Tuesday, May 15, 2018

பொன்மாலைப் பொழுதில் 23

178. மயிற்பீலி சூடிய மாதவா
மங்கையென் மடியில் மயங்கிடவா
   ஆராரோ ஆராரோ

கார்மேகவண்ணா கமலநயனா
கன்னியருகில் கண்ணுறங்கிட வா
   ஆராரோ ஆராரோ

புல்லாங்குழலூதும் புருஷோத்தமா
பூமெத்தையில் பள்ளி கொள்ள வா
   ஆராரோ ஆராரோ

நர்த்தனமாடிய நந்தகுமாரா
நல்லுறக்கம் கொள்ள நீ மெல்ல வா
   ஆராரோ ஆராரோ

சங்கடம் தீர்க்கும் சியாமள வர்ணா
சயனம் கொள்ள சடுதியில் வா
   ஆராரோ ஆராரோ

பண்டரிநாதா பாண்டுரங்கா
பிரபஞ்சம் மறந்து உறங்கிட வா
    ஆராரோ ஆராரோ

*ஆராரோ ஆராரோ*
*நீ வேறோ நான் வேறோ*

*****

177. உணவு பசியின் புன்னகை
கனவு ஆசையின் புன்னகை
வெற்றி உழைப்பின் புன்னகை
தோல்வி சோம்பலின் புன்னகை
கவிதை காதலின் புன்னகை
குழந்தை காமத்தின் புன்னகை
ஆத்திரம் அதிகாரத்தின் புன்னகை
அழிவு ஆணவத்தின் புன்னகை
 *பூ கொடியின் புன்னகை*
*அலை நதியின் புன்னகை*

*****

176. நல்லோர் நலமாய் இருக்கணும்
நலிந்தோர் வாழ்வு மேம்படணும்
காலத்தில் மழை பொழியணும்
வயல் செழித்து நிறையணும்
தினம் வயிறு பசிக்கணும்
பசிக்கையில் உணவு கிட்டணும்
படுத்தவுடன் உறக்கம் வரணும்
நற்சிந்தனை நெஞ்சில் நிறையணும்
கடவுளெம் கூடயிருந்துக் காக்கணும்
கற்ற கல்வி கைகொடுத்திடணும்
அருள் புரி தாயே, எம் துணை நீயே
*கலைவாணியே*

*****

175. நீல நிலா என்றனர்.
நின்றவிடத்திலிருந்தே நிமிர்ந்து நோக்கினர்.
பால்கனியிலிருந்தும் பாலத்தின் மேலிருந்தும் பார்த்து ரசித்தனர்.
*
பலரும் பார்க்கப் பால்நிலா சிவந்து போனது.
வெட்கத்திலா, கோபத்திலா என்று புரியாமல் போனது.
*
கொஞ்சமாய்த் தெரியக் கூச்சலிட்டனர் சிலர்.
தானிருக்குமிடத்தில் தெரியவில்லை எனக் கவலை கொண்டனர் சிலர்.
நல்லாத் தெரியுதென்று ~நானே நிலாவென்றும்~ நடனமாடினர் சிலர்.
பார்க்காதார் பார்த்து மகிழப் படமெடுத்தனர் பலர்.
*
ஓட்டு போட்டு நாட்டை மறப்பது போல்
க்ரகத்திலிருந்து க்ரகணத்தை பார்த்து ரசித்து மறந்திட்டோம்.
ஆனால் .... இன்றும் ... வானில்
*நிலா காய்கிறது*
*நேரம் தேய்கிறது*
*யாரும் ரசிக்கவில்லையே ...*

*****

174. மின்னஞ்சலில் நலம் விசாரித்தாய், நவின்றேன்.
குறுஞ்செய்தியில் வணக்கம் சொல்ல வாழ்த்தினேன்
அலைபேசியில் அழைத்தப்பொழுது ஆர்வமாய் அலவாடினேன்.
கனவினில் கவிதை கேட்க வர்ணித்து உளறினேன்.
இத்தனையும் தொடர்ந்து
நேரில் வந்து நின்று இன்பத்திலாழ்த்துவாய் என்று எந்நாளும் எண்ணியதில்லை.
*ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ?*

*****

173. எது பிடித்திருக்கு என்றால் ...
கன்னக்குழி விழ நீ சிரிக்கும்போது
பேசிவிட்டு நா கடித்துக் கொள்ளும்போது
குறுகுறுவென்று நான் பார்ப்பதையுணர்ந்து இழுத்து மறைத்து எனை முறைக்கும்போது
பார்க்காதிருந்தால் இருமி கவனம் கவரும்போது
பார்வை மோதையில் நாக்கை நீட்டி லலலல வெனும்போது
கொலுசோசை கேட்டு அருகில் செல்ல காதினுள் முத்தமிட்டு கண்ணடிக்கும்போது
புத்தாடையில் எதிரில் நின்று 'எப்படி' என்கையில்  'அ...பாரம்' என்றவுடன் சட்டென்று கை கட்டிக்கொள்ளும்போது,
கவிதை நல்லாருக்கு, அர்த்தமென்ன என மெல்லக் கேட்கும்போது.
யாருமில்லாப் பொழுதில் மடியில் படுத்துக் கொண்டு மருதாணியிடக் கெஞ்சியபோது
*சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது*

*****

172. இப்பத்தான் கண்டுகிட மாட்டேங்கறீங்க
ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க
அதெல்லா ஒரு காலம்ங்க, அப்போ...
மொதமுறை பார்த்தப்ப மொறச்சீங்க
அடுத்தமுறை பாக்காதமாதிரி நடிச்சீங்க
பின்னால ஒருநா மொல்ல சிரிச்சீங்க
பேரு என்ன ன்னு கேட்டீங்க
பழகப் பழக மனசுக்குப் பிடிச்சிப் போனிங்க
நெறைய எனக்கு சொல்லித்தந்திங்க
தெரிந்தத நாசொன்னா கேட்டுக்குவீங்க
நல்லப் பாடலை மொல்லப் பாடுவீங்க
சிரிச்சி சிரிக்கவச்சி சிந்திக்கவைப்பீங்க
வேஷம் போடாத வெளிப்படையா பேசி நேசத்த நெஞ்சில விதைச்சீங்க
ஆன்மீக அரசியல் மாதிரி கண்ணியமான காதலை கண்ணுல காட்டுணீங்க
இன்னும் சொல்லனும்னா ... அப்போல்லா எனையே *சுத்தி சுத்தி வந்தீக*

*****

171. உன்னிடமிருந்தோர் குறுஞ்செய்தி வந்ததும்
உள்ளம் உவகை கொள்வது ஏனோ ?
நீ அருகிலிருக்கையில்
அகத்திலோர் ஆனந்தம் பிறப்பது எங்ஙனம் ?
பார்த்ததும் புன்சிரிப்பும்
பார்க்கும் வரை பரிதவிப்பும் ஏற்படுவது எதனால்?
உன் குறுகுறுப்பார்வை
விறுவிறுவென்று ஓர் உணர்ச்சி உண்டாக்குவதேன் ?
உன் ஒவ்வொரு வாசகமும்
திருவாசகமாய்த் தித்திப்பதன் காரணம் சொல்லேன் ?
என் *மனசுக்குள் ஒரு புயல்  மையம் கொண்டதே, அதன் பெயர் தான் என்ன ?*

*****

No comments:

Post a Comment