Tuesday, May 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 54

407. காலை மாலை எல்லா நேரமும் உன் ஞாபகம் வருது
நெஞ்சில் கவிதை வரிகள் அருவி போல் சுழலுது
உனை என்று காண முடியுமென்று மனம் தவிக்குது
உன்னிடம் என்னென்ன பேசலாம் என்ற யோசனை உதிக்குது
உன் நடை உடை பாவனை மீண்டும் பார்த்து ரசிக்க ஆவல் எழுது
நல்ல சகுனம் பல நெஞ்சில் மின்னலாய்த் தோன்றுது
'சுபம் சுபம் சுபம்' என்ற சத்தம் எங்கிருந்தோ கேட்குது
உள்ளத்தில் உற்சாகம் பொங்குது.
இதோ இதோ *இளங்காத்து வீசுது*


406. மிதிலையில், அண்ணலும் நோக்க அவளும் நோக்க, காதல் பூத்தது.
தந்தை கதை சொல்ல கண்ணன் மேல் ஆண்டாளுக்கு காதல் பூத்தது.
அன்னப் பறவையின் தூதில் நளன் தமயந்தி இடையே காதல் பூத்தது.
இடும்பனை வீழ்த்த தங்கை இடும்- பிக்கு பீமன் மேல் காதல் பூத்தது.
அகலிகையின் அழகை நாரதர் கூற கௌதமர் மனதுள் காதல் பூத்தது.
உன் அன்புப் பார்வையா, பேசும் பழகும்  விதமா, அக்கறையா,
எதுவோ ஆனால் என்னுள் இதோ ...
காதல் *அழகாய்ப் பூக்குதே*


405. கைகேயி வரம் கேட்க தசரதனுக்கு வந்தது துக்க மயக்கம்.
இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லக்குமனுக்கு மாய மயக்கம்.
சத்யபாமா போரிட நரகாசுரன் முன் கண்ணன் கொண்டது பொய் மயக்கம்.
யக்ஷனின் குரலை நிராகரித்த பாண்டவர்க்கு கர்வ மயக்கம்.
பெரிய யானை அருகில் வந்துப் பிளிர வள்ளிக்கு பய மயக்கம்.
ஜானு ராம் நெஞ்சில் கை வைத்துப் பார்த்த போது எந்த மயக்கமோ,
உன்னைப் பார்க்கையிலெல்லாம் என்னுள் *காதல் மயக்கம்*

404. வேர்வை வழிவதெல்லாம்
   தென்றல் வீசும் வரை தான்
பசி மயக்கம்
   உணவு கிட்டும் வரை தான்
கனவு வருவதெல்லாம்
   உறக்கம் கலையும் வரை தான்
கற்பனை என்பதெல்லாம்
  காட்சி தெரியும் வரை தான்
துன்பம் துயரம் எல்லாம்
   துணைக்கு ஆளில்லா வரை தான்
நிலவின் ஒளி மிளிர்வதெல்லாம்
   *புத்தம் புது காலை* வரை தான்

403. அமிர்தாஞ்சன் கழுத்துப் பக்கம் தடவுகையில் உறுமி மிரட்டுவது அழகு.
நான் பார்ப்பதைப் பார்த்து இங்கு அங்கு இழுத்து விட்டுக் கொள்வது அழகு.
என் தட்டிலிருந்து எடுத்துத் தின்று பின் ஒன்றும் தெரியாதது போல் முழிப்பது அழகு.
யாரும் நமை பார்க்காப்பொழுது உதட்டை ஈரமாக்கிக் கண்ணடிப்பது, அழகு.
நேற்று அந்த காங்ரா சோளி முடிச்சி போட்டு விடும் போது தான் பார்த் ... ஐயோ நீ செம்ம செம்ம அழகு.
மொத்தத்தில் நீ செய்யும் எதுவும், உனைச் சார்ந்ததெல்லாம் *அழகே ... அழகு*


402. அடேய் ... லூசுப்பயலே !
என்ன கேட்கலாம் எதைக் கேட்கக் கூடாதுன்னு வரைமுறை இல்லை,
'அவளோடது வாடாமல்லி கலர்,
உன்னோடது?' இது ஒரு கேள்வியா?
அவள் தாண்டியா ஆடுறா, உனக்கு தெரியாதான்னு கேட்டா ... எருமை.
எனக்கு பரதநாட்டியம் தெரியும், அவளுக்கு ? சொல்லு பக்கி
இந்த வயசுல ரட்டை சடை யாரும் போடமாட்டாங்கடா, ஏன்னு கேட்டா என்ன சொல்றது பொறம்போக்கு.
காஞ்சிபுரத்தில இருந்தா பட்டு தான் கட்டணுமா? மதுரை ல இருக்கச்ச சுங்குடி வாங்கலேன்னா தப்பா ?
கேக்குறா பாரு எசகு பிசகா பேக்கு.
நீ வாயத் தொரந்தாலே எதாச்சும் விவகாரமாத்தான் கேட்பேன்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சி போச்சி.
தயாராத்தான் இருக்கேன், இன்னும் ஒரு கேள்வி.... மவனே மீடூ ல உன் பேர சேர்த்து விடுறேன்,
கேளுடா ... கேளு நீ கேன ...
*கேள்வியின் நாயகனே*


401. அதர்மம் தலைதூக்கும் போதெலாம் தர்மம் அதை அழித்து ஜெயிக்கும்.
பின் நன்றி தெரிவிக்கும்.
*
விபீஷணனுக்கு ரங்க விமானத்தை அளித்து நன்றி் சொன்னான் ராமன்
கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி நன்றியுரைத்தான் கண்ணன்
பரவையாரிடம் சுந்தரருக்காக தூது சென்று நன்றி காட்டினான் சிவன்.
சபரிமலையில் கோவில் கட்டி தன் நன்றி சொன்னான் பந்தள ராஜன்.
கம்பன் 1000 பாடலுக்கொருமுறை சடகோபருக்கு நன்றி பாடினான்.
சேவை எதுவோ, தாஜ்மஹால் கட்டி நன்றி தெரிவித்தான் ஷாஜஹான்.
*
நான் எப்படி யாரைச் சொல்ல; பொதுவாய் எல்லாருக்கும்,
முக்கியமாய் ... அன்பே ரகசியமாய்
*நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி*


400. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
அதுவே இன்று எழுதியிருந்தால், தடை செய்யப்பட்டிருக்கும்.
பஜ கோவிந்தம் - ஆதி சங்கரர்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

No comments:

Post a Comment