Sunday, January 20, 2019

பொன்மாலைப் பொழுதில் 46

351. இதோ பார்.
நீ கோபப்படு, முறைத்திடு, கெட்ட வார்த்தையில்  திட்டு
(நம்ம வாய்ல நல்ல வார்த்தை தான் வராதே).
சாம்பாரில் நிறைய உப்பு போடு
(அப்போதாவது சாப்டுற மாதிரி இருக்கா பாப்போம்).
தொல்லைக்காட்சி பெட்டியை உடை (நிம்மதி).
(உன்) ஆடைகளைக் கிழித்தெறி.
பாலைத் தயிராக்கும் வித்தை ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை;
அவ்வித்தை கை வரவில்லை என்பதற்காக இப்படியா பேசாது கதவை அடைத்துக் கொண்டு, தனியே (மகிழ்ச்சியா) இங்கெனை புலம்பவிட்டு ... ம்ம்ம்
சரி அவள் தான் (அடங்காப்பிடாரி) சொற்பேச்சு கேளாள், எத்தனை முறை எண்ணை ஊற்றி, துடைத்து பளபளவென்று பாதுகாக்கிறேன்,  நீயாவது ...
*பூங்கதவே ... தாள் திறவாய்*


350. அடி என் வாயாடிச் சகி, ஒரு சேதி சொல்லணும் அருகில் வாயேன்டி.
அமாவாசை நாளில் அந்தி சாயும் வேளையில் ஆரம் தொடுத்த படி அமர்ந்திருந்தேன்.
கள்ளப்பார்வை கமகம வாசனை, அவன் தான் மெல்ல என் அருகில் வந்தமர்ந்தான்.
என்ன என்று விழி உயர்த்திக் கேட்க, பசி என்றவனுக்கு பொரி உருண்டையும் பாயசமும் தந்தேன்.
வாயில் வையகம் எனக்கும் காட்டுவானா என்ற நப்பாசையில் கொஞ்சம் நெருங்கி அமர ...
என் உள்ளங்கை பிடித்திழுத்து தன் கை வைத்து அழுத்தி ... கையில் என்னவோ தடதடவென ஆடுவதாய் உணர்ந்தேனடி.
அகில உலகமும் தெரியுது பார் என்றானடி.
அயர்ச்சியில் அச்சத்தில் அப்படியே அவன் மடியில் சரிந்து விட்டேன்.
அடுத்தென்ன நடந்தது எப்போது அவன் அகன்றான் என்ற நினைவு இல்லாது ...
இன்னொரு சந்தர்ப்பம் அமையாதா என்ற ஆசையில்,
காத்திருக்கேன் தவமிருக்கேன்
அவன் வரும் பாதை பார்த்தபடி இந்த அந்தி மாலையில்
*கண்ணன் வரும் வேளையில்*


349. எதற்காகக் கலங்குகிறாய் ?
என்னாயிற்றென்று  புலம்புகிறாய்?
இரவும் பகலும் மாறி வருவது தானே வாடிக்கை
இன்பமும் துன்பமும் இணைந்து இருப்பது தானே வாழ்க்கை.
யோசித்து செயல்படு,
துணிவோடு முடிவெடு.
இன்றில்லையேல் நாளை.
தொடர்ந்து முயல்; உன்னால் முடியாதது ஏதுமில்லை.
சோதனைகளே நம் செயல்களை சாதனைகள் ஆக்குகின்றன.
அயரா உழைப்பே வெற்றிக் கனி ஈட்டுத் தருகின்றன.
போராடப் போராட வலி விலகும்; காலம் வழி தரும்; காய்த்தது பழுக்கும்.
கலங்கலாகுது,  கோடையில் துளிர்க்கும் *வாடையில பட்ட மரம்.*


348. முன்பெல்லாம் பசிக்க சாப்பாடு,
இப்பொழுது என்ன சாப்பிட்டேன் எப்போது என்ற நினைவேயில்லை;
படுத்தவுடன் உறங்கியது அப்போது.
தூக்கமெனை விட்டு தூரச்சென்று விட்டதை உணர்கிறேன் இப்போது.
நேர்த்தியாகப் பார்த்துப் பார்த்து ஆடை அணிந்தது பழைய கதை.
அவசரத்தில் ஆடையே இல்லாது கிளம்பிடுவேனோ என்றச்சமின்று.
பார்க்கும் எதுவும் எனை ஈர்த்ததாய் ஞாபகமில்லை இதுவரை.
இப்போதோ எதைப் பார்த்தாலும் கவிதை எழுவது புதுவகை.
இதெல்லாம் உனைப் பார்த்த பின், உன்னோடு பழகிய பின் தான்.
இயற்கையோடு இசைந்து வாழ்ந்து வந்தேனே, இப்போது எல்லாமே எதிர்மறையாய் உணர்கிறேன்.
நீ அருகிலிருந்தால் ஒரு மாதிரி, இல்லையெனில் வேறு மாதிரி, சுருங்கச் சொன்னால்
*சுடும் நிலவு ... சுடாத சூரியன்*


347. பரிக்ஷித் மன்னன் கேட்க
சுகர் மகரிஷி கூறியது பகவான் க்ருஷ்ணரின் கதை.
தந்தை தலை தாழ்த்திக் கேட்க
தனயன் சொன்னது ஓம் எனும் ப்ரணவ மந்திரம்.
மந்திரி கேட்டதற்கிணங்க
கண்ணன் தான் கற்றதை உரைத்ததே உத்தவ கீதை.
ப்ரகலாதன் தாய் வயிறில் இருந்து கேட்க
நாரதமுனி விவரித்தது நாராயண நாம மகிமை.
அட பார்வதி கேட்டதால் தானே
பரமசிவம் பகிர்ந்தது காம சாஸ்திரம்.
உனக்குக் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் சொல்கிறேன்
*ராகங்கள் பதினாறு உருவான வரலாறு*


346. 'லூசு' என்று பாராட்டு
'மவனே பிச்சிபுடுவே' என்று மிரட்டு
எதற்கும் வருந்தேன், எல்லாம் நீ என்று அறிந்த பின்னே;
நீ இல்லாது நான் இல்லை என்று உணர்ந்த பின்னே;
ஆம் எனக்கு எல்லாமே நீ தான்
என் ஊன் உயிர் நீ தான்
என் உறக்கம் நீ
உறங்க வரும் கனவில் நீ
உறங்கையிலும் ஓடும் சுவாசம் நீ
என் உலகம் நீ, உறவு நீ, நான் அடைய எண்ணும் உன்னதம் நீ;
நான் பார்த்து ரசிக்கும் ஓவியம் நீ
படித்து இன்புறும் காவியம் நீ;
என் நம்பிக்கை அறிவு ஆற்றல் நீ;
அழகு நீ, அமிர்தம் நீ, நான் படித்து இன்புறும், கேட்டு ரசிக்கும்,
*வேதம் நீ, இனிய நாதம் நீ*


345. அப்புறம் ... வாழ்க்கை ஓடுதா ?
எப்போதாவது ஞாபகம் வருதா ?
என் தொணதொணப்பு, நக்கல், சீண்டல் இல்லாம ...
கோபம் கொள்ளத் தேவையே இல்லாம, மகிழ்ச்சி தானே?
நாம நட்ட முல்லைக் கொடி பூ பூக்க ஆரம்பிச்சிடுச்சா? இல்லே அதையும் பிய்த்துப் போட்டாச்சா?
பக்கத்து வீட்டுப் பாப்பா தேடுதா?
அதுக்குப் புரியாதெனினும் எனைப் பற்றி கண்டபடி சொல்லியிருப்பியே
அடிக்க மாட்டேன்னு உத்திரவாதம் தந்தா ... அடுத்த வாரம், அந்தப் ~புர~ பக்கம் வரலமா ?
அனுமதியின்றி வந்தால் தவறாகிப் போகுமா ? தண்டனை கிட்டுமா?
சரி விடு, இப்போது எப்படி இருக்கே?
*என் இனிய பொன் நிலாவே*

No comments:

Post a Comment