Friday, June 7, 2013

லிங்காஷ்டகம்

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிகிறேன்.
தேவர்களின் தேவனே,
புனிதங்களின் புனிதனே,
பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே,
பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே,
உன்னை வணங்குகிறேன்.

     
      முனிவர்களால்
முக்காலமும் பூஜிக்கப்படுபவனே,
காமனை எரித்தவனே - ராவணனின்
கர்வம் அழித்தவனே,
துன்பம் நேர்கையிலெல்லாம்
துணை நின்று
துயர் துடைப்பவனே,
தூயவனே உன்னை வணங்குகிறேன்.

வாசம் மிக்க மலர்களால்
நேசம் கொண்டு அர்ச்சிக்கப்படுவோனே,
நாடி வந்தோரின்
வாழ்வு கூட வைப்போனே,
சித்தர்களும் அசுரர்களும்
சிரம் தாழ்த்தி வணங்கப்படுவோனே,
சங்கரனே உன்னை வணங்குகிறேன்.

     
      உயர்ந்த பல ஆபரணங்களால்
அலங்கரிக்கப் படினும்,
நாகங்களை நகையாய்
அணிந்திருப்போனே,
தக்ஷனின் யாகம் அழித்தோனே,
தயாளனே உன்னை வணங்குகிறேன்.

சந்தனம் தடவி,
குங்குமம் இட்டு,
தாமரை மலர்களால் மாலை சூட்டி,
எங்கள் பாவங்களைப் போக்கும்
பார்வதி மணாளா,
உன்னை வணங்குகிறேன்.

     
      தேவர்கள்
வாழ்த்தி வணங்கி வழிபட
வரம் பல தரும் விமலா,
ஆயிரம் ஆயிரம்
ஆதவனுக்கு நிகராய்
பேரொளி வீசி
பிரகாசிக்கும் பரமா,
உன்னை வணங்குகிறேன்.

எட்டு மலரிதழ் இடையே அமர்ந்து,
நல்லது நிலைக்கவும்
தீயது அழியவும்
அருள் புரியும் பிரணவா
உன்னை வணங்குகிறேன்.

     
      உன் அடிபணிந்து தேவர்களின் ஆசான் நிற்க
உனை மலர் தூவி மற்றெல்லோரும் அர்ச்சிக்க
உயர்ந்தவனும்,
வலியவனுமான
வரதா
உன்னை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment