Thursday, December 19, 2019

பொன்மாலைப் பொழுதில் 67

515. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
குருவாயூரில் நாராயண பட்டத்ரி இயற்றியது நாராயணீயம்.
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

514. உண்மை தான், உனைக் காண விரும்பவில்லை,
ஆனால் எந்நாளும் வெறுத்ததில்லையே.
ஆம் சுமுகமாய்ப் பேசத் தெரியலை,
எனினும் வம்பெதற்கு என்று ஒரு போதும் எண்ணியதில்லை.
நீ எழுதியவற்றை தினம் பலமுறை படிப்பதுண்டு.
பதிலனுப்பணும் என்று ஏனோ தோன்றியதில்லை.
ஆனால், மறுக்க முடியாது.
நிதம் கவிதை நெஞ்சில் சுரக்குது,
கண்முன் உனைக் காணும் போது.
வானவில் என வர்ணிக்க ஆசை இருக்கு,
வண்ண உடைகளில் உலவும் உனைப் பார்க்கும் போது.
மனதுள் ஒரு புத்துணர்ச்சி ... உதடு *உன் பேரைச் சொல்லும் போது*


513. முதலில் வேலை என்று தான் எண்ணினேன்.
பின் பணத்தின் பின்னே பறந்தேன்
நல்ல இடம், வருமானம் என்பதை உணர்ந்தேன், எனை மறந்தேன்.
கார் பங்களா என்று வசதியோடு வாழத் தொடங்கினேன்
அகப்பட்டுக் கொண்டதை உணரவே  மறுத்தேன், பணத்தால் மறைத்துக் கொண்டேன்.
போதும் என்று மனம் எண்ணும் போது திரும்பி வர முடியாதுத் தவித்தேன்.
என்னை விடு, நீ பாடு ஆடு கொண்டாடு
ஆனால் ... மறவாதிரு
உனக்கென்றோர் வீடு, உன்னுடைய மக்கள், உன் நாடு
உனை எதிர்பார்த்தபடி,
எங்கோ தூரத்திலிருந்து உனை அழைத்தபடி
கேட்குதா ...
*உந்தன் தேசத்தின் குரல்*

512. எல்லாம் நீ செய்த மாயம்,
இது உன்னால் மட்டும் முடியும் மகத்துவம்
என்னுள் வேண்டுமுன் ஆதிக்கம்
நீ கூட இருந்தால் போதும், என் இலட்சியம் எளிதாய் நிறைவேறும்
உன் சகவாசம் என் வெகுமானம்
அநுதினம் நான் உன் வசம்
என் மேல் வீசும் உன் வாசம், நீ
சொல்வதே எனக்கு திருவாசகம்
உன்னருகில் எனககோர் ஆசனம்
போதும், எனை அணுகாது சோகம்
பக்கமாகிப் போகும்  வானம்
இன்று
நான் *காணும் யாவிலும் இன்பம்*

511. பெருமாள் அவதாரங்கள் பத்து
நவராத்திரி நாட்கள் ஒன்பது
திசைகள் எட்டு
உலகில் கண்டங்கள் ஏழு
முருகனுக்கு முகங்கள் ஆறு
பஞ்ச பூதங்கள் ஐந்து
இந்து மதத்தில் வேதங்கள் நான்கு
சாஸ்த்ரி பிறந்தது அக். இரண்டு
*கற்பூர பொம்மை ஒன்று*

510. காலை சீக்கிரம் விழித்திடுவேன்.
இப்போல்லாம் 7 மணி ஆனாலும் கட்டிலை விட்டு எழ முடிவதில்லை.
புத்தகத்தை தலை கீழாய் வைத்துப் படிக்கக் கூடாதாமே.
உணவு பரிமாறிய பிறகே உண்ண வேண்டுமென்பது சட்டமா என்ன?
குடிக்கத்தந்த தண்ணிய ஏதோ ஞாபகத்துல தலைல ஊத்திக்கிட்டா அவ்ளோ பெரிய தப்பா என்ன?
இரவாடையில் வரக் கூடாதாம், உடை மாற்ற மறந்துட்டேன் என்றால் மன்னிக்க வேண்டியது தானே.
ம்ம் ... என்னவோ ஆகப்போறேன்னு அப்போவே நெனச்சே ...
உன்னை எப்போ பார்த்தேனோ ...
'எப்போ?'
*'அதுவா ... அதுவா ...'*

509. கூனி உண்மையில் கைகேயிக்கு தோழியா எதிரியா?
இள இராமனை தன்னோடு அனுப்ப மகரிஷி கேட்டது முறையா, தவறா?
தன் பிழை உணராது கௌதமர் அகலிகையை சபித்தது சரியா?
சூர்பனகை திட்டம் ராமனை அடைவதா தமையனை மாட்டுவதா?
துர்வாசரை  சகுந்தலை கவனிக்- காதது காதலாலா மோகத்தாலா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றமே என்றது ஆணவமா அகங்காரமா ?
நாலு பேர் நல்லாயிருக்க என்ன வேணா செய்யலாமா கூடாதா?
சரி சரி கடைசியாய் ஒரு கேள்வி
*உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?*

508. அடி என் ப்ரிய சகி,
அருகில் வந்துன் செவி மடி.
நேற்று நவராத்திரிக்கு முதல் நாள்.
நான் அவனைக் கண்ட நன்னாள்.
நீல தாக்ஷாயிணி கோவிலுக்குப் போயிருந்தேனடி.
என் நெஞ்சு களவு போகுமென்று அறியேனடி.
நீலச் சட்டை, நெற்றியில் திருநீறு, சாந்தப் பார்வை.
பார்த்ததுமே தன் நிலை மறந்து சரிந்தாள் இப்பாவை.
என் நிறம் ஒத்தவன்; இந் நங்கை நெஞ்சில் காதல் தீயை வைத்தவன்
தேவாரமா பாடினான்? தேனை அல்லவா என் காதில் ஊற்றினான்;
கூச்சமில்லாது என் கரம் பிடித்து சுண்டல் தந்ததாய் நினைவு.
உறங்கவிடாது இரவில் கனவில் கூட அவன் வரவு.
யார் என்ன என்றறிய ஒர் உபாயம் சொல்லடி.
*என் நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி?*

No comments:

Post a Comment