Monday, March 18, 2019

பொன்மாலைப் பொழுதில் 50

379. பிடித்திருக்கப் பழகினோம்.
விரும்பியே இணைந்திருந்தோம்.
சிரித்துப் பேசுகையில் கிடைக்கும் பரவசம்,
கை பற்றி நடக்கையில் பரவும் மின்சாரம்,
காணாப் பொழுதினில் உள்ளே எழும் ஓலம் விரும்பியே அனுபவித்தோம்.
ஒருநாள் ... தவறு என்னுடையதே.
புரியாது உளறியது உண்மையே.
வேலை அதிகம், இரவு நேரம்,
வெளியே மழை, தனியே பயம்.
வீடு வரை துணையாய் வந்தாய்
விரல் பற்றிக் கவிதை சொன்னாய்.
பாராட்டி ரசிக்க, 'பரிசு?' என்றாய்.
உள்ளே வந்தால் தேநீர் என்றேன்.
தயங்கியே நீ வெளியில் நின்றாய்.
கையில் இருந்த சாவியைக் காட்ட
ஓகோவென்று நீ விசிலடிக்க
சாதாரணமாகவே வெடவெட என்று சுற்றித் திரிபவன்
*யாருமில்லாத் தனியரங்கில் ...*


378. கர்ணன் எப்பவுமே துரோகத்துக்கு துணை போகணுமா என்ன?
சண்டைன்னா முறைச்சுக்கணும் அடிச்சுக்கணும்னு அவசியமில்லை.
ஆள் சண்டியரானாலும் சத்தியம் தர்மம் தவறாம இருப்பது சாத்தியம்.
சகுனியோ கூனியோ சமரசமாய் வாழ வழி சொல்லலாம்.
அதனால, சொல்வது என்னன்னா ...
ரொம்ப வருஷமாச்சி, பார்க்கலை பேச்சு வார்த்தை இல்லை.
அதற்காக, மறந்துடணும்னு அவசியமில்லை.
அட ___ நாதரே, இந்த உலகத்தின் தோழரே, மறவாதீரும், இந்தப் பொட்டை சிறுக்கி *நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*


377. கையில் வில் இல்லை, எனவே நீ இராமனோ அர்ச்சுனனோ  இல்லை.
ஹிஹி, என்னதான் ஜாடை நிறைய ஒத்துப்போனாலும், வால் இல்லையே, எனவே நீ ___ இல்லை.
வள்ளி தெய்வானை பற்றித் தெரியவில்லை கையில் வேல் இல்லை, எனவே முருகன் இல்லை.
வர்ணமிரைத்து வரைந்திடினும் அவ்வளவு தத்ருபமில்லை, எனவே நீ ராஜா ரவிவர்மா இல்லை.
வெட்டி அதிகாரம் மட்டும் தூள் பறக்கிறது. கொஞ்சம் கருப்பு தான் என்றாலும் கையில் ...
ஒருவேளை... *அன்பே நீ என்ன அந்தக் கண்ணனோ மன்னனோ ?*

376. வெளிச்சம் நுழைய முயன்றுத் தோற்கும் அடர்ந்த ஒரு வனம்.
மனிதக் கால்கள் இதுவரை படாது, இப்புவியில் புனிதமான ஒரு இடம்.
இது பறவை விலங்குகளுக்கு இறைவன் தந்த வரம்.
உள்ளே நாம் நுழைந்துவிட்டோம் அன்றோ, இனி அவைகள் பாவம்.
கிடக்கட்டும், கண் முன் தெரியுதா, அற்புதமான ஒரு அருவி.
இங்குமங்கும் சிறகடித்துப் பறக்கும் பலவிதமானப் பறவைகளின் ஒலி.
சுழன்றடிக்கும் சுத்தமான காற்று,
மனதைக் கிறங்கடிக்கும் பூ வாசம்
இதமான தட்பவெட்ப நிலை.
இயற்கையோடு இணைந்து வாழ, ஏகப்பட்ட சுகமுண்டு;
நகர வாழ்வு நரக வாழ்வானதற்கு நம் பங்கு நிறைய உண்டு.
பேராசைக்கு விலையுண்டு என்று சொல்லுதோ, அருகில் மரத்தில்
*நீலக்குயில்கள் (இ)ரண்டு*


375. என்ன இது, எதற்காக, ஏன் இப்படி ?
பிடித்திருக்கு என்று மட்டும் தானே சொன்னான், அதற்கு?
பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் தெரியணுமா என்ன?
இத்தனை குழப்பம் இதுவரை என்னுள்ளே இருந்ததில்லையே;
ஐயகோ, இன்றென்ன வியாழனா திங்களா, I mean வெள்ளியா?
வேதியல் தேர்வு இன்றா நாளையா?
H2O வின் ஃபார்முலா என்ன?
காப்பர் சல்ஃபேட் கருப்பா சிவப்பா?
பல் தேய்த்தேனா? டம்ளர் இருக்கே, அப்போ காஃபி ஆச்சா, பசிக்குதே;
இந்த ஆடை இன்று அணிந்ததா ? நேற்று என்ன அணிந்தேன் ?
கண்ணாடி பார்க்க பயமாயிருக்கு; பின்னாடி அவனுருவம் ஒருவேளை தெரிந்திடுமோன்னு பதட்டமிருக்கு;
இது ஆசையா ஏக்கமா தேடலா? இல்லை எதிர்பார்ப்போ?
அந்தந்த சமயத்தில் அந்தந்த எண்ணம் தானே வந்து விடுகிறதே.
ஓ அப்போ இது..இதுதான்..அதுவா?
*என்ன இது ... என்ன இது என்னைக் கொல்வது?*

374. முதல் நாள் கல்லூரியில் எனைப் பார்த்ததும் மறைந்து கொண்டாய்.
மெல்ல மெல்ல பயந்து பயந்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசினாய்.
அன்பு அறிவு அடக்கம் நளினம் எல்லாம் இணைந்த அதிசயமாம் நீ.
உன் அடாவடி ரகளை அத்துமீறல் எல்லாம் என்னிடம் மட்டும் தானோ?
நான் வாங்கி வைத்த உணவை கேட்காது உண்பதும்,
டீ சுவைத்து விட்டு முகம் சுளிப்பதும் ...
சத்தமின்றி என் அறையினுள் நுழைந்து அரட்டை அடித்து உறக்கம் கலைத்து ...
பேனா பென்சிலில் ஆரம்பித்து ஷூ
ஜீன்ஸ் கேட்பதும் அடுத்து என்ன
கேட்பாயோ என நான் விழிப்பதும்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது,
மெல்ல மெல்ல நீ என்னை, என் உடைமைகள் எல்லாம்
*ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்*

373. குந்தி மந்திரம் சொல்லி அழைக்க உடன் வந்தவன் பகலவன்.
அபயமென்று பாஞ்சாலி கை கூப்பி  அழைக்க, வந்தானே பரந்தாமன்.
பசியென்று பாலகன் அழ பால் தர வந்தாளே பார்வதி.
ஆறுமுகன் அண்ணா என்றழைக்க அக்கணமே வந்தான் ஆனைமுகன்.
நீ மட்டும் ... இத்தனை தாமதம் ...
இன்றுதானே வருவதாய்ச் செய்தி அனுப்பினாய், காத்திருக்கேன் வா.
அப்பம் அக்காரவடிசல் பருப்பு உசிலி தயார், ஆறிப்போகுமுன் வா.
உன்னோடு உறவாட உறங்காதுத் தவமிருக்கிறேன், வா.
இதோ ... இதோ ... காலடிச் சத்தம் ... நீ தான், இது நீ தான்
*வா வா வா ... கண்ணா வா*

No comments:

Post a Comment