Thursday, November 28, 2013

தெய்வத் திருநாமம்

பொருள் மேல் பித்தாகிப்
பொருளில்லா ஒரு பெயரைத் தன் பிள்ளைக்கு இட்டு
பின் புலம்பும் பேதை மனிதர்களே,
கேசவா’ என்று திருநாமமிட்டு அழையுங்கள்.
கெட்ட சொல் ஏதும் சூழாது அவன் காப்பான் நம்பிடுங்கள்;

ஆடைக்கும்
ஆரோ தரும் அணிகலன்களுக்கும் ஆசைப்பட்டு
அவன் நாமம் மறந்து, தன் சிறார்க்குப் பேரிட்டு, பின்னர்
அவதியுறும் அறிஞர்களே,
சிரீதரா’ என்றழைத்துச் சீராட்டுங்கள்.
சிக்கல் ஏதுமண்டாது அவன் காப்பான் நம்பிடுங்கள்;

உயிர் வாழப் பொருள் தருவோர்
உடன் உரைத்த வார்த்தையே பெயராய்ப் பொறித்து
உய்ய எண்ணும் உயர்ந்தோரே,
இறைவன் திருநாமமே
இன்னலைத் தீர்க்கும் என்றேனோ எண்ணாமல்
இன்று வரைத் திரிகிறீர் ?

மனிதனாய்
மண்ணுலகில் வாழ்ந்து
மடியப் பிறந்த மக்களுக்கு,
மனிதப் பெயரிட்டு அழைத்தால்
மறு பிறவியிலும் அவதியுற நேரிடும்.
மாதவா’ என்றே பெயரிட்டழைத்தால்
நாராயணன் நல்வழி நடத்திடுவான் நம்புங்கள்;

அசுத்தம் நிறைந்த
அழுக்கு உடலோடு
அவதரித்து அவதியுறப்போகும் அப்பிள்ளைக்கு,
அசுத்தம் நிறைந்த
அழுக்கு உடலோடு
அவதியுறும் ஒருவர் பெயரிட்டால்
அடுக்குமா ?
அக்குழந்தையை ‘கோவிந்தா’ என்றே திருநாமமிட்டு
அழையுங்கள்;
அனைவரையும் காத்திடுவான்,
அரங்கன் வழி நடந்திடுவான்;

தவம் செய்துப் பெற்ற பிள்ளைக்குத்
தரணி வாழ் தலைவர் பெயரிட்டால்
‘தப்பு செய்தோம்’ என வருந்த நேரிடுமே;
தாமோதரா’ என்றே
திருநாமமிட்டு அழைத்திட்டால், நம்
துயர் எல்லாம் துடைத்திடுவானே;

கண்ணுக்கு கண்ணாய்க் காத்துப் பெற்ற பிள்ளையை
மண்ணுக்குள் போகும் மனிதப் பெயரிட்டால்,
விண்ணைத் தாண்டிப் போகாது, மண்ணுள் மீண்டும் பிறப்பரே;
அதை விடுத்து, கார்முகில் வண்ணன் 'கண்ணன்' பெயரிட்டால்,
முன்னால் நின்றுக் காத்திடுவான், இது நிஜம்தானே;

No comments:

Post a Comment