Wednesday, June 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 55

414. வெயில் மழை காடு மேடு பாராது இராமன் நாடு கடந்து போரிடக் காரணம் சீதை மேலிருந்தக் காதல்.
பீஷ்மர் துரோணர் கர்ணனை பாண்டவர் அழிக்கக் காரணம் பாஞ்சாலி மேலிருந்தக் காதலே.
ஏழை சுதாமா நண்பனை தேடிச் சென்றதற்கு காரணம் மனைவி பிள்ளையர் மேலிருந்தக் காதலே.
பாலகன் மணிகண்டன் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டுவரக் காரணம் தாய் மேலிருந்தக் காதலே.
வேடனாய் வந்து  கிழவனாய் மாறி யானை காட்டி மிரட்டி ... காரணம் வள்ளியின் மேலிருந்தக் காதலே.
தீக்ஷிதர்களிடம் வாதிட்டு திருமறை ஏடுகளை ராஜராஜன் கைபற்றக் காரணம் தமிழ் மீதிருந்தக் காதலே.
அப்பூதியடிகள் தன் சேவைகளுக்கு அப்பரடிகளின் பெயரிடக் காரணம் அவர் மேலிருந்தக் காதலே.
நான் தொடர்ந்து எழுதுவதற்கும் எழுதாத அன்று 'என்னாச்சி ?' என்று நீ கேட்பதற்கும் காரணம் *காதலே ... காதலே*

413. என் உயிர்த்தோழி உறங்குகிறாள்.
சாகசங்கள் பல புரிய வல்ல என் சகி சயனித்திருக்கிறாள்.
தன் தினக் கவலைகளை தூர வைத்து விட்டுத் துயில்கிறாள்.
நெஞ்சை அழுத்தும் சோகங்களை மறந்து நித்திரையிலிருக்கிறாள்.
யசோதையின் மடியில் கண்ணன் போல் கோதை என் மடியில் நிம்மதியாய்க் கண்ணயர்கிறாள்.
முல்லை நீ தொல்லை தராது தூர நின்று நாசி தீண்டு.
பால் நிலவே நீ மேகத்தின் பின் நின்று வெளிச்சம் குறைத்து ஒளிர்.
இடி மின்னல் இரண்டும் இந்தப் பக்கம் வராதிருக்க உத்தரவு.
இன்றைய பொன்மாலைப் பொழுது கேட்டபடியே தொடர்ந்து உறங்கு.
*தென்றலே ... தென்றலே ...*
*மெல்ல நீ வீசு*

412. லக்குமணுக்கு இராவணனின் சேதி 'நல்லதை உடனேயும், கெட்டதை காலம் தாழ்த்தியும் செய்யணும்'.
கிருஷ்ணன் மந்திரி உத்தவருக்கு சொன்ன சேதி உத்தவ கீதையாம்.
அரிமர்த பாண்டியன் வாதவூரார்க்கு குதிரைகளோடு விரைந்து வரணும் என்று சேதி அனுப்பினான்.
சிவன் பார்வதிக்கு சொன்னதில் முதலான சேதி உண்மை சத்தியம் காக்கப்பட வேண்டும் என்பதே.
பீஷ்மர் தருமருக்கு சொன்ன சேதி 'நல்லதும் கெட்டதும் அவரவர் சிந்தையில் இருந்து தோன்றுவதே'.
ஆதிசங்கரின் சேதி 'பரம்பொருளே மெய், பணம் பொருள் எல்லாம் பொய், மூடனே' என்பதாம்.
இத்தனை நெருங்கி நாம் பழகி, நீ மட்டும் ஏனடி ... சொல்லடி
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி...*

411. சீதையைத் தேடுவதற்கு கார்காலம் முடியக் காத்திருந்தான் காகுந்தன்.
வாலி மாயாவி சண்டை முடியும் வரை காத்திருந்தான் சுக்ரீவன்.
'இன்னும் ஒரு திங்கள் மட்டும் வரை காத்திருப்பேன்' என்று சீதை சேதி சொல்லியனுப்பினாள் அனுமனிடம்
8 வது பிள்ளை அவதரிக்கும் காலம் வர காத்திருந்தான் கண்ணன்.
வீரபாகு தூது சென்று விவரமறியும் வரை காத்திருந்தான் வடிவேலன்.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.
2 நாளோ 5 நாளோ சம்மதம் கிட்டும் வரை காத்திருந்தான் அமுதன்.
இதோ இங்கே *காதலெனும் தேர்வெழுதி காத்திருக்கும் மாணவன் நான்*


410. சீதையை சந்தித்த பின், தீவை நாசம் செய்த அனுமனை கட்டியது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரம்.
ஹிரண்யனைக் கொன்ற நரசிம்மம் கோபம் அடங்கி கட்டுப்பட்டது் ப்ரகலாதன் அன்பில்.
பாகிரதன் வேண்ட, கங்கையின் காட்டு வெள்ளத்தை கட்டுக்குள் வைத்தது சிவனின் ஜடா முடி.
தன் இன்னொரு கண்ணையும் பிடுங்க முயன்றவனை தடுத்தது 'கண்ணப்ப நில்' எனும் ஒலி.
புயலெனப் புறப்பட்ட ப்ரசன்னாவை போக விடாது தடுத்தது பைரவி கட்டிய சிறு கயிறு^.
நானெங்கும் நகர முடியாது நீ எனைக் கட்டி இழுத்து வைத்திருப்பது,
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*

^ அபூர்வ ராகங்கள்

409. அரியாசன் என்றார்கள், அமைதி காத்தேன், ஆடவில்லை.
அன்றிரவே ஆரண்யம் என்றார்கள், அலட்டிக்கவில்லை.
அப்படியா சரி என்று சொல்லி விட்டு கிளம்பி வந்து விட்டேனன்றோ.
அடக்கடவுளே, இப்படியாகிவிட்டதே என் செய்வேன்?
என் பெண்மான் ஒரு பொன் மான் கேட்டாள், அது ஒரு பிழையா?
மாயமான் பின் ஓடியது தவறோ?
இப்போது என் மட^மானை இழந்துத் தவிக்கிறேனே, தகுமா?
எங்கு சென்றாள்?யார் வேலை இது?
விதியோ இல்லை சதியோ?
நடந்தது என்ன?அறிந்தவர் உண்டா?
அடி சீதே, என் உயிரே,
*காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே?*


408. மூன்றாவது முறையாய் இன்று சந்தித்தேன், பார்க்கையிலேயே புரிகிறது, அவள் தேன் தேன்.
மெல்லிய தேகம், மல்லிப்பூ வாசம், ஒரு சில அடி தூரம் வரை வீசும்.
பார்வையில் கனிவு, பேச்சில் நடையில் பணிவு;
தள்ளி நின்று யானையை பார்க்கும் துணிவு, கிட்ட நின்று சிலையை ரசிக்கும் அழகு;
ஒரு சிலையே சிலையை ரசிக்குதே!
எனக்குப் பிடித்திருக்கிறது, பழக மனம் விரும்புது.
எங்கிருக்கிறாள், யார் ஏதும் தெரியாது, காதல் என்ன காலம் நேரம் எல்லாம் பார்த்தா வருது.
ஒரு மின்னல் போல்... சடாரென்று என்னுள் புகுந்து, தன்னை நோக்கி என்னை இழுத்து....
இப்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவள் ஞாபகம்.
எங்கு நோக்கினும் அவள் திருமுகம்
அயராதே கண் முன் சொப்பனம்
தள்ளிப் போய் விட்டது தூக்கம்
*விழிகளின் அருகினில் வானம்*

No comments:

Post a Comment