Monday, June 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 27

208. பெண் :
அன்பாய் அக்கறையோடு குடும்பம் காப்பவள்,
கலகம் செய்வோரைக் கண்டால் காளியாய் மாறத் தயங்காதவள்.

பயங்கொள்ளாள், பாசாங்கு இல்லாள். பக்தி நெறியில் தர்மவழியில் வந்தச் செல்வம் காத்து தனலக்ஷ்மியாகிறாள்.

பண்பானவள், பணிந்து நடப்பவள், அபயம் கேட்டால் ஆதரித்து ஆனந்தலக்ஷ்மி ஆகிறாள்.

நெஞ்சில் வீரமேற்றி சாதிக்கவைத்து வீரலக்ஷ்மியாகி வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலக்ஷ்மி ஆகிறாள்.

தான் கற்றதைக் கற்பித்துக் கலைவாணியாய்க் காட்சிதருகிறாள்.
அனைவர்க்கும் அருசுவை அன்னம் உண்ணத் தந்து அன்னபூரணியாய் அவதாரமெடுக்கிறாள்.

வாழ்க்கையை வாசம் மிக்கப் பூச்சோலை ஆக்குவாள்.
சாதாரண ஆளையும் சாதனையாளனாக்கி சரித்திரம் படைப்பாள்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிறாள்.
காற்றாய் மலையாய் கடலாய் நதியாய் எல்லாமுமாய் எங்கும் நிறைகிறாள்.

அப்பெண்மையைப் போற்றுவோம்.
பாரினில் புகழ் பெறுவோம்.



207. விடிகாலையில் விடியும் வேளையில் பாடுவது பூபாளம்.
அம்சமாய் ஆண்டவன் முன் நீ ஆட பாடப்படுவது ஹம்சத்வனி.
மதிய வேலையில் மதுவந்தியும், மத்யமாவதி ராகமும்.
முன் மாலை வேளைக்குத் தாளமிட்டுப் பாட, ரசிக்க தர்பார்.
சாயங்காலத்தில் சவுகரியமாய்ப் பாட ஷண்முகப்ரியா, கல்யாணி.
இரவை ஆனந்தமாக்கிட ஆனந்த பைரவி, நீலாம்பரி.
எல்லா நேரத்திலும் பாட சங்கராபரணம், கரகரப்ரியாவும்.

இதெல்லாம் சரி,
பூமி வாழ மழை பொழிகையில்
*சின்ன சின்ன மேகம் பாடுவது தேவராகமோ?*



206. நமக்குள் இல்லை உறவு
தாமரையிலைமேல் தண்ணீராய்
சேராதும் பிரியாதும் நம் வாழ்வு
இருந்தும் எனக்குண்டு உன் தயவு
உன்மேல் எனக்குப் பரிவு
நம் காதலுக்கில்லை பிரிவு
தினம் வரும் உன்  நினைவு
கண்மூடினால் கனவிலுன் வரவு
கண்டுரசிப்பதுன் முகப் பொலிவு
அவ்வமயம் வானில் தெரியும் நிலவு
இது *பனி விழும் இரவு*


205. அடி எங்கள் அன்பின் ராதே,
கண்ணனைக் காணச் சென்றாயே
கண்டாயா? கண்டு பேசினாயா?
ரகசியமாய்ச் சிரிக்கிறாயே, கொஞ்சம் விவரம் சொல்லப் புரிந்துக் கொள்வோமே.
*
இடை சிறுத்தவளே,
அவன் நடை உடை உருவம் செப்பு, எம்செவி இன்புறவே.
காதலனவன் கள்ளப் பார்வையில் உனை மறந்து நின்றிருப்பாயே.
அவன் கொஞ்சல் பேச்சில் கோலமயில் நீ சொக்கிப்போனாயா?
குழலூதுகையிலும் உன் குழல் கலைத்து விளையாடினானா ? விவரம் சொல்லடி.
*
நயனங்களாலேயே நடனமாடும் நங்கையே நடந்ததை நவின்றிடு.
கண்ணே என்றழைத்தானா ? கட்டிப்பிடித்தானா? இதழில் இல்லை இடையில் எதையாவது தேடினானா?
எங்கே ஓடி ஒளிகிறாய்,
*சுந்தரி பெண்ணே ... சுந்தரி பெண்ணே நில்லு நில்லு*


204. எது என்றுத் தெரியவில்லை.
உனையொரு விநாடி எண்ணியவுடன் கவிதை பிறக்குதே, அதுவா ?
அழகென்று எவர் எதைச் சொன்னாலும் உன் ஞாபகம் வருகுதே, அதுவா ?
நீர் அருந்தும் போதும் நிலவைக் காணும் போதும் நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என்றெண்ணத் தோன்றுதே, அதுவா ?
'நாராசமான கவிதை, சொல்லவா' என்றதும் காது அடைத்துக்கொண்டு 'ஜொல்லு' என்பாயே, அதுவா ?
அழைத்தவுடன் வருகிறாய், உதவக் கேட்டால் உடனே செய்கிறாயே, அதுவா ?
கொஞ்சமாய்ப் பேசுகிறாய், ஒரு சின்னச் சிரிப்புடன் எப்பழதும் வளைய வருகிறாயே, அதுவா ?
ஏதோ ஒன்று ...
*எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று*

203. நேற்று அப்படியானதே, இன்று என்னாகும் என்ற சிந்தனை;
'எசககுபிசகாய் ஏதும் ஆகாதே' நப்பாசையோடு அச்சம் எழும்.
எல்லா நாளும் சலங்கை சத்தம் தொடர்ந்து  ஒலிக்கும் ... ஜல்.
சிலநாள்...இருளில்...கூட்டத்தின் இடையே தேடியலைவேன் ... ஜல்.
சிலநாளோ தேடத்தேவையேயின்றி எதிரில் நின்று சிரிப்பாய் ... ஜல்.
புடவையில் நான் ...ஜல்... இடையில் கோலம் வரையும் நீ ...ஜல்... அடுத்த இலக்காய் ~வயிறு நோக்கி நகரும்~
புல்மேல் நீ, மடியில் நான், பரவும் இருள், விலகும் நாணம் ...ஜல்.
சிலசமயம் எனை தொட நீ துரத்த இருளில் நான் விரைய ...ஜல்.
~படுக்கையில் என் மேல் புரளும் நீ ... ஆடையின் தேவையின்றி~
பகலில் நீ காக்கும் கண்ணியத்தை இரவில் காற்றில் பறக்க விடுமென்
*ரகசியக் கனவுகள் ஜல் ஜல் ஜல்*

202. தினம் உன்னைப் பார்க்க வேண்டும்.
உன்னோடு பேசிச் சிரிக்க வேண்டும்.
காதல் ரசம் சொட்டும் கவிதைகளை காதில் நீ சொல்ல வேண்டும்.
நாணத்தோடு நான் அவற்றைக் கேட்டு ரசிக்க வேண்டும்.
விரலிணைத்து வீதியுலா செல்ல வேண்டும்.
பார்க்குமெல்லாவற்றையும் கேட்க, நான் கேட்குமெல்லாவற்றையும் நீ வாங்கித் தர வேண்டும்.
எல்லாப்பொழுதும் என் மேல் உன் வாசம் வேண்டும்.
நீ இல்லாப்பொழுதே இல்லாதிருக்க வேண்டும்.
அன்பு காதல் காமம் என்றும் நம்மோடு  கலந்திருக்கவேண்டும்.
என் உடல் சிலிர்க்க உன்னோடு கூடி மகிழ  வேண்டும்.
அவ்வமயம் *அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்*

No comments:

Post a Comment