Thursday, August 15, 2019

பொன்மாலைப் பொழுதில் 60

454. யோசித்துப் பார்க்கிறேன், என் எல்லாவற்றிலும் இருக்கிறாய் நீ.
என் பசியாய் நீ
பசிக்குப் புசிக்கும் பதார்த்தமாய் நீ
மயக்கம் நீ
மயக்கம் தெளிக்கும் மருந்து நீ.
மறைந்து நின்று என் நொடிகளை மணிகளாக்குகிறாய் நீ.
அருகில் இருந்தபடி நாட்களைக் கூட நொடிகளாக்குகிறாய் நீ.
நான் பார்த்து ரசிக்கும் ஓவியம் நீ
படித்து மகிழும் காவியம் நீ
என் கவிதை கற்பனைகளில் கலந்திருக்கிறாய் நீ
இக் கண்ணனின் ராதை நீ
ஆண்டாள் கோதை நீ
மேகம் நீ, வானம் நீ,
வேதம் நீ, ஞானம் நீ
*ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ*

453. அமெரிக்கா ஆஸ்திரேலியால்லாம் அந்தக் காலம்.
ஆப்ரிக்க காடுகளுக்கும் அமேசான் நதிக்கும் செல்ல விரும்புன்றனர் இன்று.
3 அறை பெரிய வீடு கேட்டதெலாம் மாறி
கடலலைகளைப் பார்த்தபடி தனி பங்களா வேண்டுமாம் இன்று.
பப் டிஸ்கோத் பார்ட்டி எல்லாம் தினத் தேவையாய் மாறிப் போனது
உனக்குத் தெரியாமலிருக்கலாம்.
சமையல் செய் என்றும், பூ சூட, புடவை கட்டல்லாம் வற்புறுத்தக் கூடாதென்று .... ம்ம்ம்
நான் இப்படியெல்லாம் உன்னைப் படுத்தவில்லை,
எனக்கும் இதெல்லாம் பிடிப்பதில்லை.
எந்த நிபந்தனையும் இல்லை, உன் நிழலாய் வரத் தயாராயிருக்கிறேன்
*கண்ணைக் காட்டு போதும்*


452. ராமன் என்றதும் லக்ஷ்மணன் அனுமன் ஞாபகம் வரும்.
மார்கழியில் விடிகாலை விழித்து திருப்பாவை படிக்க ஆசை வரும்.
கைப்புள்ளே, நாய் சேகர், போன்ற பேரைக் கேட்டாலே சிரிப்பு வரும்.
செய்யும் சமையலில் சுகந்தமிருக்க வயிறில் பசி தானே வரும்.
சொந்த மண்ணில் காலடி வைக்க நெஞ்சில் ஒரு சந்தோஷம் வரும்
ப்ரபாவை 'எந்த ஸ்கூல்' எனக் கேட்டு ராகிங் செய்ய ஆசை வரும்.
முருக வடிவு ... அருவா சொருவிய சொர்ணாக்கா ஞாபகம் வரும்.
நெய் சாம்பாரில் மிதக்கும் இட்லி பார்த்ததும் அமுதன் ஞாபகம் வரும்.
எகோலாக் பெட்டி திறக்க ராம்க்கு ஜானுவின் ஞாபகம் வரும்.
எந்நேரமெனினும், அன்பே ... உனை எண்ண, மனதுள்
*தம்தன தம்தன தாளம் வரும்*


451. நல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.
என்னை எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்.
கெட்டப் பய சார் இந்த காளி. பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லே.
இதெப்படி இருக்கு, சீவிடுவேன்.
கஷ்டப்படாம கெடைக்காது. கஷ்டப்படாம கெடைக்கிறது எதுவும் நெலைக்காது.
வாய்ப்புகள் அமையாது நாம தான் அமைச்சுக்கணும்
என் வழி தனி வழி
நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.
சிங்கம் சிங்குளாத்தா வரும்
ஆண்டவன் நம்ப பக்கம் இருக்கான்
ஆண்டவன் சொல்றா, அருணாச்சலம் முடிக்கறா.
நா ஒரு தடவே சொன்னா நூ...று தடவே சொன்ன மாதிரி.
யோசிக்காம பேசமாட்டே, பேசிட்டு யோசிக்க மாட்டேன்
கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சி போச்சி
கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்.
*ராக்கம்மா ... கையத் தட்டு*


450. ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்தலே வாழ்க்கை.
நீ செல்லும் வழியில் தொடர்ந்தால் அது உன் மேல் உள்ள நம்பிக்கை.
காக்க நீ இருக்க கவலை எதற்கு என்ற தைரியம்.
இதில் ஒருவகை தான் சரணாகதி, அடைக்கலம் எனப்படும்.
விபீஷன் ராமனை சரணடைந்தான்
தன்னால் முடியாததும்  திரௌபதி கண்ணனிடம் சரணடைந்தாள்.
எமனிடம் இருந்து தனைக் காக்க சிவனிடம் சரணடைந்தான் மார்க்கண்டேயன்.
சரணடைந்த சூரபத்மனை தன் கொடியாகக் கொண்டான் குமரன்.
நானும் ஓடி ஓடிக் களைத்து விட்டேன்
போதுமென்ற நிலைக்கு வந்து விட்டேன்.
எனக்கு அடைக்கலம் தா ...
*நின்னைச் சரணடைந்தேன்*


449. தவறு தான்.
செல்லப் பெயரிட்டுனை அழைத்தது தவறு தான், மன்னித்திடு.
உனக்குப் பிடிக்காமல் போனது என் துரதிர்ஷ்டம் தான், பொருத்திடு.
*
தவறு செய்யாதார் எவருளார் ?
இருப்பின் அவர் மனிதரிலார்.
*
ராமன் கடவுள் தானே;
மறைந்திருந்து பாணம் எய்ததும், மனைவி மேல் சந்தேகப்பட்டதும், மான் பொய் என்றறிந்தும் அதன் பின் ஓடியதும், தவறு தானே;
இருந்தும் அவனைத் தொழுவது தவறில்லை தானே.
*
புரிந்து கொள் அன்பே,
தவறு செய்யும் மனிதம்.
அதையுணர்ந்து மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் தெய்வம்.
மறந்து மன்னிக்கத் தெரிந்தவள் தெய்வத்தின் தெய்வம்.
*
மலரே இன்னும் மௌனமேன் கூறு.
என் *கண்மணியே ... பேசு*


448. வண்டுகளைத்தான் காணவில்லை.
பூத்து தேன் வடிய மலர்கள் திறந்து கிடக்கின்றன.
கொத்தியுண்ண பறவையினங்கள் வருவதில்லை.
காய் பழம் யாவும் கனிந்து மரத்தில் தொங்குகின்றன.
பார்த்து ரசிக்க ஆளுமில்லை, ஆர்வமுமில்லை.
வெண்ணிலவு வானில் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கிறது.
நனைந்து விளையாட பிள்ளைகள் யாருமில்லை.
மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.
மரத்தின் பின்னே மறைந்து விளையாடவும், புல்தரையினில் படுத்து உருண்டு பேசிப் பழகவும், நீரோடையில் ஆடி மகிழவும் காதலர்கள் தான் யாருமில்லை.
*காடு திறந்து கிடக்கின்றது*

No comments:

Post a Comment