Sunday, June 23, 2019

பொன்மாலைப் பொழுதில் 57

430. புயல் வருதாமே, பொறம்போக்கு இது எங்கே போச்சோ, தெரிலியே.
குட்டி போட்ட பூனையாட்டம் என்னையே சுத்தி சுத்தி வருவான்,
ரண்டு நாளா ஆளக் காணோம்.
எனக்கு அவன் நெனப்பாவே ...
கையில குடை இருக்கு, எங்கேனு போய் தேடுவேன், எருமை எருமை.
பக்கத்தில் இருந்தா ஏதாச்சும் தொணதொணன்னு  பேசுவான்.
கைய வச்சிக்கிட்டு சும்மாயிருக்க மாட்டான், கடங்கார கம்னாட்டி.
மழை ஆரம்பிச்சிடுச்சி, காய வச்ச துணியெல்லா ஈரமாகுது,
எனக்கோ அவன் நெனப்பா ... 
கோழி நனையுது, ஊற வச்ச சோளம் நனையுது, பாவிப்பய என் நெஞ்சில் அவ நெனப்பு எப்போதும்,
இரவோ பகலோ
மழையோ வெயிலோ
வேர்வையிலும் குளிரிலும்
சாமத்தில் சாய்த்த பின்னும்
*சாரக்காத்து வீசும் போதும்*

429. தீவை எறித்த பின், கட்டுண்டு நிற்பவனைப் பார்த்து ராவணன் கேட்டது 'யாரிந்த வானரம்?'
சகுந்தலை பிள்ளையோடு படியேற துர்வாச சாபத்தால் உறவு மறந்த துஷ்யந்தன் கேட்டது 'யார் நீ?'
திருமணத்திற்குத் தடை சொல்லும் கிழவனை பார்த்து சினத்தோடு சுந்தரன் கேட்டது 'யாரிந்த பித்தன்?'.
கையில் சிலம்பு, கண்ணில் கோபம், கண்ணகி நெடுஞ்செழியனைப் பார்த்துக் கேட்டது 'யார் கள்வன்?'.
சோ ராமசாமி எழுதி இயக்கி நடித்த புகழ் பெற்ற மேடை நாடகம் 'யார் ப்ராமணன்?'
இன்னும் ஒருவர் மட்டும் வரணும் என முரளி சொல்ல சுபா கேட்டது 'யார், ஜானுவா?'.
அன்பே சிவம் என்பதை அறிந்த நல்ல சிவம் இறைவன் பெயரில் ஏமாற்றுவாரைப் பார்த்துக் கேட்டது *யார் ... யார் ... சிவம்?*

428. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*

427. புராணங்களின் படி நான்கு வர்ணங்களுக்கு வண்ணம் உண்டு.
வேதம் சொல்வோர்க்கு வெள்ளை.
போர் புரியும் அரச குலத்தோர்க்கு சிகப்பு, வணிகர்க்கோ மஞ்சள்.
உடல் உழைத்து வேலை செய்வோர்- க்கு கருப்பு என்று குறிப்பு இருக்கு.
இது ஒருபுறமிருக்கட்டும்.
அதியமான் அவ்வைக்கு தந்த நெல்லிக்கனி பச்சை; நாரதர் கலகம் செய்த மாம்பழம் மஞ்சள்.
இது இப்படியிருக்க,
புல்வெளி பச்சை, குருதி சிகப்பு.
வானம் நீல வண்ணம்; விடிகாலை பொன்நிறம்; இரவு கருப்பு;
கோபத்தில் கண் சிவப்பாகும்.
நாணம் பயம் மகிழ்ச்சி  இவற்றுக்கு வேறு வேறு வண்ணம்  ... சரி சரி
*தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ ?*

426. இராமன் கேட்கவில்லையே,
விஸ்வாமித்ரர் தேடிச் சென்று கலை பல சொல்லித் தந்து ....
துரியோதனன் தேடவில்லை,
கர்ணன் வர, அர்ச்சுனனை வீழ்த்த அவனை தன் பக்கம் சேர்த்து ...
யசோதா கேட்டாளா என்ன?
கண்ணன் இரவோடு இரவாக தேடிச் சென்று ...
சுந்தரரோ கல்யாண கனவில்,
சிவன் அவனைத் தேடிச் சென்று, பித்தா என்றழைத்த போதும்...
பெரியாழ்வார் வேண்டவில்லை,
ரெங்கமன்னாரே தேடி வந்து ஆண்டாளை பெண் கேட்க...
ஜானுவோ ராமோ அறியவில்லை,
கேளாமலே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச 22 வருடம் ....
ஆம் நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் தானே ... எனக்கும் கூட
*கேளாமல் கையிலே வந்தாயே காதலே*


424. எல்லாரிடமும் நீ இப்படித்தான் ... பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
எனைச் சுற்றி சுற்றி வந்து, சிரித்து சிரித்துப் பேசி சிரிக்க வைத்தாய்.
கவிதை பல சொன்னாய். பதில் நான் சொல்ல கை தட்டி ரசித்தாய்.
உள்ளே எதையோ அசைத்து உனை பற்றி எண்ண வைத்து விட்டாய்.
நீ அருகிலில்லாத தருணத்தை நான் வெறுக்கும் அளவிற்கு ...
இப்படி நான் மாற அப்படி என்ன மாயம் செய்தாயடா, சிநேகிதா !
காணுமெல்லாவற்றிலும் உனைத் தொடர்புப் படுத்திப் பார்க்கிறேன்.
செல்லுமிடமெங்கும் உனை பற்றி பேசி பரவசித்து எனை மறக்கிறேன்
உன் விரல் பிடித்து ... ம்ம்ம்
முடிவெடுத்து விட்டேன், இனி பின்வாங்க மாட்டேன்.
உன் நிழலாய்த் தொடர்வேன்
*எங்கெங்கு நீ சென்ற போதும் ...*

423. இராவணன் தன் தவறை திருத்திக் கொள்ளாததால் தம்பி விபீஷணன் இடம் மாறினான்.
அரக்கு மாளிகை துரியோதனன் சூழ்ச்சியால் தீ வைக்கப்பட பாண்டவர் இடம் மாறினர்.
ஜராசந்தனோடு மல்போர் புரிந்து இரண்டாய்க் கிழித்து தலை கால் இடம் மாற்றி எறிந்தான் வீமன்.
வந்த காரியம் மறந்து சனாவின் கனவில்  கவிதை படித்தான் கவனம் இடம் மாறிய சிட்டி.
உடம்பு சரியில்லாது சில நாட்கள் கழித்து பள்ளி வந்த ஜானு, ராமைப் பார்த்துப் புன்னகைக்க
*இதயம் இடம் மாறியதே*

No comments:

Post a Comment