Sunday, November 25, 2018

பொன்மாலைப் பொழுதில் 41

313. நான் உன்னை விரும்புகிறேன்.
உனக்குப் பிடித்திருக்கு இல்லை எனச் சொல்வதிலென்ன தயக்கம் ?
இது தான் வெட்கமா ? நாணமா ? இதை நான் நம்பணுமா ?
சரி சில கேள்விகள், ஆம் இல்லை என்று சொல், புரிந்து கொள்கிறேன்
உண்ண உறங்கவிடாதென் உருவம் உன்னை உபத்ரவம் செய்கிறதா ?
அதையும் மீறிக் கண்ணயர கனவில் கொஞ்சி கதைக்கிறேனா?
என் அழகும் அறிவும் ஆற்றலும் அபலையுன் நெஞ்சை அபகரித்ததா
பார்க்குமெல்லாவற்றிலும் என்
பிம்பம் தெரிய பாவை உன்னுள் ஒரு பதற்றம் பற்றியதா?
யாருக்காகவும் என்னை விட்டுத்தரக் கூடாதென்றும், இனி நாமிருவரும் இணைந்தே செயல்படவேண்டுமென்றும், உன்
*மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா?*

312. அரண்மனையில் நீ பிறக்கவில்லை ஆனால் அரசகுமாரனாய்த் தான் எனை வளர்த்தாய்.
அதிகம் நீ கற்கவில்லை எனினும் எல்லாக் கலைகளும் நான் கற்க வேணுமென்று ஊக்குவித்தாய்.
பசியென்ற ஒன்று நான் அறியா வண்ணம் எனைப் பார்த்துப் பார்த்து உணவளித்தாய்.
குளிர் என்னை அணுகா வண்ணம் போர்த்திப் போர்த்தி வளர்த்தாய்.
நீ என்ன உண்டாய் எப்போது உறங்கினாய், நானறியேன்.
எந்தக் குறையும் இல்லாது எனை வளர்த்ததை மட்டுமறிவேன்.
இன்று இன்பக்கடலில் நான் நீந்தி விளையாட அன்று நீ எதிர்கொண்ட இன்னல்களை எண்ணித் தவிக்கிறேன்.
இன்று நான் விருட்சமாய் வளர்ந்து நிற்க அன்று என் விதைக்கு நீ
நீரூற்றியதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
இன்று என்னிடம் எல்லாம் இருக்கையில் நீ மட்டும் ... நீ இல்லையேல் நானேது ? என் ...
*உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே ....*

311. இப்பொழுதெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாய் இருக்கிறேன்.
தேவையில்லாத விஷயமெதிலும் தலையிடுவதில்லை.
கோபம் குறைத்துக் கொண்டேன்
யாராவது என்னை அடித்தால் கூட சிரிக்கப் பழகிக் கொண்டேன்.
குடிப்பதில்லை புகை போதை எல்லாம் மறந்தாகிவிட்டது.
இன்னும் என்ன செய்ய ? சொல்.
ஊருக்கு வெளியே ... தெரியும்ல, பழைய சிவன் கோவில், தினம் தொண்டு, திருப்பணி.
எல்லாரும் என்னோடு பாசத்தோடு பழகுகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் நீ தான் .
அடி திருத்தாததை உன் அன்பு ...
என் சினம் கட்டுண்டது உன் சின்னப் பார்வையில், சிரிப்பினில்.
இன்னும் எப்படி என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் ?
இப்போதாவது ... உன் செவ்வாய் திறந்து, ஏதாவது ஒரு வார்த்தை ...
*சொல்லாயோ சோலைக்கிளி*

310. கனவு காண்பதாய்க்  கனவு உமக்கு வந்ததில்லையா என்ன ?
ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை கேட்டதில்லையா நீர் ?
மகிழ்ச்சியான ஒரு செய்தியில் மனம் லயித்திருக்கையில்,
இன்னொரு நற்செய்தி வரலாமே.
ஒரு திரைப்படத்தில் இன்னொரு படம் தெரிந்தால் தப்பில்லை.
அட தொலைக்காட்சி பார்ப்பவரை
தொலைக்காட்சியில் பார்க்கிறோம் தானே.
சரி இப்போது மாலை ஏழு,
இந்தப் பொன்மாலைப் பொழுதில்
இன்றையப் பொன்மாலைப் பொழுதில்
*பொன்..மா..லைப்..பொழுது*


309. நினைப்பதெல்லாம் நடக்கிறது
இன்றில்லையேல் நாளை என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொட்டதெல்லாம் துலங்குகிறது.
சின்னச் சின்ன இன்னல்கள்,
இறை துணை வேண்ட இருந்த இடம் தெரியாது விலகுகிறது.
அகநானூறு தொடங்கி அனைத்து இலக்கிய நூல்களையும் கற்க
ஆர்வம் பிறக்குது.
ஆண்டவன் அருள் பரிபூரணமாக
எனக்கு அமைந்திருக்குது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி நவில ஆலயம் சென்றால்
கையில் வந்து விழுகிறது.
பத்திரப்படுத்திக் கொண்டேன், இது *ஒரு தெய்வம் தந்தப் பூ*


308. அடி பெண்ணே,
இங்கே பார், உன் கண்ணைப் பார்த்துப் பேசும் என்னைப் பார்.
ஆண்களை நம்பாதே
அவர்கள் சொல்வதில் ஐம்பது சதவீதம் கூட உண்மை இருக்காது.
அந்த மீதி ஐம்பதில் உண்மையின் அளவு நொம்ப சொல்பம்.
அழகுப் பெண்ணைக், உன்போல், கண்டால் போதும், சும்மா அப்படியே அளந்து விடுவார்கள்.
வானவில் என்றும் தேனிதழ் என்றும் நயனங்களால் நடனமாடும் நங்கை என்றும் ... நம்பாதே;
எங்காவது ஏதாவது மேய்ந்து விட்டு உன்னிடம் வந்து புருடா விடுவார்கள்,
காளிதாசன் நான், கண்ணதாசன் தான் என்றுக் கதை அளப்பார்கள்.
இங்கே பார் பெண்ணே, நான் அப்படிப்பட்டவனில்லை, நிஜம்.
நான் ... ராஜா ரவிவர்மா உனக்குத் தெரியுமா? கேள்விப்பட்டிருக்காயா?
இல்லையா ... நல்லது.
அவரோவியங்களும் என்னுடையது போலவே தத்ருபமாய் ...
சந்தேகப் பார்வை  சிந்தக்கூடாது
சொன்னால் நம்பு, உண்மை இது
*பூ வாசம் புறப்படும் பெண்ணே ... நான் பூ வரைந்தால்*

Friday, November 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 40


307. பிடித்தது, இணைந்திருந்தோம்
பின் என்னென்னவோ காரணம், பிரிந்து விட்டோம்.
பிரிந்ததும் விலகிச் செல்லாமல் ... புரியவில்லை, இதுதான் விதியா ?
ஒரேயிடத்தில் இருந்துகொண்டு, விலகி விலகி நின்று கொண்டு,
பாதை குறுக்கிடும் போதெல்லாம் சில சமயம் விலகி, பல சமயம் மனதுள் அலறி, முறைத்து, அனல் வார்த்தை வீசி, நெஞ்சைப் பொசுக்கி, ஐயகோ ...
நாலு பேர் சூழ இருக்கையில், உனை வெறுப்பேற்றி, உனக்கெது பிடிக்காதோ அதையே செய்து  ...
மனதுக்குப் பிடித்தவரிடத்தில்தான் கோபம் கொள்ள முடியுமாமே;
ஊடலும் ஒருவிதத் தேடல் தானாமே
மெல்ல மெல்ல உணர்கிறேன், என்னை மாற்றிக் கொள்கிறேன்.
ஒன்றாயிருந்தக் காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் சீண்டி சிரித்து விளையாடியதை எல்லாம் எண்ணி மகிழ்கிறேன்.
சிறுபிள்ளைத்தனமான என் செயல்களைக் குறையாகக் கருதாது ... எனை *மன்னிப்பாயா?*


306. பச்சை பசேல் புல்வெளி
நடுவில் வளைந்து வளர்ந்த ஒற்றை தென்னை மரம்
கீழே ஆறு இல்லை இல்லை நதி
என்ன வித்தியாசம் என்று கேட்க நினைத்து எப்போதும் போல் மௌனமாகவே இருக்கிறார்கள்.
சரி சுருக்கமாய் நீர், மிதக்கும் படகு.
துடுப்பு தவிர படகில் யாருமில்லை
நமக்குத் தனிமை வேண்டுமே.
லேசான தூரல், கொஞ்சம் குளிர்
பகல் முடிந்துப் பதுங்கும் பகலவன்
பின் மாலையில் உலா வந்தபடி நமை நோட்டம் விடும் பிறைநிலா
சரி என்ன தான் சொல்ல வருகிறான் பார்ப்போம் என்றுத் தொடர்ந்து படிக்கும் அவர்கள்.
இன்றாவது ஏதாவது சொல்வாயா என்றுன்னைப் பார்க்கும் நான்.
கைப்பேசியில் வந்த இந்த 'பச்சை பசேல் புல்வெளி' கவிதையைப் படிக்கும் நீ.
கூடவே ஒலிக்கும் பாடல்
*நீ......ல வானம்*


305. ஆரம்பத்திலிருந்தே என்னுளுண்டு இறுக்கம்.
அருகில் யார் வந்தாலுமொரு கலக்கம்.
நெஞ்சம் நிறையக் குழப்பம்.
எதைக் கேட்கவும் தயக்கம்.
என் அதிர்ஷ்டம், கிட்டியதுன் அறிமுகம்
உன்னாலென் உள்ளத்தில் உத்வேகம்.
அசரவைத்தது உன் விவேகம்.
எதைக் கேட்டாலும் விளங்குமாறு நீ வழங்கும் விளக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடும் நம் நெருக்கம்.
என் நெஞ்சமுழுதும் உன் ஆதிக்கம்.
இனி நீ சொல்வதே என் மார்க்கம்.
உன்னாலென் வசந்தகாலத் தொடக்கம்
இப்போதெல்லாம் நீ ஏது செய்தாலும் பிடிக்கும்.
ஏனெனில் என் நெஞ்சில் ...
*காதல் மயக்கம்*


304. பார்த்து, சிரித்துப் பேசி, பிடித்துப் போக நெருங்கிப் பழகி;
தெரிந்தும் தெரியாமலும் இடித்து முட்டி முறைத்து விளையாடி;
ஆளிருந்தால் விழியால் பேசி ஆளில்லாப்பொழுது விரலால் பேசி;
முத்தத்திற்கு கணக்கு வைத்து
சத்தமின்றி இருட்டில் பரிமாறி;
புதுப்புது ஆடை பரிசாய்த் தந்து, அணியப் பார்த்து வியந்து வியர்த்து
ஆடை பாரம் என்பதை உணர்ந்து, நீரை வீணாக்காது சேர்ந்து நனைந்து;
இன்னும் தாமதிக்க தாத்தா பாட்டி ஆக நேரிடுமென்று பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து;
கோவில் தேவஸ்தானமாம் என்றிழுக்க
முதலிரவு தானே கூடாது, இது எங்கட்கு முதலிரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
சரி சரி உன்னிடம் யாராவது இதுபற்றிக் கேட்டால் ... நீ
*என்ன சொல்லப் போகிறாய் ?*

303. அடி என்னருமைக் காதலி,
நேற்றென் உறக்கத்தில் ...
வாரணங்கள் வரவில்லை,
தோரணங்கள் நாட்டப்படவில்லை,
நாளையா மணநாள் ? தெரியலை.
காளை போன்றுதான் இருக்கேன் ஆனால் பந்தல் புகவில்லை,
மந்திரங்கள் சொல்லப்படவில்லை.
மத்தள ஓசை இல்லை
சங்கொலி முழங்கவில்லை
நானுன் கைத்தலம் பற்றியது நினைவிருக்க, தீ வலம் இல்லை,
அம்மி மிதிக்கவில்லை
அருந்ததி பார்க்கவில்லை,
எனினும் ஏழேழ் பிறவிக்கும் நீயே என் காதலியாய், ஆருயிராய், என் எல்லாமுமாய் இருப்பதாய்க்
*கனா கண்டேனடி ... தோழி*

                              (நன்றி: ஆண்டாள்)

302. எந்தெந்த வேதிப்பொருட்களை எப்படி இணைத்தால் என்ன கிட்டும் என்று உனக்குத் தெரியும்.
கணிதத்தில் எதைக் கேட்டாலும் விடை சொல்லி நிரூபிக்க உனக்குத் தெரியும்.
வார்த்தைகளை வளைத்து வர்ணங்களை வாரியிரைத்து வசீகரமாய்க் கவிதை ஓவியம்  படைக்க உனக்குத் தெரியும்.
மழை பெய்யப்போகும் நேரம், அளவு; பறவைகள் சிறகுகடித்துப் பறக்கக் காரணம் இவையெல்லாம் கூட உனக்குத் தெரியும்.
நாம் பேசுகையில் சிரிக்கையில் நடக்கையில்  உடலினில் எத்தனை தசைகள் இயங்குகிறது என்று உனக்குத் தெரியும்.
சரி, முத்தமிடுகையில்? தெரியாதா?
நீ உணராத இன்னொரு விஷயத்தை உரைக்கவா ?
*சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு*