Wednesday, December 7, 2016

இடித்தவன்



'ஹலோவ்'
'சார் கீழேருந்து செக்யூரிட்டி பேசுறே சார்'

'கார்ல லைட் போட்டுட்டு வந்துட்டேனோ ? இல்லை தப்பா பார்க்கிங் ல வண்டிய போட்டுட்டேனா ? இல்லியே எப்போவும் பார்க் பண்ற இடத்துல தானே பார்க் பண்ணிருக்கே' பல்வேறு சிந்தனைகளோடு தொடர்ந்து பேசினேன்.

'சொல்லுங்க'

'சார் ஒங்க கார்மேல ஒருத்தரு இடிச்சிட்டாரு, சைடுல ஸ்க்ராட்ச் விழுந்துடுச்சி '

'அடடா, நா ...'

'அவரு பேசுறாரு சார் உங்ககிட்ட, ஒரு நிமிசம்'

'ஹலோவ், சார் நா அங்கே செகண்ட் ஃப்லோர்ல ஒர்க் இருக்கே, சாரி சார், லைட்டா இடிச்சிட்டே, சின்ன ஸ்க்ராட்ச் தான், நீங்க இப்போ கீழ வந்தீங்கன்னா ...'

'நா ஒரு மீட்டிங் கு இப்போ அவசரமா போய்கிட்டிருக்கே, இப்போ வரமுடியாது, நேர்ல வாங்க பேசிப்போ'

'சார் ஒங்க பேரு ?'

'ரவி, MIS பாக்குறே'

போன் துண்டிக்கப்பட்டது.

எனக்கு மீட்டிங் எல்லாம் ஒன்றுமில்லை. கீழே போக சோம்பேறித்தனம். சாயங்காலம் போகும்போது பாத்துக்கலாம் ன்னு சும்மா இருந்துட்டே. ஆனாலும் மனசுக்குள் ஒரு கவலை. 'காருக்கு அடி பலமாயிருக்குமோ ? சின்ன ஸ்க்ராட்ச் ன்னு தானே சொன்னா ? வரட்டும் பேசிப்போ' மனதுக்குள் துக்கம், வெளிகாட்டாது காத்திருந்தேன்.

எனக்குத் தெரியாத யாரைப் பார்த்தாலும் 'இவனா இடிச்சவன்?' ன்னு ஒரு எண்ணம். யாரு என்னை நோக்கி வந்தாலும் ஒரு பரபரப்பு. 'எப்படி இடிச்சா? வேகமாவா ? சாயங்காலம் வண்டி எடுக்கமுடியுமா?' கேள்வி மேல் கேள்வி மனதுள், ஆனால் இடித்தவனைத்தான் காணவில்லை இதுவரை.

'பேரு கேட்டுவச்சிக்கணும்னு எனக்குத் தோணலே, சரியான முட்டாள் நான்' பேசிக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டேன், பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

மதிய நேரம் வந்தது. 'சாப்பிட போலாமா, அந்த சமயம் பார்த்து இவ வந்துட்டு போயிட்டான்னா என்ன பண்றது' என்ற நினைப்பு. காத்திருந்து, பசிக்க ஆரம்பித்து, வேகவேகமாய்ப்போய் கொண்டுவந்ததைக் கொட்டிக்கொண்டு திரும்ப என்னிடத்திற்கு வந்து, ரெஸ்ட் ரூம் கூடப் போகத்தோணாது, 'இடிச்சவ எங்கியோ இருக்கா, நா இப்டி கஷ்டப்படறேனே' ன்னு மனதுள் நினைத்துக்கொண்டேன்.

'வந்து பேசறே ன்னு சொன்னான் ல?' என்று என்னையே கேட்டுக்கொண்டேன். 'அப்போவே கீழபோயி யாருன்னு பாத்திருக்கணும், சே' என்று என்மேலேயே ஒரு கோபம். 'கண்டுபிடிக்கமுடியாதுன்னு தைரியமா? வரேண்டா வரே, நீ இந்த ஆபிஸ்ல எந்த மூலைல ஒளிஞ்சிருந்தாலும் ... ' என்று சிங்கம் சூர்யா மனசுக்குள்ள கத்திக்கிட்டு இருந்தாலும், நா என்னவோ சும்மா உட்கார்ந்த இடத்திலேயே தான் உட்கார்ந்திருந்தேன்.

மாலையும் முடிந்து வீடு செல்லும் வேலையும் வந்தது. இடித்த அவன் மட்டும் வரவில்லை. ஆறுமணி ஆனபின் கீழிறங்கிச் சென்றேன். எல்லாக் கடவுளையும் மனதில் துதிக்கொண்டே சென்றேன். எந்தத்தொந்தரவும் இல்லாது இன்று அருள்புரிய துதிக்துக்கொண்டேன். அடித்தவன் ஆளைக்காணோம், அடிவாங்கியவன் அரற்றுகிறேன் என்று எண்ணிக்கொண்டே, வண்டி என்னவாயிற்று, என்ன நிலையில் இருக்கு என்று முதலில் சோதித்தேன். பெரிய அடி இடி இல்லை என்று தான் தோன்றியது எனக்கு. 'கோவிந்தா அரோகரா நன்றி ஐயா' என்று சொல்லிக்கொண்டிருக்கையில் செக்யூரிட்டி அருகே வந்தார்.

அவர் என்ன கேட்கப்போறாரு என்று நான் எண்ணியிருந்தேனோ அதையே அவரும் கேட்டார்.

'சார் இடிச்சவரு வந்து பார்த்தாரா?'

'வரேன்னாரு, பாவம் அவருக்கு என்ன வேலையோ?'

'கட்டையா குண்டா இருந்தாரு சார், ஒங்களத் தெரியும் பேசிக்கறே ன்னு சொன்னாரு சார்'

'சரி விடுங்க நாளைக்கு வருவாரு ... பார்ப்போம்'

'நாளைக்குப் பாத்து பேரு நம்பர் வாங்கி வச்சிக்கவா சார்?'

'வேணா வேணா நா பாத்துக்கறே'

'என்னால ஒரு' தலைமுடியை மெதுவாக இழுத்துக்கொண்டே 'புடுங்கமுடியாது' என்றும் 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று மனதுள் நினைத்துக்கொண்டேன். காருக்கு அதிகம் சேதாரம் இல்லாம இருக்குதே அதுவே போதும் ன்னு எனக்கு எண்ணம்.

அடுத்த நாள் வந்தது. மறுபடியும் யாரைப்பார்த்தாலும் 'இவனா அவன் ? ... இவனா அவன் ?' என்ற எண்ணம். 'ப்ளீஸ் நீ வந்து என்னைப் பார்த்திரு கண்ணா, ஒன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன்' என்று எண்ணிக்கொண்டேன். ஆள் வந்தால்தானே.

மீண்டும் மாலையில் செக்யூரிட்டி 'வந்தாரா?' கேட்க மறுபடியும் 'இல்லை' என்று சொல்ல எனக்கு சரியாகப் படவில்லை. 'வந்து பார்த்தாரு, பெயிண்ட் பண்ணா இந்த ஸ்கராட்ச் போயிடும், அவரு பாதி பணம் தர்றேன்னு சொல்லிருக்காரு' என்று சொல்லிவைத்தேன். வேறு வழி ?

'அப்பா, என்னோட காரை இடிச்சவனே, ப்ளீஸ், நீ என்னை பார்க்கவேணாம், பேசவேணாம், காசு தரவேணாம், செக்யூரிட்டி உன்கிட்ட கேட்டா 'அவரை பாத்துட்டே' ன்னு மட்டும் சொல்லிடு ராசா.

No comments:

Post a Comment