Thursday, March 27, 2014

எக்காலம் ?

ஆணவம் கொள்ளாது ஐம்புலன்களையும் அடக்கி தூங்கி நேரத்தை வீணடிக்காது சுகம்பெருவது எக்காலம் ?       கவலையில் கவிழ்ந்து மனம் மிகத் தளர்ந்து உள்ளம் வாடி ஒழியாத பிறவித் துன்பத்தை அழிப்பது எக்காலம் ?


குழந்தையாய்ப் பிறந்து செவிடு ஊமை போல் திரிந்து பேய் போல் வாழ்ந்து உன்மேல் பைத்தியமாகி உனை எண்ணிக் கிடப்பது எக்காலம் ?       மண்ணுயிரைக் கொன்று தினம் தின்று பிறரை வதைத்து வாழாமல் தன்னுயிர் போல் எண்ணித் தவம் புரிவது எக்காலம் ?


பட்டாடை பொன் நகைகள் பொய் நடிப்பு தீஞ்செயல்கள் எல்லாம் விடுத்து சிவனே உன்பாதம் விரும்பிப் பிடிப்பது எக்காலம் ?       தூண்டிலில் சிக்கிய மீன்போல் துவண்டு வாடாமல் ஐய, உனைத் தேடி அடிபணிவது எக்காலம் ?


கஞ்சா அபின் கள் உண்டு களித்துக்கிடக்காமல் பஞ்சாமிர்தம் அருந்திப் பரவசமடைவது எக்காலம் ?       வயிறுக்கு உணவிடுவோர் வாயில் தேடி வெட்டியாய்த் திரிவதை விடுப்பது எக்காலம் ?


தேவையற்ற சிந்தனைகளில் சிக்குண்டு தவிக்காது சிவநாமத்தையே ஜெபித்திருக்கும் காலம் எக்காலம் ?       பக்தியால் தொழுது ஞானத்தால் உணர்ந்து பாசவலையில் சிக்காது துன்பமேது மில்லாது கரை சேர்வது எக்காலம் ?


அகில உலகங்களில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் ஆண்டவன் அருளால் அவதரித்ததே அல்லாமல் வேறில்லை என்று அறிவது எக்காலம் ?       மூலாதாரத்தில் வீற்றிருக்கும் மும்மூலக் கடவுள் விநாயகனின் திருவடித் தாமரைகளைத் தொழுது நிற்பது எக்காலம் ?

1 comment:

  1. சில காலம் - அந்தக்காலம் பொற்காலம் என நினைக்க வைத்தது...

    ReplyDelete