Friday, May 31, 2013

திருவாசகம் - ஆனந்த மாலை

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிந்தவர் இன்னொரு
பிறவி இல்லாத
பாக்கியம் பெற்றனர்.

பூவால் உனை அர்ச்சித்தோர்
பூலோகம் நீங்கி
தேவலோகத்தில்
தேவர்களோடு தேவர்களாயினர்.

கல் நெஞ்சன் நான்,
செய்ததெல்லாம் பாவம் தான் - உமையோனே
உன் துணை கிட்டினால்
போகும் என் துயரம் தான்.

அரிதர்க்கரிய பிறவி தந்தாய்.
அறியாமல் கெட்டேன் நான், இறைவா .
அடியார் எவரோடும் சேராமல்
ஆளானேன் கொடிய நோய்க் இரையாய்.

ஒழுக்கம் இல்லாமல்
விருப்பம் போல் ஆடிக்கிடந்தேன்.
அன்போடெனைக் காக்கும் எம்பெருமானே,
உன்னடி நான் சேர்வது எந்நாளோ ?

தாயாய் இருந்து எனை வளர்த்தவனே
நாயாய் உன் காலடியில்
நான் கிடக்கேன்,
அடிமையாய் எனைக் கருதாது - உன்
அடியவன் ஆக்கி
அருள்தருவாய், ஐயனே.

கெட்டவன் நான் - நீயும்
கை விட்டால் காப்பது யார் ?
அஞ்சேல் என்றாறுதல்
சொல்வார் யார் ?
எனைக் காப்பதுன் கடமையன்றோ.
காக்க நீ வரணும் இன்றே.

நரியைப் பரியாக்கி
நாடகம்  நடத்திய
நாயகனே, நல்லொளியே,
நான் செய்வதறியாது  திகைக்கிறேன்
நல்வழிப்படுத்திக் காப்பாற்று
நீ.

No comments:

Post a Comment