Sunday, March 31, 2019

பொன்மாலைப் பொழுதில் 51

386. மறுபடி மறுபடி அதைப் பற்றியே சொல்ல, என்செய்ய உங்கள் சினம் கூடலாம்.
வாலிக்கு, அவன் முன் நிற்பவர் வீரத்தில் பாதி, அவன் வீரத்தில் கூடிடுமாம்.
சீதை மறுக்கும் போதெல்லாம் அரக்கனுக்கு அவள் மேல் ஆசை கூடியதாம்.
கயிறு எடுத்து உரலோடு கட்டக் கட்ட கண்ணனின் வயிறு அளவு கூடியது.
துணி எடுத்துச் சுற்ற சுற்ற வானரத்தின் வால் நீள அளவு கூடியது.
காதலில் நாம் கலந்த பிறகு,
உனக்கெப்படியோ தெரியவில்லை
*மாலையென் வேதனை கூட்டுதடி*

385. டேய் நண்பா, கொல்லாதேப்பா
எதற்கெடுத்தாலும் புராணம் பற்றிக் கதைக்கிறாயே,
கோசலராமனுக்கு கோதண்டம், பரசுராமன் கையில் கோடாரி,
பலராமன் கையில் வேறு பொருள்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
தரையில் ஓடும் எலி அண்ணனுக்கு
வானில் பறக்கும் மயில் தம்பிக்கு;
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
இரு வேறு லோக சண்டை, க்ருதா யுகம் (அமிர்தம் கடைதல்).
பூலோகத்தில் இரு வேறு நாட்டு
சண்டை, த்ரேதா யுகம் (ராமாயண்)
ஒரே நாட்டு மக்களிடையே சண்டை, கலியுகம் (பாரதம்).
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
முதலிலெல்லாம் ஆணோடு பேசார், அதன்பின் கதவு மறைவிலிருந்து, அப்பறம் கால் மேல் கால் போட்டு;
இப்போதோ பேசவே பயப்படும் ... ஆடவர்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
நீ மட்டும் ... இன்னும் மாறாது,போன ஜென்மத்து நினைவலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறாயே.
தம்பி, என்னை இந்த க்ருப்பை விட்டு ஓட வைக்காதே.
பழைய பாட்டே போட்டு கொல்லாதே
போதும் *புதிய பாடல் ~பாடு~* போடு.


384. பாற்கடலில் பாம்பு மெத்தையில்
பள்ளி கொள்பவன்;
பாவங்கள் பரவும் பொழுதெல்லாம்
பாருலகைப் பாதுகாக்கப்
பிறவியெடுப்பவன்;
*
அயோத்தியில் அவதரித்து
அரசகுமாரனாய் வளர்ந்து
ஆரண்யம் புகுந்து
அத்திரம் தொடுத்து
அரக்கர்களை அழித்து
அனைத்தும் அழகுற
ஆண்ட ஆண்டவன்.
*
மயிற்பீலி சூடி
மாடு மேய்த்து
மாயம்பல புரிந்து
மங்கையர் மனங்கவர்ந்து
மாமனையே கொன்று
மகாபாரதத்தில் தேரோட்டி
மாகீதை சொன்னவன்.
*
தானே தெய்வம் என்றவனைக் கொல்ல தூணை பிளந்து வந்தவன்
மூன்றடி மண் கேட்டு முக்தி தந்தவன்.
*
ஸ்ரீநிவாசனாய் கோவிந்தராஜனாய் நாராயணனாய் ராகவனாய்
கிருஷ்ணனாய் வெங்கடேசனாய்
கோபாலனாய் ஆராவமுதனாய்
பெயரெதுவான போதும் பொருள்
ஒன்றாய் விளங்கும் அந்தத்
*திருமால் பெருமைக்கு நிகரேது?*

383. ராமனின் பாதத்துகள் கல்லின் மேல் பட அகலிகை உருவானாள்.
காந்தாரியின் கரு பானைகளில் நிரப்பப்பட  கௌரவர் உருவானர்.
காக வடிவிலிருந்து கமண்டலத்தை கவிழ்க்க காவிரி உருவானது.
சிவனின் நெற்றிக் கனலிலிருந்து வடிவேலன் உருவானான்.
விந்தைகளே வரமான போது அதை வெல்ல நரசிம்மம் உருவானது.
அவள் ... பஞ்சு போன்று, இத்தனை மென்மையாய், ஒருவேளை ...
*வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?*


382. ச்சே, இப்படி ஒரு கேள்வி கேட்டு,
இதற்கு நான் என்ன சொல்வேன், எதைச் சொல்லி புரிய வைப்பேன்.
முழிக்கிறேன் தவிக்கிறேன் தத்தளிக்கிறேன் தடுமாறுகிறேன்;
இதுவரை என்னிடம் யார் யாரோ என்னென்னவோ கேட்க,
எதையோ எப்படியோ சொல்லி சமாளித்திருக்கிறேன்;
பணம் பாசம் கல்வி நட்பு போன்று பல தலைப்புகளில் பொய் பேசி,
ராமன் ஆடிய சூதாட்டம், தருமரின் சூழ்ச்சி, கர்ணனின் கஞ்சத்தனம் பற்றியெல்லாம் பலவாறு கதை அளந்து சமாளித்திருக்கிறேன்.
ஆனால் ... ஆனால் ... நீ இப்படி ஒரு கேள்வி கேட்டாயே, இதற்கென்ன சொல்ல, எப்படி விளக்க; புரியாது ...
ம்ம்ம் ... காதல் என்பது ...
*கண்மணியே, காதல் என்பது ...*


381. குரங்கு தானே, என்ன செய்து விட முடியும் என்று குறைத்து எண்ணி
     ராவணன் ஏமாந்தான்.
அழகு மோகம் மயக்க மணந்து பிள்ளையரை கங்கையில் இழந்து
     சந்தனு ஏமாந்தான்.
கர்ணன் இருக்க கவலை எதற்கு என்று எண்ணி பீஷ்மரை பகைத்து
     துரியோதனன் ஏமாந்தான்.
கண்ணன் தனை மறந்திருப்பான் என்று எண்ணி தயங்கியே வந்த
     சுதாமா ஏமாந்தான்.
தவ வேடம் தரித்தவன் தவறேதும் செய்யான் என்று நம்பி அழைத்து
     மெய்ப்பொருளான் ஏமாந்தான்.
வந்தது யாரென்று விளங்கிக் கொள்ளாது தந்ததையும் பார்க்காது
     பாண்டியன் ஏமாந்தான்.
இளம் கன்னியரை மலர் என்று எண்ணிக் கற்பனை செய்துப் பாடி
     *கம்பன் ஏமாந்தான்*.


380. பிடித்திருக்கிறது.
உன்னைப் பார்த்தாலே ஒரு பரவசம் குதூகலம் பற்றிக் கொள்கிறது.
*
தலை குளித்து, கூந்தலிலிருந்து நீர் முதுகுப்பக்கம் சொட்ட,
நெற்றியில் குங்குமம், சவ்வாது வீபுதி; கொல்லையில் பறித்த மல்லி தலையில்;
ஒற்றைக் கண்ணால் எனைப் பார்த்தபடி துளசி சுற்றி, தேவாரம் பிரபந்தம் பாடி, பாதி காஃபி தந்து மீதி நீ குடித்து தாவணியில் (உன்) வாய் துடைத்து சொருகிக் கொல்லும் நேர்த்தி;
கதை கவிதைகளில் நாட்டம், வீடு முழுதும் வண்ணக்கோலம்.
*
ம்ம்ம் ... மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது.
உன்னாலே உன்னோடே ~என்~ நம் வாழ்வு நலம்பெற வேண்டுமென்று ஆண்டவனை வேண்ட, அவ்வமயம்
*டிங்டாங் கோவில் மணி நான் கேட்டேன்*

No comments:

Post a Comment