Sunday, February 17, 2019

பொன்மாலைப் பொழுதில் 48

365. நீ என்ன செய்தாலும்  யாராவது ஏதாவது சொல்லத்தான் செய்வார்.
உன்னைப் பற்றி வாய்க்கு வந்தபடி உளராவிட்டால் ஊரார் உறங்கார்.
நின்றுகொண்டிருந்தால் 'கவுக்க தயாரா நிக்கா' என்பர்.
சும்மா அமர்ந்திருந்தாலோ 'சோம்பேறி' என்பர்.
ஓடி ஓடி உழைத்தால் 'பேராசை பிடித்தவன்' என்பர்.
தர்மம் செய்தாலோ 'காசு அருமை தெரியாத பைத்தியம்' என்பர்.
புகழுரைக்கு மயக்காதே, யாரும்
பழித்தால் கலங்காதே, உனக்கு உன்னைத் தெரியும், குழம்பாதே.
அறிவை வளர்த்துக் கொள்.
நல்லதோ கெட்டதோ நீ முடிவெடு;
இருக்கையில் ஆடாதே, இல்லாப்பொழுது அழாதே.
தீர்மானி திட்டமிடு செயல்படு
அடுத்தவர் சொல் மற, துற.
தருமி என்பார், கருமி என்பார், *ராஜா என்பார், மந்திரி என்பார்*


364. சிறையில் அவதரித்தவன்
எங்கள் சிரமங்கள் விலகத் துணையிருப்பவன்.
இருள் நிறத்தவன்,
இப்புவிக்கு அருள் ஒளி தரும் மனம் படைத்தவன்.
கோபியர் ஆடை கவர்ந்தது அன்று,
பாவியர் பாதம் பணிய பாவம் தீர்ப்பது இன்று.
வெண்ணையை மட்டுமா திருடினாய்
எங்கள் நெஞ்சையும் அல்லவா களவாடினாய்.
காலிங்க நடனம் ஆடினாய்,
ராதையோடு காதல் கூத்து நடத்தினாய்.
உன் குழலோசை மயக்க பால் சுரந்தது, மரம் வளர்ந்தது,
நதி நிறைந்து ஓட, கிளி பேச ஆட
*பூ மலர்ந்திட, நடமிடும் பொன்மயில்*


363. பட்டுப்புடவை,
தலையில் கொண்டை, சுற்றி மல்லி
குளத்தில் இறங்குகிறாய்
பின்னால் தயங்கி நிற்கிறேன்
என் கை பிடித்திழுத்து
நெஞ்சில் நெஞ்சால் முட்டி ...
அழகுடி நீ.
*
நாற்காலியில் அமர்ந்திருக்கிறாய்.
காலை மேலே வைத்து, இரு கையால் இருக்கிக்கொண்டு;
கருநீலப் புடவை
அதே நிற ரவிக்கை
சந்தன நிறமா, எலுமிச்சையா,
சின்னக் கீற்று போல் தெரியும் உன் சிற்றிடை; ஐயகோ ...  அழகுடி நீ.
*
துணி துவைக்கிறாய் நீ, அதை உலர வைத்து உதவுகிறேன் நான்.
தேநீர் நீ தயாரிக்க, சூடேற்ற, குடிக்க  அருகிலேயே உதவிக்கு நான்.
பாடல் நீ பாட, அடுத்த வார்த்தை ஞாபகப்படுத்த உதவி நான்.
ஆடை அணிகிறாய், அரை கண்ணால் ரசித்தபடி நான்;
வாவ் ...அழகுடி நீ.
*
~புகைவண்டிப் பயணம், இரவு நேரம்~
~மடியில் நீ, பறக்கும் தாவணி~
....
....
*அழகே ... அழகு ... தேவதை*


362. பார்த்தேன் ப்ரமித்தேன்
மெய் சிலிர்த்தேன், மயங்கினேன்
~பல~ சிலமுறை யோசித்தேன்
பிடித்திருக்க, பேசிப் பழகினேன்
சிரித்தேன், சிரிக்க ரசித்தேன்.
தனிமையில் பரிதவித்தேன்.
பார்க்காப் பொழுது பிதற்றினேன்.
இணைந்திருக்க எனை மறந்தேன்.
பிரியாதிருக்க வழி யோசித்தேன்.
வரம் யாசித்தேன்.
கவிதை எழுதினேன்
வாசித்துக் காட்டினேன்.
பாராட்ட மகிழ்ந்தேன்
நிறைய சிநேகித்தேன்,
நிழலாய்த் தொடர்ந்தேன்
அவள் இல்லாதிருக்க வெறுத்தேன்
துதித்தேன், துவள்ந்தேன்
அன்பை அனுபவித்தேன்,
பாச மழையில் நனைந்தேன்
பார்வை அமுதம் பருகினேன்
என்னை மறந்தேன்
கை தொட்டேன், முத்தமிட்டேன்
அணைத்துக் கொண்டேன்
புரிந்தது, அவள் *தீண்டத் தீண்டத் தித்திக்கும் தேன்*


361. காலையிலேயே இன்றொரு நல்ல நாள் என்பதை உணர்ந்தேன்.
என் கோரிக்கை நிறைவேறப் போவதைப் புரிந்து கொண்டேன்.
சாளரத்தில் இரு சிட்டுக் குருவிகள் கொஞ்சிக் குலாவக் கண்டேன்.
தோட்டத்தில் புதிதாய்ப் பூத்த பூக்களின் வாசத்தை நுகர்ந்தேன்.
சாலையில் நடக்கையில் எங்கோ நல்ல இசை ஒலிக்கக் கேட்டேன்.
மழலையரோடு மழலையாகி நீ சிரித்து மகிழ்வதை ரசித்தேன்
'எனக்கென பிறந்தவள்' பாடலைப் பாடலாமா என்று எண்ணினேன்
மிதந்து கொண்டே *நிலத்தில் நடக்கும் நிலவைக் கண்டேன்*.


360. எதற்கு நாம் அறிமுகமானோம்.
ஏன் நீ என்னோடு சிரித்துப் பேசிப் பழகினாய்.
சரி பிடித்திருக்கட்டும், அதை எதற்கு என்னிடம் உரைத்தாய்
ஆரம்பத்தில் முறைத்து விலகினாய் இப்போதெதற்குத் திரும்பி வந்தாய்.
என்ன செய்து என் கவனத்தை உன் பக்கம் திருப்பினாய்.
நான்கு நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.
முன்பெல்லாம் ஊண் உறக்கம் என்று நேரம் போக்குவேன்.
இப்போதோ ஊண் இறங்கவில்லை, உறக்கம் நெருங்கவில்லை.
ஒருநாள் ஓட்டுவதே இத்தனை கடினமாய் இருக்குதே
இன்னும் மூன்று நாள் ... அய்யகோ.
நடுநிசி, நான் மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருக்க,
வீட்டிலுல்லோர் உறங்கியாச்சி,
இருமி இருமி உருமும் பக்கத்து வீட்டுத் தாத்தா படுத்திருச்சி
*ஊரு சனம் ... தூங்கிருச்சி*


359. அழகில் தெய்வீகம்
பேச்சில் சாத்வீகம்
பார்வையில் கம்பீரம்
உள்ளத்திலெப்போதும் உற்சாகம்
உதட்டில் திருவாசகம்
மனதில் திருமந்திரம்
நடையே நாட்டியம்
பாட, தேவ கானம்
பெண்குலத்திற்கு நீ வெகுமானம்
உனக்காருமில்லை சரி சமானம்
நீ பார்த்தால் பொழியும் கார் மேகம்
பழகப் பழகப் புரியும் பிள்ளை மனம்
பாவையுனைச் சுற்றி பூ வாசம்
பளபளவென்று மின்னும், உன்
*ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்*

No comments:

Post a Comment