பிறந்தேன் 
பின் ஓடச்சொன்னார்கள் 
ஓடினேன் 
பள்ளி தேடி ஓடினேன்,
கல்வி தேடி ஓடினேன்,
பணம் இறைத்து பட்டம் பெற ஓடினேன்;
*
பின் இறைத்த  பணத்தை நிரப்ப ஓடினேன்
வேலை தேடி ஓடினேன், இடையில் 
சேலை தேடி ஓடினேன்.
காதல் தேடி, 
கன்னியர் தேடி ஓடினேன்;
*
எல்லாவற்றுக்கும் ஒருவிலை
இன்னும் இன்னும் என்றுஓடினேன்
பல நாடுகள் பறந்தோடினேன்;
எதை எதையோத் தேடி 
எங்கெங்கோ ஓடினேன்,
எல்லை மறந்து ஓடி ஆடி வாடி 
இன்று அமைதியாய்;
*
இதோ என் வாழ்க்கை முடியப் போகிறது,
இத்தனை நாள் ஓடியதெதற்கு எனத்தெரியாமல்
இன்று நிற்கிறேன், திரும்பிப்பார்க்கிறேன்
வாழ்க்கை என்றால் என்ன என்றெனைக் கேட்கிறேன்;
இதற்கு நான்மட்டுமா காரணம் என்றெண்ணிப்
பார்க்கிறேன்;
*
நான் ஒடினேனா என்னைத் துரத்தினார்களா
எனக்குத் தெரியவேண்டும், 
இப்பொழுதாவது உண்மை புரியவேண்டும்;
வாழ்க்கையை மறக்கச்செய்து
வாழ்வென்றால் என்னவென்று உணர்த்தாது
மறைத்து
எல்லாவற்றையும் வணிகமயமாக்கி 
என்னை எங்களை வாழ விடாது செய்தவர் யார்
? 
*
என்னிடம் நிதி நிறைய இருக்குறது.
ஆனால் நீதி வேண்டும்.
உங்களுக்கு 
உண்மை தெரிந்தால் சொல்லுங்கள்,
இல்லை
உண்மை தெரிந்தால் சொல்லுங்கள்,
இல்லை
என்பின்னே வாருங்கள்.
இதோ ... 
மீண்டும் ஓடுகிறேன் ... 
நீதியைத்தேடி. 
No comments:
Post a Comment