகம்*

No comments:

Post a Comment