Tuesday, November 1, 2011

நாச்சியார் திருமொழி 13

கண்ணனெனும் கருந்தெய்வம்
      
கரு நீலக்
கண்ணனோடு
களிப்போடிருக்கவே இந்த
அவனியில் நான்
அவதரித்தேன்;
என் கண்ணனையும்
எனையும் பிரிக்க
எண்ணுவது
புண்ணில்
புளியைப்
பிழிவது
போன்றது;

கண்ணன் இல்லாது
நான் வாழ்வதேது;
கண்ணனைத் தவிர
வேறு நினைவேது;

என் மேல் இரக்கம் கொள்ளாது
எங்கோ இருந்து கொண்டு
எனைக் கொல்கிறான்;
விரக தாபத்தில் எனை
வதைக்கிறான்;

அவன் திருமேனியில் அணிந்த
ஆடை தாருங்கள்;
அதை விசிறி
அந்தக் காற்றே,
மாதவனைப் பிரிந்து தவிக்கும்
எனக்கு மருந்து;


பாலா லிலையில்
      
பாலகனாய்
ஆலிலையில் துயில் கொண்டவனே
என் துணையாகக் கனவு கண்டேன்;
அவனிடம் நான் என்
மனதைப் பறிகொடுத்தேன்;

ஆயர்பாடியில்
இடையர்களின்
இடையில் பிறந்தவன்,
ஆதிசேசன் மேல்
பள்ளி கொண்டவன்,
அந்தக் கண்ணனிடம் சென்று
இந்தக் கோதை விரக தாபத்தில்
தவிப்பதைச் சொல்லி,
அவன் கழுத்தில் இருக்கும்
குளிர்ந்த துளசி மாலையைக்
கொண்டு வந்து, என்
குழலில் சூட்டுங்கள்;
மாதவனின் அந்த மாலையே எனக்கு
மருந்து;

No comments:

Post a Comment