Wednesday, June 12, 2019

பொன்மாலைப் பொழுதில் 56

421. மகிழ்ச்சியாக இருக்கிறது.
நெஞ்சினுள் ஒரு புத்துணர்ச்சி புதிதாய்ப் புகுந்திருப்பது புரிகிறது.
காணும் அனைத்திலும் ஒரு ஈர்ப்பு.
கவிதை சுரக்கிறது; பார்த்தாலே பரவசம், பாராதிருந்தால் நானில்லை என் வசம்.
அகத்தில் ஆயிரம் மாற்றங்கள்
செய்யும் அனைத்திலும் புதுமைகள்
மனதிலுன்னோடு மல்லாடுகிறேன்.
என்னுள் நான்  அலவாடுகிறேன்.
அடிக்கடி உன் அருகாமையை அவதானிக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று சொல்ல வேண்டுமா என்ன?
உன்னாலே ஒரு புது மனிதனாய் உருவாகியிருக்கிறேன்.
*நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்*


420. கணவனுக்கு கண் தெரியாததால் தன்  கண்ணையும் துணி கொண்டு மூடிக் கொண்டாள் காந்தாரி.
தவ வேடத்திலிருந்த வியாசரின் கோர உருவம் காண முடியாது கண் மூடிக் கொண்டாள் அம்பிகை.
ஹஸ்தினாபுரத்து இளவரசர்கள் துரோணரிடம் பணிவாய் குனிந்து வாய் மூடிப் பாடம் கற்றனர்.
'மண் தின்றாயா?' என்று அன்னை வினவ 'திங்கலை' என்று வாய் மூடி பொய் சொன்னான் கண்ணன்.
பீஷ்மரின் நல்லறிவுரை ஏதும் கேட்கக்கூடாதென காதை இறுக்க மூடிக் கொண்டான் துரியோதனன்.
எந்த பாரபட்சமும் பாராது தீர்ப்பு சொல்வதற்காக நீதி தேவியின் கண்கள் எப்போதும் மூடியிருக்கும்.
தீயது பார்க்க கேட்க பேசக் கூடாதென காந்தியின் குரங்குகள் கண் காது வாய் மூடிக் கொண்டன.
இதெல்லாம் சரி, போதும் நிப்பாட்டு.
நீ மறைந்தே நிற்க கவிதை சுரக்கும் வேகம் மட்டுப்படுதே, எனவே
*முகத்தை எப்போதும் மூடி வைக்காதே*

419. ஒரு நாள் என்றால் பகல், இரவு என்று இரண்டு பாதி உண்டு;
மரம் எனில் வெளியே தெரியும் கிளை உள்ளே இருக்கும் வேர்.
இயற்கையிலேயே இப்படி இணைந்து அமைந்திருக்கும்.
சில விடயங்கள் சில சமயம் மாறிவிடும்.
எவ்வளவு பெரிய சிவபக்தன், மாறி இழிவான செயல் செய்தானே.
ஒன்றாய் இருந்தவர்கள் இரண்டு அணியாய் மாறி எதிரியானரே.
இன்று இப்படி, நாளை எப்படியோ; எது என்னாகும் என்று யாரரிவர்.
நமக்குள் கூடத்தான், தாமரை இலை மேல் தண்ணீர் போலத்தான்.
சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.
புகைவண்டி ஒன்று தான், சேர முடியாத தண்டவாளம் இரண்டு.
அட, '96 கதையும் இது தானே.
நானாக நான், இங்கு தனியே என் வழியில் ஒரு மூலையில்
நீயாக *நீ, உன் வானம், உனக்கென ஒர் நிலவு*



418. ஒரு வழியாக தீபாவளி முடிந்தது.
எத்தனை வேலை எத்துனைப் பணி எல்லாம் சரிவர செய்து விட்டாய்.
முருக்கு வடை லட்டு அதிரசம் பால் பாயசம் அப்பப்பா எத்தனை வகை தின்பண்டம் செய்ய நீ தெரிந்து வைத்திருக்கிறாய்.
மிகவும் களைத்திருப்பாய், சரி ஓய்வெடுத்துக் கொள்.
இங்கு வந்து உட்கார், கால் பிடித்து விடுகிறேன்.
தலை, தோள் மெல்ல அமுக்கி, பாதம் மத்தியில் கொஞ்சம் அழுத்தம்
பின்னங்கழுத்தில் பிடித்து விட உடல் வலி பறந்தோடும்.
சித்த நேரம் உறங்குகிறாயா?
*மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா?*

417. சாபம் பெற்ற தசரதன் சிரித்தான், ராமன் பிறந்தான்.
ஜானகி காதலால் நாணத்தோடு சிரித்தாள், சிவதனுசு முறிந்தது.
துரியோதனன் தடுமாற பாஞ்சாலி சிரித்தாள், பாரதப் போர் மூண்டது.
இறக்குமுன் ஈந்து சிரித்தான் கர்ணன், முக்தி தந்தான் கண்ணன்.
'முத்தைத்தரு' முதலடி தந்த முருகன் சிரிக்க, திருப்புகழ் கிடைத்தது.
தூக்குமேடையில் பகத்சிங் சிரிக்க இந்தியாவிற்கு சுதந்திரம் கிட்டியது.
இங்கு ஒரே கோலாகலம், காரணம்
*நான் சிரித்தால் ... தீபாவளி*.

416. சிவதனுஷை நாணேற்ற மிதிலை நகரே பார்த்து வியந்தது போல
இலங்கை நகரின் அழகைப் பார்த்து அனுமன் வியந்தது போல
வேலோடு நிற்கும் பால முருகனைப் பார்த்து சூரன் வியந்தது போல
அட எனை விடு, நான் உன்னோடு கொஞ்சம் பழகியிருக்க;
உன் நடை உடை பாவனை எல்லாம் ஓரளவு அறிந்திருக்க ...
கருங்கூந்தல், பூ, காட்டன் புடவை, கையில் வளையல், காலில் கொலுசு ... ம்ம்ம்
கோவில் சிலையோ, தரையில் மிதக்கும் தேவதையோ என்றெல்லாம்
*ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா?*

415. தினம் தினம் எனைப் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறாய்.
கனவில் நான் செய்த குறும்புகளை கரம் மசாலா சேர்த்து கதைக்கிறாய்.
மறைத்து என் கைக்குள் எதையோ திணித்து தின்னச் சொல்கிறாய்.
'நேத்து வாங்கிய நைல் பாலிஷ்'
கண்ணருகே விரல் நீட்டுகிறாய்.
'அது?' என்று கேட்டால் 'எது?' என்று முதலில் முழித்து, பின் 'எருமை லூசு' என்று திட்டுகிறாய்.
இடுப்பில் கிள்ளி 'ஆம்' என்று காதினுள் பேசி முத்தம் தருகிறாய்.
வேண்டாம் என்று சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாது,
என்னை அரைகுறை ஆடையோடு நிற்க வைத்து விட்டு ... ம்ம்ம்
*இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் ... அன்பே*

No comments:

Post a Comment