Tuesday, February 26, 2019

பொன்மாலைப் பொழுதில் 49

372. வேர் இல்லாது மரம் நில்லாது
விதை இல்லாது செடி முளைக்காது
மலரில் மணம் மறைந்திருக்கும்
கடல் எனில் அலை நுரை உண்டு
சுருக்கமாக எல்லாவற்றுக்கும் அடிப்படையில் ஏதோ ஒன்றுண்டு.
கவிதைகளும் கற்பனைகளும் கூட இதற்கு விதிவிலக்கன்று.
அட தினம் வரும் ஒரு கவிதை, இதன் பின்னும் ஒரு காதல் கதை.
காதல் என்று வந்த பின்பு காதலி என்று ஒருத்தி இல்லாதெப்படி ?
யாரென்று சொன்னதில்லை தான்,
ஆனால் இல்லையென்று இதுவரை இயம்பியதில்லை தானே.
ஆம், *எனக்கொரு காதலி இருக்கின்றாள்*

371. இப்போ எதுக்கிவ்ளோ குதிக்குறே?
காஃபி சூட இல்லே அவ்ளோதானே, சூடாக்கிக் குடி; சிம்புள்.
இன்னும் எவ்ளோ நாள் இந்தக் கெட்ட பழக்கம்,
பொண்டாட்டி காஃபி தரணும் சோறு பொங்கணும், ஆணாதிக்க புல்ஷிட்.
உன்னல்லா ... எவ்ளோ பாரதி வந்தாலும் திருத்த முடியாது,
பெண்ணடிமைக்கு விடுதலை கிடைக்காது.
தக்காளி மிதந்தா ரசம் இல்லியா சாம்பார், போவியா,
உப்பு இல்லே காரம் பத்தலே, நைநைநை ன்னு;
ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வரணுமா, சரி வழில எவ்ளோ கடை இருக்கு.
நீயும் கொட்டிக்கிட்டு எனக்கும் ஏதாவது வாங்கிட்டு ...
பொம்பளைன்னு ஒருத்தி வீட்ல இருந்தா நாலு எடத்துல தலை முடி விழத்தான் செய்யும்; வேலைக்காரி வர்லே, என்ன செய்ய;
இவ்ளோ சொல்றியே, ஒருநாள், ஜஸ்ட் ஒருநாள்,
சீரியல் நடுப்பற டிஸ்டர்ப் செய்யாத
*கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா?*

370. கிறுக்குப்பய, ரவுடியாத் தெரியறா, பாசமாப் பழகுறா ன்னு பார்த்தா ...
தனி ஆளா நின்னு திருவிழா தேரை ஓட வச்சதுக்கு பாராட்னா ...
ரஜினி போல தலை முடியை ஸ்டைல் செய்வதும் கண்ணாடியை சுத்தி சுத்தி மாட்டுவதும்;
புகை விடாதவனா இருக்கணும்.
2 முறுக்கு அதிரசம் தந்ததுக்கே 'தேவாமிர்தம்'ங்கானே, லூசுப்பய.
கொல்லையில குளிக்கையில அவ நெனப்பா ... ஐய நாந்தே லூசோ ?
இருந்தாலும் ... இப்டியா சடங்கான பொண்ணு கிட்ட வந்து 'அம்சமா இருக்கே' ன்னு ....
*அய்யய்யோ என் உசுருக்குள்ள தீயை வச்சா அய்யய்யோ*


369. ஆரம்பத்தில் அசமந்தன், கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லித் தந்தாய்.
விழி பேசும் வார்த்தைகளையும் சிரிப்பின் அர்த்தத்தையும் புரிய வைத்தாய்.
அழகாய் உடுத்தி அளவாய் உண்டு உன்னிடம் கற்றுக் கொண்டேன்.
வீணை மீட்டி விளையாடுகிறாய், உன் விரல் தொட்டு வணங்க வெட்கிச் சிவக்கிறாய்.
கவிதையென்று என்ன எழுதித் தந்தாலும் படித்துப் பாராட்டுகிறாய்.
கை கோர்த்து மழையில் நனைந்து, மடியில் படுத்து நிலவை ரசித்து;
'எனக்கா, எனக்கே எனக்கா?' என்று எண்ணி மகிழ்ந்துப் போகிறேன், கனவுலகில் திரிகிறேன்.
மேகத்தினிடையில் மிதக்கிறேன், சிறகின்றி ... மெல்ல மெல்ல
காதல் என்னை உந்தித் தள்ள
*நான் போகிறேன் மேலே மேலே ...*

368. நினைத்துப் பார்க்கிறேன்.
ஞாபகம் வர ரசிக்கிறேன்.
நீல உருளை ஏதும் சுழலாது புகை சூழாது பின்நோக்கி நகர்கிறேன்.
அன்றொருநாள் ...
கன்னி, எனை நோக்கி வந்தனை.
காற்றில் பறக்கும் கருங்கூந்தல்,
மை தடவிய கரு விழி
விரலி பூசிய வதனம்
விரல்களில் மருதாணிச் சிவப்பு
மஞ்சள் பாவாடை, பச்சை தாவணி,
காதில் நீல ஜிமிக்கி, முத்து மாலை
மூக்குத்தி மின்னும் மரகதப் பச்சை
சிகப்பு சாயம் பூசிய உதடு, கையில் தங்க கிண்ணம் மஞ்சள் வண்ணம்.
உள்ளே வெள்ளை கொலுகட்டை,
கோவைப்பழ உதடு பாதி சுவைத்து ஊட்டிவிடுகிறாய் எனக்கு.
நீளும் என் கை விரல், சட்டென்று இழுத்து மறையும் சந்தன இடை.
இன்னும் ... இன்னும் உனை எண்ண எண்ண, ஆசை பொங்க
*நெஞ்சமெலாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே*


367. உசந்தது எது என்பதில் வேறுபடும் ஒவ்வொருவரின் கருத்தும்.
தாய்க்கு பிள்ளைகளின் நலத்தை விட
உசந்தது எதுவுமில்லை.
பசித்தவனுக்கு ஒரு கைப்பிடி உணவு,
வேறேதும் உசந்ததில்லை.
உழவனுக்கு வயல் விளைச்சலை விட
உயர்வானது வேறு இல்லை.
பேராசைக்காரனுக்கு பணம் பொன் பொருள் தவிர
பிற ஏதும் பிரதானமில்லை.
காதலனுக்கு தன் காதலியின் ஒரு பார்வை, சின்னச் சிரிப்பு, முத்தம்
வேறேதும் உசந்ததில்லை.
எனக்கு, ஆருயிரே *உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லே*


366. 'கண்டேன் சீதையை !' என்று ஓடி வந்துச் சொன்னது அனுமன்.
'எடுக்கவோ, கோர்க்கவோ ?' என்று சொன்னது துரியோதனன்.
'இன்னொரு கண் இருக்க கவலை எதற்கு?' சொன்னது கண்ணப்பன்.
மண் திங்கவில்லை என்று பொய் சொன்னது மாயக் கண்ணன்.
'பித்தா' என்றே தொடங்கிப் பாட சுந்தரர்க்குச் சொன்னது சிவன்.
தாகம் அடங்க மோகம் தொடங்க ... வள்ளியிடம் சொன்னது வடிவேலன்
நாலைந்து நாட்கள் கவிதை வரலை அதற்காக இப்படியா சொல்வது ?
சந்தேகமாய் இருக்கு எனக்கு,
*சொன்னது நீ தானா?*

No comments:

Post a Comment