Showing posts with label பொன்மாலைப் பொழுதில். Show all posts
Showing posts with label பொன்மாலைப் பொழுதில். Show all posts

Wednesday, January 1, 2020

பொன்மாலைப் பொழுதில் 69

536. பார்த்துப் பரவசிக்க ஆளில்லை எனினும்
நிலவு தினம் ஒளிரும்.
கேட்டு ரசிக்க ஆளில்லை எனினும்
பறவைகள் தினம்  பாடும்.
ஓடி ஆடி விளையாட ஆருமில்லை எனினும்
கரை மேல் முட்டி மோதி விட்டுத் திரும்பும் அலைகள்.
நுகர்ந்து ரசிக்க சூடி மகிழ ஆளில்லாப்போதும்
தினம் பூக்கும் பூக்கள்.
கூட இருந்து கவனிக்க  ரசிக்க பாராட்ட ராதை கோதை இல்லை எனினும்
*கண்ணன் வந்து பாடுகின்றான் காமெல்லாம்*


534. தமிழ் மாதம் மொத்தம் 12.
அழகர் ஆற்றில் இறங்க, கூடவே தேரோடும் திருவிழா, மதுரையில், சித்திரையில்.
விசாகம், முருகப் பெருமானுக்கு ஏற்ற மாதம், வைகாசி.
நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும் ஆனி மாதம்.
ஆடிப்பெருக்கு நடக்கும், மனைவியை பிரிந்து கணவன் மகிழ்ந்திருக்கும் மாதம்,  ஆடி.
விநாயக சதுர்த்தி கொண்டாடப் படும் மாதம் ஆவணி.
நவராத்திரி விஜயதசமி எல்லாம் கொண்டாடப்படும் புரட்டாசி.
தமிழ்நாட்டில் மழை பொழியும், தீபாவளியும் வரும், ஐப்பசி மாதம்.
தீபம் ஏற்றி சிவனை வழிபட, கார்த்திகை மாதம்.
திருவாதிரை கழி, பரமபத வாசல் திறப்பு, ஆண்டாள் திருப்பாவை பாடப்படும் இது மார்கழி மாதம்.
சிவராத்திரி கொண்டாடும் மாசி மாதம்.
உத்திரம் முருகனுக்கு உகந்த நேரம், இது பங்குனி மாதம். 
11 தானே வந்திருக்கு, இன்னும் ஒன்னு ... என்னது... ம்ம்ம்,
பொங்கல், கரும்பு கூடவே
*பூ பூக்கும் மாசம் தை மாசம்*


533. முதல் நாள்,
சிரித்தாய், சிரித்து வைத்தேன்.
பிரிதொரு நாள் மணி கேட்க, சொன்னேன்.
டெய்ரி மில்க் சாக்லேட் தர, வாங்கி வைத்துக் கொண்டேன்.
கை நீட்டச் சொல்லி லட்டு பாதி பிட்டுத் தந்தாய், பிடித்திருந்தது.
பிறந்த நாள் பரிசாய் கடிகாரம் தர, கையில் மருதாணி வைத்திருந்த- தால் 'கட்டி விடு' என்றேன்.
கார்த்திகை நன்னாளில், மல்லிப்பூ வாங்கித் தந்தாய்.
கூந்தலில் சூடி விட ஏதுவாய் திரும்பி நின்றேன்.
எல்லாம் சரி, படுபாவி, இப்படியா ...
ஐயோ, உதடு எரிகிறதே. இவ்வளவு காரமா?
எந்தக் கடையில் மிளகாய் பஞ்சி தின்றாயோ,
*மலைக் கோவில் வாசலில் ...*


532. உறக்கம் கலைய, கனவு மறக்குது.
உணவு உண்ண, பசி மறையுது.
பகலவன் வர, பனி விலகுது.
கவலை சூழ காரியம் தாமதமாகுது.
காலம் சாதகமானாலோ, நினைத்த- தெல்லாம் நடக்குது.
வெற்றி, நெஞ்சில் ஒரு தைரியம் விதைக்குது.
குழப்பங்கள் குறையுது, அமைதி நிறையுது.
இதற்கெல்லாம் காரணம் நீயென்று உணர உன்மேல் ஆசை பிறக்குது.
நீ என்னிடம் பேசியவற்றை எண்ணி எண்ணி உள்ளம் பூரிக்குது
கூடவே, *பொல்லாத என் இதயம் ... ஏதோ சொல்லுது*

531. சொன்னது ஒன்று செய்தது வேறு என பல இடங்களில் நடந்திருக்கு.
*
சீதையைத் தேடு என்றால் தீயவன் தீவில் தீ வைத்தான் அநுமன்.
மந்திரம் தேவையெனில் மட்டும் பயன்படுத்த சொன்னால், உடனே உபயோகித்தாள் குந்தி.
நெஞ்சுக்கு குறி வை என்றால் தலை நோக்கி அம்பெய்து ஏமாந்- தான் அர்ச்சுனன் அண்ணன்.
பரி வாங்கப் பணம் தந்தால், இவர் கோவில் கட்ட செலவிட்டார்.
மிருதங்கம் கற்க அனுப்பினால் நாதஸ்வரம் கற்றுத் திரும்பினார்
*
நீ இதுல இன்னொரு கேசு, லூசு.
அறிவில்லே, காது கேட்காது? நான்
என்ன கேட்டே, நீ என்ன தர்றே?
*மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை?*


529. மாலை வீடு திரும்பும் போது
'அப்...பா' என்று ஆசையாய் அழைக்கிறாய்.
பளிச்சென்று முகம் கழுவி பூ சூடி ஸ்வாமி அறையில் ஊதுபத்தி ஏற்றி வைத்து
பக்தி மணம் பரப்புகிறாய்..
அம்மா தந்த காபியை கொண்டு வந்துத் தந்து
'சூடா இருக்கா?' என்று தலை ஆட்டி வினவுகிறாய்.
சொல்லத் தேவையேயில்லாது நீயே அமர்ந்து பாடங்களை படிக்கிறாய்.
தொலைக்காட்சி ஓசை கூட்டினால் 'அப்பா ...' என்று கூவி
இடையில் கை வைத்து நின்றபடி  அதட்டுகிறாய்.
கூட அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்கிறாய்.
பரதம் ஆடுகிறாய்; தேவாரம் திருப்புகழ் எதைக் கேட்டாலும் சலிக்காது பாடுகிறாய்.
சமைத்தவைகளை வரிசையாய் கொணர்ந்து பரிமாறுகிறாய்.
இரவு மணி பத்து ஆனால் போதும்,
எனை உறங்கச் சொல்லி அருகிலமர்ந்து *ஆனந்த யாழை மீட்டுகிறாய்.*

528. ராமன் வரும் வரை இவ் அரக்கன் தனை அண்டாதிருக்க
வழி வினவினாள் சீதை த்ரிசடையிடம்.
போர் வேண்டாம், சரிபங்கு அரசு கிட்ட
வேறு வழி உண்டா என வினவினான் தருமன்.
மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று மடியும் தனை இதிலிருந்து விடிவிக்க
வழி வினவினார் பட்டினத்தார்.
வீடு வாசல் சொத்து இழந்த கோவலன்
பிழைக்க வழி தேடி மதுரை போவோமா என்று வினவினான்.
நல்வழியை இத்தனைப் பேர் தேட
பூவே, மேகமாய் மாறி நான் அருகே வர
உன் தாகம் தீருமா? சோகம் மாற இதுவே நல்வழி ஆகுமா?
செவ்வாய் திறந்து சொல்வாயா? *செம்பூவே ... பூவே*

Thursday, December 26, 2019

பொன்மாலைப் பொழுதில் 68

527. சில விஷயங்கள் படிப்படியாய்,
பிறை வளர்ந்து வளர்ந்து முழு நிலவு ஆவதுபோல்.
சில விஷயங்கள் சடாரென்று மாறும்.
செடிக்கு நீரூற்றிவிட்டுத் திரும்ப, பூ பூத்து 'அட' என சொல்ல வைக்கும்.
இராமன் காலடிக்காக எத்தனை வருடமோ, காத்திருந்தாள் அகலிகை.
ஆரவாரமின்றி வந்து அலேக்காக தூக்கிச்சென்றான் சீதையை.
கூந்தல் முடியக் காத்திருந்தாள் த்ரௌபதி.
பகலோடு பகலாக பணக்காரர் ஆனார் சுதாமா.
இத்தனை கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க ...
முன்னறிவிப்பு ஏதுமின்றி
*வெண்ணிலாவின் தேரிலேரி காதல் தெய்வம் நேரில் வந்தாளே*


524. பஞ்சவடியில் லக்குமன் சீதையிடம் சொன்னது,
'ராமனை வீழ்த்த யாராலும் முடியா என்பது உங்கட்குத் தெரியாதா?'
சமாதானம் பேச சம்மதித்தானே, போர் நிகழும், அதர்மம் அழியும்
என்று கண்ணனுக்கு  தெரியாதா?
காய்ந்த அவலைத் தந்ததும் தம் நிலை பரந்தாமனுக்கு புரிந்திடும்
என்று கல்யாணிக்கு தெரியாதா?
பறவைகளை விரட்டுவாள், காட்டு யானையைக் காண அலறுவாள்
என்பது முருகனுக்கு தெரியாதா?
நெஞ்சில் கை வைக்க, பதட்டத்தில் ராம் மயங்கி விழுவான் என்பது ஜானுவிற்கு தெரியாதா?
நீ பார்க்காது போனாலும்
பேச்சு தவிர்த்தாலும் ...
எனக்கு உன் மனம் தெரியாதா; அட
*வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?*


523. யாருக்கு தான் ப்ரச்சனையில்லை
எதை எடுத்தாலும் ஏற்ற இறக்கம் இருக்கும் தானே.
பிடித்திருந்தது பழகினோம், விதி விளையாட விலகியிருக்கோம்.
எனை எண்ணியபடி நீ அங்கு.
உன் கொஞ்சல் கெஞ்சல் கோபம் தாபம் அனைத்தையும் அசை போட்டபடி நான் இங்கு.
சம்பாதி சேமி காலம் கனியும் வரை காத்திரு, உன்னிடத்தில்.
உனை எதிர்பார்த்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உனக்காக ... நான் என்னிடத்தில். 
உருவம் மாறினும்
ஊர் உலகம் எதிர்த்து நின்றிடுனும்
உனை விட்டுத் தர மாட்டேன்
விலகிப் போக மாட்டேன்.
நேரம் கிட்டும் போது,
நீ இந்தப் பக்கம் வரும் போது ...
போதும், *ஒரே ஒரு கண் பார்வை*


521. ராவணனை வென்ற ராமன் சொன்னது, 'சீதையை இங்கழைத்து வா'.
துரியோதனன் கர்ணனிடம் 'முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?'.
கிழம் வள்ளியிடம் 'தாகம் நீங்கியது மோகம் பொங்குது, என்னருகே வா'.
கல்யாணி கணவனிடம் சொன்னது 'கண்ணனை தரிசித்து விட்டு வா'.
எல்லாம் இழந்து கோவலன் சொன்னது 'பிழைக்க மதுரை போம் வா'.
மோடி சீன அதிபரிடம் சொன்னது 'மகாபலிபுரம் செல்வோம் வா'.
ஜானு ராமிடம் 'இன்று உறங்காது எங்காவது சுற்றித் திரிவோம் வா'.
நீ மட்டும் ... தள்ளித் தள்ளி நின்று கண்ணாலே பேசியது போதும்
*பூமாலையே ... தோள் சேர வா*


520. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*


519. பசிக்கும், உண்ணத் தோன்றாது
இரவு வரும், உறக்கம் வராது
இப்ப என்ன செய்யணும் என்று எப்போதும் எண்ணி குழம்பும் மனம்
*
தனக்குள் தானே பேச நேரிடும்
காணும் வரை கலவரம்
கண்டதும் பேசப் பிரியப்படும்
கண்கள் மோத எல்லாம் மறந்திடும்
*
கவிதை சுரக்கும், அன்பு பெருகும்
யாரைப் பார்த்தாலும் சிரிக்கத் தோணும்.
புயல் பூவாய் மாறி பொருமை காக்க நேரும்.
*
எல்லாம் காதல் செய்யும் மாயம்
தூக்கம் தூர விலகி நிற்க, உன்
*விழிகளின் அருகினில் வானம்*


518. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்டு, கேட்ட பொன் மான் சீதைக்குக் கிட்டவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
உலகை சுற்றி வந்து பழம் கேட்டும் முருகனுக்குக் கிடைக்கவில்லை.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அட சும்ஸி ஆயில் அனுப்பக் கேட்டும் இன்னும் வரவில்லையே.
எனக்கு மட்டும் ... *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

Thursday, December 19, 2019

பொன்மாலைப் பொழுதில் 67

515. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
குருவாயூரில் நாராயண பட்டத்ரி இயற்றியது நாராயணீயம்.
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

514. உண்மை தான், உனைக் காண விரும்பவில்லை,
ஆனால் எந்நாளும் வெறுத்ததில்லையே.
ஆம் சுமுகமாய்ப் பேசத் தெரியலை,
எனினும் வம்பெதற்கு என்று ஒரு போதும் எண்ணியதில்லை.
நீ எழுதியவற்றை தினம் பலமுறை படிப்பதுண்டு.
பதிலனுப்பணும் என்று ஏனோ தோன்றியதில்லை.
ஆனால், மறுக்க முடியாது.
நிதம் கவிதை நெஞ்சில் சுரக்குது,
கண்முன் உனைக் காணும் போது.
வானவில் என வர்ணிக்க ஆசை இருக்கு,
வண்ண உடைகளில் உலவும் உனைப் பார்க்கும் போது.
மனதுள் ஒரு புத்துணர்ச்சி ... உதடு *உன் பேரைச் சொல்லும் போது*


513. முதலில் வேலை என்று தான் எண்ணினேன்.
பின் பணத்தின் பின்னே பறந்தேன்
நல்ல இடம், வருமானம் என்பதை உணர்ந்தேன், எனை மறந்தேன்.
கார் பங்களா என்று வசதியோடு வாழத் தொடங்கினேன்
அகப்பட்டுக் கொண்டதை உணரவே  மறுத்தேன், பணத்தால் மறைத்துக் கொண்டேன்.
போதும் என்று மனம் எண்ணும் போது திரும்பி வர முடியாதுத் தவித்தேன்.
என்னை விடு, நீ பாடு ஆடு கொண்டாடு
ஆனால் ... மறவாதிரு
உனக்கென்றோர் வீடு, உன்னுடைய மக்கள், உன் நாடு
உனை எதிர்பார்த்தபடி,
எங்கோ தூரத்திலிருந்து உனை அழைத்தபடி
கேட்குதா ...
*உந்தன் தேசத்தின் குரல்*

512. எல்லாம் நீ செய்த மாயம்,
இது உன்னால் மட்டும் முடியும் மகத்துவம்
என்னுள் வேண்டுமுன் ஆதிக்கம்
நீ கூட இருந்தால் போதும், என் இலட்சியம் எளிதாய் நிறைவேறும்
உன் சகவாசம் என் வெகுமானம்
அநுதினம் நான் உன் வசம்
என் மேல் வீசும் உன் வாசம், நீ
சொல்வதே எனக்கு திருவாசகம்
உன்னருகில் எனககோர் ஆசனம்
போதும், எனை அணுகாது சோகம்
பக்கமாகிப் போகும்  வானம்
இன்று
நான் *காணும் யாவிலும் இன்பம்*

511. பெருமாள் அவதாரங்கள் பத்து
நவராத்திரி நாட்கள் ஒன்பது
திசைகள் எட்டு
உலகில் கண்டங்கள் ஏழு
முருகனுக்கு முகங்கள் ஆறு
பஞ்ச பூதங்கள் ஐந்து
இந்து மதத்தில் வேதங்கள் நான்கு
சாஸ்த்ரி பிறந்தது அக். இரண்டு
*கற்பூர பொம்மை ஒன்று*

510. காலை சீக்கிரம் விழித்திடுவேன்.
இப்போல்லாம் 7 மணி ஆனாலும் கட்டிலை விட்டு எழ முடிவதில்லை.
புத்தகத்தை தலை கீழாய் வைத்துப் படிக்கக் கூடாதாமே.
உணவு பரிமாறிய பிறகே உண்ண வேண்டுமென்பது சட்டமா என்ன?
குடிக்கத்தந்த தண்ணிய ஏதோ ஞாபகத்துல தலைல ஊத்திக்கிட்டா அவ்ளோ பெரிய தப்பா என்ன?
இரவாடையில் வரக் கூடாதாம், உடை மாற்ற மறந்துட்டேன் என்றால் மன்னிக்க வேண்டியது தானே.
ம்ம் ... என்னவோ ஆகப்போறேன்னு அப்போவே நெனச்சே ...
உன்னை எப்போ பார்த்தேனோ ...
'எப்போ?'
*'அதுவா ... அதுவா ...'*

509. கூனி உண்மையில் கைகேயிக்கு தோழியா எதிரியா?
இள இராமனை தன்னோடு அனுப்ப மகரிஷி கேட்டது முறையா, தவறா?
தன் பிழை உணராது கௌதமர் அகலிகையை சபித்தது சரியா?
சூர்பனகை திட்டம் ராமனை அடைவதா தமையனை மாட்டுவதா?
துர்வாசரை  சகுந்தலை கவனிக்- காதது காதலாலா மோகத்தாலா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றமே என்றது ஆணவமா அகங்காரமா ?
நாலு பேர் நல்லாயிருக்க என்ன வேணா செய்யலாமா கூடாதா?
சரி சரி கடைசியாய் ஒரு கேள்வி
*உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?*

508. அடி என் ப்ரிய சகி,
அருகில் வந்துன் செவி மடி.
நேற்று நவராத்திரிக்கு முதல் நாள்.
நான் அவனைக் கண்ட நன்னாள்.
நீல தாக்ஷாயிணி கோவிலுக்குப் போயிருந்தேனடி.
என் நெஞ்சு களவு போகுமென்று அறியேனடி.
நீலச் சட்டை, நெற்றியில் திருநீறு, சாந்தப் பார்வை.
பார்த்ததுமே தன் நிலை மறந்து சரிந்தாள் இப்பாவை.
என் நிறம் ஒத்தவன்; இந் நங்கை நெஞ்சில் காதல் தீயை வைத்தவன்
தேவாரமா பாடினான்? தேனை அல்லவா என் காதில் ஊற்றினான்;
கூச்சமில்லாது என் கரம் பிடித்து சுண்டல் தந்ததாய் நினைவு.
உறங்கவிடாது இரவில் கனவில் கூட அவன் வரவு.
யார் என்ன என்றறிய ஒர் உபாயம் சொல்லடி.
*என் நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி?*

Thursday, December 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 66

507. சிவன் வீற்றிருப்பது கைலாய மலையிலே
பெருமாள் பாற்கடலிலே, பாம்புப் படுக்கையிலே
அடுத்த நாற்பது வருடம் அத்தி வரதரோ நீரின் அடியிலே
பிள்ளையார் ஆல, அரச மரத்தின் நிழலிலே
நபிகள் நாயகம் அரேபியாவிலே
இயேசு பிறந்தது ஜெருசலத்திலே
ம்ம்ம் ... அதெல்லாம் விடுலே
போன செமஸ்டர் வரை கூட என் கவனம் படிப்பிலே
இப்போல்லாம் எதைப் பார்த்தாலும் கவிதை வருதே தப்பில்லைல,
படுபாவிப்பய என்று  எனைப் பார்த்துச் சிரித்தானோ,
அன்று முதலே என் *நெஞ்சினிலே நெஞ்சினிலே ... ஊஞ்சலே*


506. அதெல்லாம் ஒரு காலம் ...
தாமதமானால் அபராதம் தருவதும்,
ஆளில்லா நேரத்தில் கடனடைத்து கணக்கு நேர் செய்து கொள்வதும்
வட்டி கேட்டு வாதிடுவதும் ... ம்ம்ம்
*
அதெல்லாம் ஒரு காலம் ...
விரல்படாது வாயிலிருந்து வாய்க்கு பண்டமாற்று பரிவர்த்தனையும்,
நிராகரிக்கப்பட்டது திரும்பப் பெற்று நிலுவையில் வைக்கப்படுவதும் ...
*
அதெல்லாம் ஒரு காலம் ...
பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து, முகர்ந்து ரசித்து, சிரித்து,
படிப்பதாகக் கூறிவிட்டு அதை மட்டும் செய்யாது ஊர்க்கதை எல்லாம் ரகசியமாய்ப் பேசி ... ம்ம்ம்
*
இப்போது இணைந்தில்லாவிட்டால் என்ன? எப்படியிருக்கிறாய் என்று கூடவா கேட்கக்கூடாது, உன் தோழன் கேட்கிறேன் சொல்லிடு
எப்படியிருக்கிறாய் ...  *இணையே, என் உயிர்த் துணையே ...*


505. ஔவையார் கேட்டதோ பிறவாமை வேண்டும்
இல்லையேல் சிவமே உமை மறவாமை வேண்டும்.
கும்பகர்ணன் இராமனிடம் கேட்டுக் கொண்டது
தன் தலை கொய்து கடலில் வீசப்பட வேண்டும்.
தூதில் கண்ணன் துரியோதனிடம் கேட்டது
பாண்டவர்க்குப் பாதி அரசுரிமை வேண்டும்.
பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்திப் பாடியது
பல்லாண்டு பல்லாண்டு நீர் வாழ வேண்டும்.
ஆண்டாள் ப்ரார்த்தித்ததோ மழை பொழிய, மாடு கன்று நிறைய, வயல் விழைய வேண்டும்.
பாரதியார் பராசக்தியிடம் கேட்டது
தென்னை தென்றல் கேணியோடு காணி நிலம் வேண்டும்.
எல்லாரும் தமக்கு வேண்டியதை கேட்க ... ம்ம்ம், நானும் ... எனக்கு ...
*ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்*


504. காலை கண் விழிக்கும் போதே இன்று நல்ல நாள் என்று உணர்ந்தேன்.
பறவைகள் இரண்டு  கொஞ்சி விளையாடுவதை சாளரத்தின் வழியே கண்டேன்.
காய்ந்து போனச் செடியில் ஒரு ரோஜா மொட்டு விட்டிருப்பதை ரசித்தேன்.
மெல்லிய சாரல் மழையில் காடு வீடு எல்லாம் நனைய மனம் மகிழ்ந்தேன்.
அருகிலெங்கோ கோவில் மணி ஒலிக்க நல்ல சகுனம் என்பதை உணர்ந்தேன்.
கொஞ்ச தூரத்தில், மழலையரோடு மழலையாகிக் கொஞ்சிப் பேசும்  பெண்ணே உன்னை ...
நிஜத்தைச் சொல்லவா, *நிலத்தில் நடக்கும் நிலவைக் கண்டேன்*.


503. இப்பொழுதெல்லாம் ...
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறேனாம்.
அழகாயிருக்கேனா என்று ஆயிரத் தெட்டு முறை கேட்கிறேனாம்.
பொறாமையில் என் அறைத்தோழி தினம் தினம் புலம்புகிறாள்.
கல்லூரியில் நுழைந்ததும் என் கண்கள் உனைத் தேடுவதை மறைக்க முடியாது தவிக்கிறேன்,
உனைப் பார்த்தவுடனேயே என்னுள் தோன்றும் அச்சம் மடம் நாணத்தை ரசிக்கிறேன்.
நீ அருகில் வந்து பேசமாட்டாயா என்று ஏங்குகிறேன், இறைவனை வேண்டுகிறேன்.
நீ சம்மந்தப்படாத எதையும் செய்ய என் மனம் விரும்புவதில்லை.
உன்னோடு சேர்த்து ஊர் சுற்ற நான் தயங்குவதில்லை.
ம்ம்ம், இப்போதெனக்குப் புரிகிறது
இந்தக் காதல் என்பது
*இதுதான் இதுதான் இதுதான்*


502. புத்தகம் படிக்கும் தோரணையில் ஒருநாள்  அமர்ந்திருந்தேன்.
பூவை அவள் புன்சிரிப்போடு எனை நோக்கி வந்தாள்.
கண் சிமிட்டி வரவேற்க, காற்றில் முத்தமிட்டபடி அருகிலமர்ந்தாள்.
என்ன புத்தகமெனக் கேட்டவளுக்கு அட்டையைக்^  காட்டினேன்.
'ஓ, வாலி எழுதியதா, சரி அவதாரம் ன்னா என்ன?' வினவினாள்.
'கடவுள், ஒரு பெரிய சக்தி, எல்லாம் அறிந்தவர்' விடையுரைத்தேன்.
'பொய், கப்சா, ரீலு' என்றவள் இடை கிள்ளினேன்.
விரல்கள் வழி மறிக்கப்படும் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.
'டேய் சின்ன வயசுல உங்கம்மா உன்னை அவதாரம்னு தானே திட்டுவாங்க' என்றவள் நக்கலடிக்க
நான் முறைக்க, அவள் ஓட,
நான் துரத்த, அவள் நழுவ
நான் விரட்டி மடக்க, அவள் எனைக் கட்டியணைத்து மித்தமிட ...
ம்ம்ம் ... இதெல்லாம் நடந்ததே
இன்று இந் நாளிலே
என் கனவிலே
*புலராத காலைதனிலே ...*


501. சேதி வந்ததும் கிளம்பிவிட்டேன், எனக்காக நீ காத்திருப்பதால்.
குங்குமச் சிவப்பு நிறப் புடவை, உனக்குப் பிடிக்குமதனால்.
கொலுசு தேடி எடுத்து அணிந்து கொண்டேன், நீ தந்ததென்பதால்.
மல்லிகை சந்தனத்தோடு எனைக் கண்டதும் நீ கவிதை சொல்லலாம். 
மருந்தால் சரியாகா விஷயங்கள் மறந்தால் சரியாகும் தானே.
அந்த சண்டையெல்லாம் மறந்து விட்டேன், நீயும் மன்னித்துவிடு.
பாவை என்னோடு பழையபடி பழகு. பேசிச் சிரித்துச் சிநேகி.
கூடலில் முடியுமெனில் ஊடல் கொள்.
இனி உயிருள்ள வரை ... நான்
*உனக்காக வாழ நினைக்கிறேன்*

Sunday, November 3, 2019

பொன்மாலைப் பொழுதில் 65

500. கைகேயி கேட்ட வரத்தினால் தசரதன் கலங்கினான்.
சீதை கடத்திச் செல்லப் பட்டதை உணர்ந்து  இராமன் கலங்கினான்.
இன்று போய் நாளை வா என்றதும் இராவணன் கலங்கினான்.
கர்ணனின் வீரத்தைக் கண்டு அர்ச்சுனன் துரோணர் கலங்கினர்.
இதிகாசத்தில் சுத்தமான வீரர்கள் நிறைய கலங்கியிருக்கின்றனர்.
ஐ மீன் ... வீரர்கள் விசும்பி ... ஆனால் ... நீ ~மா~ வீரன் இல்லையே, பின்னே உனக்குள் கலக்கமேனோ?
*கண்களில் என்ன ஈரமோ?*


499. அபூர்வ ராகங்கள் ல வரும் 'எங்கப்பா யாருக்கு மாமனாரோ அவரோட மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் ன்னா அப்போ அவருக்கும் எனக்கும் ...' புரிலைல,
காக்கா கா கா ன்னு கத்தறதுனால நாம காக்கா ன்னு கூப்டுறோமா இல்ல நாம காக்கான்னு கூப்டுற- தால காக்கா கா கா ன்னு ...  புரில?
பைத்திய சாலைல பைத்தியங்க- ளுக்கு வைத்தியம் பார்க்குற பைத்திய வைத்தியருக்கு பைத்தியம் புடிச்சதுன்னா அந்த பைத்திய வைத்தியருக்கு வைத்தியம் பார்க்க ... புரியலியா?
இதெல்லாம் புரியலிய, அப்போ *நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னால் புரியுமா?*


498. எத்தனை நாள் தான் சண்டையிடப் போகிறீர்கள் ?
இன்னும் எத்தனை நாள் தான் முறைத்துக் கொண்டு திரியப் போகிறீர்கள் ?
உமக்கென்றிருப்பது எமக்கெதற்கு? நாங்கள் ஆசைப்படுவதில்லை.
எம்முடையது எதன் மீதும் நீர் உரிமை கொண்டாடுவது முறையில்லை.
பேசுவோம் பழகுவோம் நல்ல வண்ணம் வாழ முயல்வோம்.
அடிதடி சண்டை எதற்கும் தீர்வு ஆகா.
அமைதியாய் இருப்பதற்கு கோழை என்று கொள்ளலாகா.
உதவுகிறோம் உபத்ரவம் வேண்டா.
சேர்ந்தே உயர்வோம் சீண்டல் வேண்டா.
எங்கள் வாளும் வெட்டும் எங்கள் குண்டும் வெடிக்கும்.
சண்டைக்கு சண்டை தீர்வல்லவே.
*உயிரெல்லாம் ஒன்றே*


497. அதெல்லாம் ஒரு காலம்,
புது பேனா, உன்னிடம் தந்து எழுதிப் பார்க்கச் சொன்னதும், என் பெயரை நீ எழுதிப் பார்த்து, நல்ல ஸ்மூத்தா எழுதுது என்றதும்,
அதெல்லாம் ஒரு காலம்,
புது சட்டை அணிந்து, ஒடிவந்து காட்டி எப்படிகீது என்று புருவம் உயர்த்திக் கேட்டதும், இரு விரல் கோர்த்து நீ O காட்டியதும்,
புது கொலுசணிந்து கால் மேல் கால் போட்டமர்ந்து ஆட்டி ஆட்டி நீ ஓசை எழுப்ப நான் கண்ணடித்தும்,
அதெல்லாம் ஒரு காலம்,
நான் கையில் வாட்ச் கட்டியிருக்க ஐந்து நிமிடத்திற்கொருமுறை மணி என்ன என நீ கேட்டு இருவரும் சிரித்ததும்,
அதெல்லாம் ஒரு காலம்,
காதல் நெஞ்சில் காலூன்றி கனவு பல தந்த காலம்
அன்பு பாசம் அக்கறை நட்பு எல்லாம் ஒன்றாய்க் கலந்திருந்த ஒரு ... ஒரு சுகானுபவம்.
ஒருநாள் மட்டும் உரசித் திரிந்து மறப்பது அல்ல காதல்
அது மழைச் சாரல், தென்றல், தீங்கிழைக்காப் புயல் மாசற்றப் புனல். என்றும் தொடரும் நிழல்.
இன்று நாம் அருகருகே அமர்ந்து பேச முடியாதென்றாலும்
இரு வேறு இடத்தில் ~பிரிந்து~ இருந்தாலும் ...
நாம் என்றும் ஒன்று தானே
இன்றும் என்னுள் நீ, உன்னுள் நான் உண்டு தானே.
நம்முள் நாம் பாதி பாதி தானே
*நீ பாதி, நான் பாதி ... கண்ணே*


496. முனிவரின் வேடத்தில் வந்து தானே கடத்திச் சென்றான் சீதையை, தான் யார் என்று செல்லாமலேயே.
தவறு தான், யார் ஏன் எதற்கு என்றேதும் சொல்லாமல் மறைந்திருந்து தானே அம்பெய்தினான் ராமன்.
கண்டதும் சிநேகித்துக் கொண்டேனே துரியோதனன், கர்ணன் தான் யார் என்று செல்லாமலேயே.
அர்ச்சுனன் பீமனையும் யார் என்று செல்லாமலேயே ஜராசந்தனுடன் போரிட அழைத்துச் சென்றான் கண்ணன்.
அதற்காக ... இப்படியா ...
நேருக்கு நேர் நின்று பேசாது, பிடித்திருக்கா இல்லையா எனக் கேட்காது, குறுகுறுவென்று
*சொல்லாமலே ... யார் பார்த்தது ?*


494. கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும், பின்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
காலம் கனியும் வரை கனவு கண்டிரு கடவுளைத் துதித்திரு.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*

Tuesday, October 22, 2019

பொன்மாலைப் பொழுதில் 64

492. வாரணம் ஆயிரம் சூழ வந்து நாரணன் தன் கைத்தளம் பற்றியக் கனவு கண்டாள் ஆண்டாள்.
நாலைந்து நரிகள் சூழ இடையில் மான் ஒன்று நின்று தவிக்க, கருங் காளையொன்று தனைக் காத்த கனவைச் சொன்னாள் ராதை.
காத்திருந்தேன்,எதிர்பார்த்தேன், வருவான் என்று நம்பியிருந்தேன், வந்தான் ... தாடி மீசையோடு, சிங்கம் போல் ... எனக்காக, இந்த ஜானுவிற்காக ராம் வந்த கனவு சொன்னாள்.
ம்ம்ம் ... இதெல்லாம் சரி தான்,
ஆனால் நான் ஆரம்பத்திலிருந்து  இப்படியில்லையே இப்போது என்ன ஆயிற்று என்று யோசித்தபடியே,
என்ன இது என்ன இது என்று குழம்பியபடியே உறங்கிப்போக
அப்போது ... அட இது கனவா? இதுதான் அதுவா ?.
கா வில் ஆரம்பிக்க ல் லில் முடிய ...
*காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*


491. ஐயனே பிறவாமை வேண்டும், பிறந்தால் உமை மறவாமை வேண்டியது ஔவையார்.
நா தங்கள் நாமம் செப்ப வேண்டும், கை தங்களைக் கும்பிட வேண்டும், கால் தங்கள் சேவையில் ஈடுபட வேண்டியது அனுமன்.
ஹே பண்டரிநாதா தாங்கள் இங்கேயே தங்கி  பக்தர்கட்கு அருள வேண்டியது துகாராம்.
மழை பொழிய, வயல் விழைய, கொட்டில் நிறைய நல்லோர் வாழ வேண்டியது ஆண்டாள்.
அவரவர்க்கு வேண்ட ஆயிரம் இருக்க, எனக்கு ... ம்ம்ம் ...
கொடுத்துப் பழக வேண்டும்,
இரவில் உறக்கம்  வேண்டும், செயல் முடிக்கும் துணிவு வேண்டும்
கம்பனின் கவிநயம் கசடறக் கற்க வேண்டும், காளிதாசனின்
*மேக தூதம் பாட வேண்டும்*.


490. சந்தோஷமாயிருக்கிறது. மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
பாவையினுள் பரவசம் படர்கிறது.
நன்றாய்த் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்ட போதினும், என்றும் இருக்கும் சோர்வு இன்று இல்லை.
எல்லாம் உன்னால்தானென சொல்லவும் வேணுமா ?
சொல்லாவிட்டால் உனக்குத் தான் புரியாது போகுமா ?
கள்வா, புயலாய் இப் பூவையின் நெஞ்சினுள் நுழைந்தக் காத.....
காலையில் ... வந்திடுவாய் தானே?
என் காத்திருப்புக்கெல்லாம் பலன் கிட்டும் தானே.
நீ வந்ததும் உன்னோடு கதை பல பேச வேண்டும். கை கோர்த்த படி பனியில்  நடக்க வேண்டும்.
உனக்குப் பால் போளி செய்துத் தர வேண்டும். எனக்கு அதை நீ ஊட் ~டினால்~ டும் போது உன் விரலைக் கடித்து விட வேண்டும்.
வரைந்த ஓவியங்களை உனக்குக் காட்டித் தகுந்த பரிசு கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் ... இன்னும் ... ஐயோ மணி எட்டு தானா ? இந்த இரவு 'மட்டும்' விரைந்து  முடியாதா? நிலவு மறையாதா ? கிழக்கு விடியாதா ?
*செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா?*


489. 'காடோ கடலோ நீயிருக்கும் இடந்தான் னெனக்கு அயோத்தி, இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சீதை.
'போரா? நரகாசுரனா? இரு, நானும் வரேன், இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சத்யபாமா.
'கனிகண்ணன் போகிறான், நானும்; நீரும் உம் பைநாகப்பாயை சுருட்டிக் கொள்ளும்,  சேர்ந்தே போவோம்' சொன்னது திருமழிசை ஆழ்வார்.
'என்னது குற்றமா, என் பாட்டிலா, வா, நீயும் நானும் சேர்ந்தே போய் அந்த பாண்டியனை ஒரு கை பார்ப்போம்' என்று கோபத்தோடு கிளம்பியது சிவம்.
ஆடி, செல்வம் தொலைத்து வந்தவனை, 'கவலை விடு, பாண்டிய நாடு போவோம், இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் கண்ணகி.
நாம் மட்டும் ஏன் பிரிந்திருக்கணும்? வேறுபாடுகளை ரசிப்போம். ஒன்றாய் இருப்போம்.
*இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்*


488. கடலைக் கடக்கணும் என்றதும் வருண பகவான் பூஜையோடு தொடங்கினானே ராமன்.
வள்ளியை வளைக்க அண்ணனிடம் உதவி  வேண்டினான் வடிவேலன்.
பாரதப் போரில் வெற்றி பெற களபழியோடு ஆரம்பித்தான் துரியோதனன்.
சபரிமலை போவதற்கு முன் ஒரு மண்டலம் விரதம் தினம் பூஜை உண்டே.
இன்றும் கிராமங்களில் திருவிழா தொடங்குமுன் காப்பு கட்டுவதுண்டு.
அட எந்த கடிதமெனினும் மேலே புள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோமே.
ஒரு காரியம் செய்வதற்கு முன் ...
நானும் ... உன் கன்னத்தில் முத்தமிட *நேந்துக்கிட்டேன் நெய் விளக்கு ஏத்தி வச்சி*


486. கருவறையில் சந்திர காந்தக் கல் இருப்பதால் வெயில் காலம் குளிராகவும் குளிர் காலம் வெப்பமாகவும் இருக்கும்  பெரிய கோவில் - அதிசய கோவில்.
கேரளபுரத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் கருப்பு வெள்ளை நிறத்தை மாற்றிக் கொள்கிறார் - அதிசய விநாயகர்.
விஜயவாடா அருகே, தரும் பானகத்தில் சரி பாதியைக் குடித்து மீதியை உமிழ்ந்து விடுகிறார் - அதிசய நரசிம்மர்.
ஒப்பிலியப்பன் கோவிலில், உப்பு இல்லை என்பதே தெரியாது அங்கு தரப்படும் - அதிசய ப்ரசாதம்.
தாராசுரம் கோவிலில் கல் ஒன்றை உருட்டி விட சரிகமபதநி ஓசை ஒலிக்கும் - அதிசய படிகட்டு.
அதிசயங்களோடு அதிசயம் நேற்று கற்றுக் கொண்டது, புதிய ஒரு ஆலாபனை, உன்னைக் கவர்வதற்கென்று அபூர்வமான, அழகான, ஆனந்தமான - *அதிசய ராகம்*

Sunday, October 13, 2019

பொன்மாலைப் பொழுதில் 63


484. கடல் கடந்து மாட மாளிகை பல ஏறி இறங்கி தேடி, கடைசியில் அனுமன் ராமனிடம் வந்து  சொன்னது ... கண்டேன் சீதையை.
எப்படி எங்கு என்றேதும் தெரியாது தவித்த குந்தி, கண்ணன் உண்மை சொன்னதும் அழுது கதறியது ... கண்டேன் பிள்ளையை.
செல்வத்தால் மயங்காது, ராஜ போஜனத்தில் மனம் லயிக்காது குசேலன் மனைவியிடம் கூறியது ... கண்டேன் கண்ணனை.
புது சூழல், புரியா மொழி, ராணுவம், தீவிரவாதம், அழுது போராடி மீட்டு ரோஜா கண்ணீர் மல்க  கதறியது ... கண்டேன் கணவனை.
அடங்காத கூந்தல், அடக்க முற்படும் விரல்கள், மருதாணி, வளையல், சிற்றிடை, கொலுசு ... வாவ் வாவ்;
எனக்கு ... நான்...
*கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*


482. தினம் விடிகிறது, நாள் முடிகிறது.
யாருக்காகவும் காத்திருக்காது இது தினம் நடைபெறுகிறது.
சந்தோஷத் தருணங்கள் சட்டென்று மறைந்து விடுகிறது.
சங்கடமான விஷயங்களை மறக்க மனது மறந்து விடுகிறது.
இன்றும் நீ எனை நினைத்தபடி எங்கேயோ இருப்பது தெரிகிறது.
எதற்கிப்படி விலகியிருகோம் எனத் தெரியாது மனது தடுமாறுகிறது.
காலம் கனியக் காத்திருப்போம் வேறென்ன செய்வது.
நாட்களை நகர்துவதற்காக ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது.
இதோ இன்று உனக்காகப் பாடுகிறேன்
*காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது*


481. கண்களாலே பேசி காளை என் நெஞ்சைக் கவர்தவள் நீயடி.
அன்பு பாசம் கொட்டி காதலைத் தழைக்கச் செய்தவள் நீயடி.
என் வெறும் வார்த்தைகளை கவிதையாய் மாற்றியவள் நீயடி.
எண்ணங்களில் வண்ணங்கலந்து ஓவியம் எனக் கற்பித்தவள் நீயடி.
உறக்கத்தின் உட்புகுந்து கனவில் வந்துக் கதைப்பவள் நீயடி.
இடை தெரிய உடை அணிந்து எனை தினம் இம்சை செய்பவள் நீயடி.
அன்பே அழகே *என் சுவாசக் காற்றே, சுவாசக் காற்றே ... நீயடி*


479. சிநேகம் சரியாய் அமைய வேணும்.
அதற்கும் இறை வரம் தர வேணும்.
விட்டுக் கொடுத்துப் பழக வேணும்.
எள் எனில் எண்ணையாக வேணும்.
இராமனுக்கு லக்குமண் போல, அனுமன் போல
துரியோதனனுக்கு கர்ணன் போல
பார்த்தனுக்கு பரந்தாமன் போல
ஜானுவுக்கு ராம் போல ...
எனக்கும் உண்டு, ஒரு தோழி, அன்று முதலே ... என்னுள் பாதி.
ஒற்றை வார்த்தையில் மட்டும், என்ன கேட்பினும்;
கொஞ்சம் சிடுசிடு, நிறைய கடுகடு.
கொஞ்சலாய் பேச எண்ணினாலோ ... ஐயகோ சனீஸ்வரனை சாப்பாட்டுக்கு அழைத்தது போலாகிவிடும்.
ஆனாலும் யார் கேட்டாலும் நான் சொல்வதென்னவோ
*எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி ... தென்றல் மாதிரி*


478. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
உறக்கத்திலிருந்து விருட்டென்று விழிக்கிறாய். விவரம் கேட்டாலோ முழிக்கிறாய்.
பல சமயங்களில் எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...
நங்காய்... அவ்வளவு சீக்கிரம் எமை விட்டு நழுவ ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

475. அசோக வனத்தில் சீதை எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ^,
வாலி மாயாவி யுத்தம் முடிய குகை வாசலில் சூக்ரீவன் எத்தனை நாட்கள் காத்திருந்தானோ^,
பெருவுடையாரை தரிசிக்க தஞ்சை மக்கள் எத்தனை நாட்கள் காத்திருந்தனரோ^,
படையப்பனை பழி வாங்க நீலாம்பரி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ,
சேனாபதியைக் காண அமிர்தவள்ளி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ
~ஜானு ராமை சந்திக்க~
இதோ பார் ... உனக்கென்னைப் பிடித்திருக்கு என்றெனக்குத் தெரியும், அதையுன் செவ்வாய் திறந்து .... ம்ம்ம்
*ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தே*


474. குடிலோடு சீதை மாயமாக ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
சூதாடி செல்வம் சுற்றம் இழந்து ஒன்றும் புரியாது
அடுத்தென்ன எனத் தெரியாது  தவித்தார் தருமர்.
தேவகியின் எட்டாம் பிள்ளை சிறை தப்பிய சேதி கேட்ட கம்சன்
ஒன்றும் புரியாது ஏதும் சொல்லாது பயந்து போனான்.
திடீரென்று ஜானு யமுனை ஆற்றிலே பாட
ராம் ஒன்றும் புரியாது என்ன சொல்வதென்று தெரியாது பதட்டமடைந்தான்.
எனக்கும் தான் .. சிரிக்கிறாய், பேசுகிறாய்,
என் காஃபி எடுத்துக் குடிக்கிறாய் ... வாவ், எனக்கு ... எனக்கு....
*ஒன்னும் புரியல ... சொல்லத் தெரியல*

Tuesday, October 8, 2019

பொன்மாலைப் பொழுதில் 62

473. ஒரு சின்னச்சிறு விதை மரமாய் வளர்ந்து நிற்பது விந்தை
ரசிக்கத்தான் நேரம் இருப்பதில்லை பரவாயில்லை
போகும் வரும் பாதையில் புல் தரை
பார்த்ததுண்டா பூத்துக் குலுங்கும் பல வண்ணப் பூக்களை ?
நுகர்ந்ததுண்டா அதன் வாசத்தை?
இல்லை?சரி இங்குமங்கும் பறந்துத் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை?
அதன் சிறகோவியங்களை?
கொஞ்சிப் பேசும் பறவைகளின் குரல்களை? இல்லையா ...
மழையில் நனைந்தபடி ..
சரி விடுங்கள், இவற்றை ரசிக்காது வாழ்வது நம் உரிமை / கடமை.
பரவாயில்லை இதையாவது ...
காது திறந்து, மெய் மறந்துக் கேட்போமா ... இதோ தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை


472. பொன் மாலை நேரம்,
இனிய தட்பவெட்பம் நிலவும் நேரம்
ஆடிய ஆட்டங்கள் அடங்கும் நேரம்
பொருள் தேடியோடும் பொருளற்ற வேலையை புறம் தள்ளி விட்டு புனர் ஜென்மம் பெறும் நேரம்.
கவலை மறந்து கண்ணயரும் நேரம்
கனவுகள் பல முளைக்கும் நேரம்
செய்தவைகள் சரியா தவறா என்று எண்ணிப் பார்க்கும் நேரம்.
செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டுக் கொள்ளும் நேரம்.
நான் கவிதை மழையில் உனை நனைத்திடும் நேரம்.
நீ முத்த மழையில் எனை நனைத்திடும் நேரம்.
அப்படியே சில பல கதைகள் பேசியபடியே மான் புலியை வேட்டையாடும் நேரம்.
இங்கீதம் கொண்டு மேகத்தின் இடையில் மறைந்து நிலவு தூங்கும் நேரம்


470. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்ட பொன் மான் சீதை கைக்குக் கிட்டவில்லை.
உலகை சுற்றி வந்தும் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அடேய் என் இனிய ஸ்நேகமே, நான் … மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை


469. வனம் புக கைகேயி கட்டளை இட ராமன் மறுவார்த்தை பேசலையே
கணவனுக்கு கண் தெரியாததால் தன் கண்ணை கட்டிக் கொண்டா காந்தாரி மறுவார்த்தை பேசலையே
யாதவ குலம் அழிய சாபம் கிடைத்த போது அதை ஏற்றுக் கொண்டான் மாதவன் மறுவார்த்தை பேசலையே
இனி எமை தொடாதீர் என மனைவி சொல்ல கேட்டுக் கொண்டார் நீலகண்டர், மறுவார்த்தை பேசலை
சோழ நாடு போதும் பாண்டிய நாடு போவோமென கோவலன் சொல்ல
சம்மதித்தாலே கண்ணகி, அவளும் மறுவார்த்தை பேசலையே.
நீ மட்டும் ஏனடி, எதற்கெடுத்தாலும் ஒரு காரணம், சாக்கு போக்கு ...
முடிவாய்ச் சொல்லி விட்டேன், நாளை நாம் போறோம், கொண்டாடுறோம், அனுபவிக்கிறோம், நோ ... நோ
மறுவார்த்தை பேசாதே


468. மகளதிகாரத்தை இப்படி எழுதவா ?
நீ உணவுண்ணும் அழகைக் காண நிலவிங்கு காத்திருக்கே, காண வா.
இன்றுனக்கு எந்த நிறத்தில் ஆடை வேணுமென்று கேட்க வானவில் வாசல் வந்திருக்கே, விரைந்து வா.
உன் சிறு விரல்களில் இருந்து வெளிப்படும் தானியங்களை உண்ண பறவைகள் கால்கடுக்க காத்திருக்கே, இரை தூவிட வா.
கை சேர்த்து, ஒற்றைக் கண் மூடி நீ
வழிபடும் அழகை ரசிக்க தெய்வங்- கள் இங்கே திரண்டிருக்கு;
உன் பொக்கை வாயில் தன் பெயர் வராதா என்று ஏங்கிக் காத்திருக்கு;
இவை மட்டுமா, கொம்போடு பூனை ஒல்லி யானையும் ... நீ வரைவது போல் தனை வடிவமைத்துக் கொள்ள சகல ஜீவராசிகளும் காத்திருக்கு ...
*கண்ணனா கண்ணே ... கண்ணனா கண்ணே என் நெஞ்சில் சாயவா*


464. மலர்கள் மணக்கும் ஆனால் இங்கு மலர்ந்திருப்பவையோ மலர்ந்த உன் முகத்தை ஞாபகப்படுத்துகின்றன.
இந்த இருக்கையில் அமர்ந்து நீ பிசைந்து கையில் உருட்டி உருட்டித் தருவாய்,  நினைவிருக்கிறது.
இந்தப் புற்களின் மேலமர்ந்து எத்-
தனை கதைகள் பேசியிருக்கிறோம்
இப்போது தரை காய்ந்து கிடக்குது, நெஞ்சில் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் இருக்குது.
இதோ இதோ இந்த மரக் கிளையில் தான், ஈரமான தாவணி நீ காயப் போட்டு விட்டு மறைந்து நிற்க ... 'நாணமோ இன்னும் நாணமோ' பாட்டு நான் பாடி ...
ம்ம்ம் ... நீர் வரத்து மட்டும் குறைவு,
மற்றபடி வேறெதுவும் மாறவில்லை, நாம் ஓடி ஆடிக் காதலித்த இந்த
*வராக நதிக்கரையோரம் ...*


463. ராமன் வந்து மீட்கும் காலம் வரை இலங்கையில் வாடினாள் சீதை.
கௌரவர் தோற்கும் காலம் வரை
கூந்தல் விரித்திருந்தாள் பாஞ்சாலி
ஜராசந்த் அழிய காலம் வரும் வரை கண்ணனே ஒதுங்கி வாழ்ந்தான்.
நாடு மனைவி மகனை இழந்தும் சத்தியம் ஜெயிக்கும் காலம் வர காத்திருந்தான் அரிச்சந்திரன்.
பெரிய மீன் கிட்டும் வரை ஒற்றைக் காலில் தவமிருக்குதே கொக்கு.
எனவே எல்லாவற்றுக்கும் ...
காத்திரு, நேரம் மாறும்; துவளாது துடிப்போடு விழித்திரு.
உனக்கென்றோர் வழி பிறக்கும்.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*

Sunday, September 15, 2019

பொன்மாலைப் பொழுதில் 61

461. உனக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அரசாட்சி என்று சத்தியம் செய்தான் தசரதன்.
உனைத் தவிர இன்னொருத்தியை மனதளவிலும் தொடேன் என்று சத்தியம் செய்தான் ராமன்.
அர்ச்சுனனைத் தவிர வேறாரையும் கொல்லேன் என்று சத்தியம் செய்தான் கர்ணன்.
எசகுபிசகாய் எதையோ கேட்டு உண்மையைச் சொல என்று
தன் மேல் சத்தியம் வாங்கிக கொண்டாள் ஜானு.
எது எப்படியோ நான் உனக்கொரு சத்தியம் தருகிறேன்.
*கண்ணே கனியே உனைக் கைவிட மாட்டேன் *


460. அந்த காலத்தில் எல்லா செயலும் நடந்தது சமூக அக்கறையோடு.
மக்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தனர் ஒற்றுமையோடு.
விழைந்தது காடு, எல்லார்க்கும் கிட்டியது நல்ல சாப்பாடு.
ஆடு மாடு சகலமும் வாழ்ந்தது மகிழ்ச்சியோடு.
செழித்து வளர்ந்திருந்தது நமது பண்பாடு.
இன்றோ காணும் இடத்திலெல்லாம் கள்ளம் கபடு,
செய்யும் செயல்கள் யாவும் சுயநலத்தோடு.
நல்லது செய்ய நிறைய உண்டு கட்டுப்பாடு.
எங்கும் எதிலும் குறைபாடு,
எது எப்படியோ, புராணங்களும் இதிகாசங்களும் நிறைந்த என்,
*தங்கமே, தமிழுக்கில்லை தட்டுப்பாடு*


459. சில விஷயங்கள் இப்படித்தான் என்று தெரிந்துவிடும்.
மார்கழியில் குளிர்,
வழி வருதோ இல்லையோ தையில் பொங்கல் வரும்.
பகல் முடிய இரவு வரும், நிலவு மறைய பொழுது விடியும்.
சில விஷயங்கள் நடப்பது எப்போதோ என்று தோன்றும்.
எப்போது மீட்கப்படுவோம் எனத் தெரியாது அசோக வனத்தில் சீதை.
எப்போது முடிவாளோ எனத் தெரியாது கூந்தல் விரித்து திரௌபதி.
கோவலன் எப்போது வருவானோ எனத் தெரியாது காத்திருந்த கண்ணகி.
எப்போது கீதம் ஆகுமோ, தெரியலை
*இதோ இதோ... என் பல்லவி*


458. ஏழு மரங்களின் உட்புகுந்து வெளி வந்தது  ராமன் எய்திய அம்பு.
ஏழு ரிஷிகள் நகுஷனை இந்திரபுரி க்கு பல்லக்கில் தூக்கிச் சென்றனர்
ஏழாம் நாளில் நீ கொல்லப்படுவாய் என்று சாபம் பெற்றான் பரீக்ஷித்.
ஏழு நாட்கள் கோவர்தன மலையை கண்ணன் குடையாய்ப் பிடித்தான்.
உலக அதிசயங்கள் ஏழு.
கண்டங்கள் ஏழு.
வாரத்திற்கு நாட்கள் ஏழு.
வானவில்லில் வர்ணம் ஏழு.
ஏழுமலையான் இரண்டாவது பணக்கார தெய்வம்.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியன் வலம் வருகிறான்.
ஏழு வார்த்தைகளில் எழுதப்பட்டது திருக்குறள்.
ஏழு - இதில் தான் எத்தனை விஷயங்கள் அடங்கி...அட ஆமால்ல,
*ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?*


457. காலபைரவரிடம் அனுமதி பெறாது சஞ்சீவி மலையை கடத்திய வாயு புத்ரனுக்கு சாபம் கிட்டியது.
அரக்கனை அடக்க அனுமதி கேட்ட ஆறுமுகனுக்கு அன்னை வீரவேல் தந்தாள்.
மகாவிஷ்ணுவை பார்க்க ஜய விஜயர் அனுமதி மறுக்க சன குமாரர்கள் சாபம் தந்தனர்.
பொறுத்தது போதும் பொங்கியெழு என்று அன்னை அனுமதி தந்ததும் மனோகரன் எதிரிகளைப் பந்தாடினான்.
தன் வீட்டிலேயே இருந்தாலும் 'ஜானு வரலாமா?' என்று அனுமதி கேட்டு பின் ராம் அறையினுள் நுழைந்தான்.
அனுமதி சம்மந்தமாக இத்தனை நடந்திருக்க, எதற்கு வம்பு ... நான்
*வரலாமா உன் அருகில்?*


456. ஹே ராதே, தெவிட்டாத் தேனே,
முதன் முதலில் உனைப் பார்த்தனுபவம் சொல்கிறேன், செவி தா நீயே.
மார்கழி மாதம், விடிகாலை நேரம்
குளிர் வாட்டி எடுக்கும் தருணம்.
யமுனா நதியில், கரை அருகில், ஒரு படகில், கூட சில கோபியரும்.
*
தோழி லலிதாவுடன் நீ ஓடி வந்தாய்.
எனைக் காணும் ஆர்வம் கண்ணில், மறைத்துக் கொண்டாய்.
அன்று தான் ப்ருந்தாவன் வந்த தகவல் சொன்னாய்.
மயிற்பீலி ஒன்றை என் முடியில் சூட்டி விட்டுச் சிரித்தாய்.
அக்கணமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டாய்.
*
பச்சை தாவணி, படபட பார்வை.
மை இட்டு அழகேற்றவில்லை, முன்னம் இட்ட தடம் விழியில்.
பூ சூடவில்லை, நுகர்ந்தேன், வாசம் மட்டும் கருங் கூந்தலில்.
எனை ஆள வந்திருப்பவள் என்று புரிந்ததந் நொடியில்.
*நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரில்*


455. ஹே ராதே,
இடையில் நீ இல்லாததால் இதர கோபியரோடு இணைந்து பேச இதயம் இசைவதில்லை.
அருகில் நீ இல்லாது அவஸ்தை பலவோடு அல்லாடுகிறேன்.
*
ஹே ராதே,
கனிந்த உன் காதல் பார்வை, தாமரை மணம் ததும்பும் உன் முகம்,
செவ்விதழ் செப்பும் இன்னிசை மொழிகள் இவையெல்லாம் என்னோடில்லாது தவிக்கிறேன்.
*
ஹே ராதே,
இதோ குழலெடுத்து வாசிக்கிறேன், மனதில் உன் முகம் இருக்கு, எனினும் ராகம் சோகமாகவே இருக்கு,
நீ வரும் வரையில் உனை எண்ணியே, உன் பெயரைச் சொல்லியபடியே, உனக்காகவே காத்திருக்கப் போகிறேன்.
*
ஹே ராதே,
வேறென்ன நான் செய்ய அன்பே ?
என்னை நீ இன்னும் என்ன செய்யப் போகிறாயோ
*என் காதலே ... என் காதலே*

Thursday, August 15, 2019

பொன்மாலைப் பொழுதில் 60

454. யோசித்துப் பார்க்கிறேன், என் எல்லாவற்றிலும் இருக்கிறாய் நீ.
என் பசியாய் நீ
பசிக்குப் புசிக்கும் பதார்த்தமாய் நீ
மயக்கம் நீ
மயக்கம் தெளிக்கும் மருந்து நீ.
மறைந்து நின்று என் நொடிகளை மணிகளாக்குகிறாய் நீ.
அருகில் இருந்தபடி நாட்களைக் கூட நொடிகளாக்குகிறாய் நீ.
நான் பார்த்து ரசிக்கும் ஓவியம் நீ
படித்து மகிழும் காவியம் நீ
என் கவிதை கற்பனைகளில் கலந்திருக்கிறாய் நீ
இக் கண்ணனின் ராதை நீ
ஆண்டாள் கோதை நீ
மேகம் நீ, வானம் நீ,
வேதம் நீ, ஞானம் நீ
*ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ*

453. அமெரிக்கா ஆஸ்திரேலியால்லாம் அந்தக் காலம்.
ஆப்ரிக்க காடுகளுக்கும் அமேசான் நதிக்கும் செல்ல விரும்புன்றனர் இன்று.
3 அறை பெரிய வீடு கேட்டதெலாம் மாறி
கடலலைகளைப் பார்த்தபடி தனி பங்களா வேண்டுமாம் இன்று.
பப் டிஸ்கோத் பார்ட்டி எல்லாம் தினத் தேவையாய் மாறிப் போனது
உனக்குத் தெரியாமலிருக்கலாம்.
சமையல் செய் என்றும், பூ சூட, புடவை கட்டல்லாம் வற்புறுத்தக் கூடாதென்று .... ம்ம்ம்
நான் இப்படியெல்லாம் உன்னைப் படுத்தவில்லை,
எனக்கும் இதெல்லாம் பிடிப்பதில்லை.
எந்த நிபந்தனையும் இல்லை, உன் நிழலாய் வரத் தயாராயிருக்கிறேன்
*கண்ணைக் காட்டு போதும்*


452. ராமன் என்றதும் லக்ஷ்மணன் அனுமன் ஞாபகம் வரும்.
மார்கழியில் விடிகாலை விழித்து திருப்பாவை படிக்க ஆசை வரும்.
கைப்புள்ளே, நாய் சேகர், போன்ற பேரைக் கேட்டாலே சிரிப்பு வரும்.
செய்யும் சமையலில் சுகந்தமிருக்க வயிறில் பசி தானே வரும்.
சொந்த மண்ணில் காலடி வைக்க நெஞ்சில் ஒரு சந்தோஷம் வரும்
ப்ரபாவை 'எந்த ஸ்கூல்' எனக் கேட்டு ராகிங் செய்ய ஆசை வரும்.
முருக வடிவு ... அருவா சொருவிய சொர்ணாக்கா ஞாபகம் வரும்.
நெய் சாம்பாரில் மிதக்கும் இட்லி பார்த்ததும் அமுதன் ஞாபகம் வரும்.
எகோலாக் பெட்டி திறக்க ராம்க்கு ஜானுவின் ஞாபகம் வரும்.
எந்நேரமெனினும், அன்பே ... உனை எண்ண, மனதுள்
*தம்தன தம்தன தாளம் வரும்*


451. நல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.
என்னை எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்.
கெட்டப் பய சார் இந்த காளி. பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லே.
இதெப்படி இருக்கு, சீவிடுவேன்.
கஷ்டப்படாம கெடைக்காது. கஷ்டப்படாம கெடைக்கிறது எதுவும் நெலைக்காது.
வாய்ப்புகள் அமையாது நாம தான் அமைச்சுக்கணும்
என் வழி தனி வழி
நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.
சிங்கம் சிங்குளாத்தா வரும்
ஆண்டவன் நம்ப பக்கம் இருக்கான்
ஆண்டவன் சொல்றா, அருணாச்சலம் முடிக்கறா.
நா ஒரு தடவே சொன்னா நூ...று தடவே சொன்ன மாதிரி.
யோசிக்காம பேசமாட்டே, பேசிட்டு யோசிக்க மாட்டேன்
கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சி போச்சி
கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்.
*ராக்கம்மா ... கையத் தட்டு*


450. ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்தலே வாழ்க்கை.
நீ செல்லும் வழியில் தொடர்ந்தால் அது உன் மேல் உள்ள நம்பிக்கை.
காக்க நீ இருக்க கவலை எதற்கு என்ற தைரியம்.
இதில் ஒருவகை தான் சரணாகதி, அடைக்கலம் எனப்படும்.
விபீஷன் ராமனை சரணடைந்தான்
தன்னால் முடியாததும்  திரௌபதி கண்ணனிடம் சரணடைந்தாள்.
எமனிடம் இருந்து தனைக் காக்க சிவனிடம் சரணடைந்தான் மார்க்கண்டேயன்.
சரணடைந்த சூரபத்மனை தன் கொடியாகக் கொண்டான் குமரன்.
நானும் ஓடி ஓடிக் களைத்து விட்டேன்
போதுமென்ற நிலைக்கு வந்து விட்டேன்.
எனக்கு அடைக்கலம் தா ...
*நின்னைச் சரணடைந்தேன்*


449. தவறு தான்.
செல்லப் பெயரிட்டுனை அழைத்தது தவறு தான், மன்னித்திடு.
உனக்குப் பிடிக்காமல் போனது என் துரதிர்ஷ்டம் தான், பொருத்திடு.
*
தவறு செய்யாதார் எவருளார் ?
இருப்பின் அவர் மனிதரிலார்.
*
ராமன் கடவுள் தானே;
மறைந்திருந்து பாணம் எய்ததும், மனைவி மேல் சந்தேகப்பட்டதும், மான் பொய் என்றறிந்தும் அதன் பின் ஓடியதும், தவறு தானே;
இருந்தும் அவனைத் தொழுவது தவறில்லை தானே.
*
புரிந்து கொள் அன்பே,
தவறு செய்யும் மனிதம்.
அதையுணர்ந்து மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் தெய்வம்.
மறந்து மன்னிக்கத் தெரிந்தவள் தெய்வத்தின் தெய்வம்.
*
மலரே இன்னும் மௌனமேன் கூறு.
என் *கண்மணியே ... பேசு*


448. வண்டுகளைத்தான் காணவில்லை.
பூத்து தேன் வடிய மலர்கள் திறந்து கிடக்கின்றன.
கொத்தியுண்ண பறவையினங்கள் வருவதில்லை.
காய் பழம் யாவும் கனிந்து மரத்தில் தொங்குகின்றன.
பார்த்து ரசிக்க ஆளுமில்லை, ஆர்வமுமில்லை.
வெண்ணிலவு வானில் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கிறது.
நனைந்து விளையாட பிள்ளைகள் யாருமில்லை.
மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.
மரத்தின் பின்னே மறைந்து விளையாடவும், புல்தரையினில் படுத்து உருண்டு பேசிப் பழகவும், நீரோடையில் ஆடி மகிழவும் காதலர்கள் தான் யாருமில்லை.
*காடு திறந்து கிடக்கின்றது*

Saturday, August 10, 2019

பொன்மாலைப் பொழுதில் 59

447. சபரிக்குத் தெரியும், ராமன் தன்னை தேடி  வருவான் என்று.
கம்சனுக்குத் தெரியும் கண்ணன் தன்னைக் கொல்வதற்காகவே பிறந்தவனென்று.
முருகனுக்குத் தெரியும், குற வள்ளி தனக்காக காத்திருக்கிறாளென்று.
படிக்கும் பழக்கம் குறையுமென்று வள்ளுவருக்கு தெரியும், அதனாலே 2 அடிகளில் கருத்து சொன்னார்.
சரி, உனக்குத் தெரியுமா?
*மாயா மாயா மனமோகனா, நான் உனக்காகப் பிறந்தேனடா*
446. என்... அதே கல்லூரியில் மாணவன்
பார்வையாலேயே மேய்பவன்
படிப்பில் வல்லவன்
பழக்க வழக்கங்களில் நல்லவன், போல் தான் தெரிபவன்
விழியசைவை உணர்ந்து கொண்டு நடப்பவன்
இசைக் கலைஞன், நிபுணன்
சாதனைகள் பல புரியக்கூடிய தகுதி உள்ளவன்
கொஞ்சம் கொஞ்சமாய் எனை பாதித்தவன்
என் சிந்தனைகளைக் கெடுத்தவன்
எனைத் தன் பக்கம் இழுத்து கொண்டக் கள்வன்
ஆனால் இனியவன், இதுவரை பேசியதில்லை
*யாரோ இவன் ... யாரோ இவன்*


444. மறைந்திருந்து வாலி மீது அம்பு தொடுப்பது தவறென லக்ஷ்மணன் சொல்லத்தான் நினைத்தான்.
ராவணன் செய்வது தவறு என்று மண்டோதரி சொல்லத் தான் நினைத்தாள்.
'துரியோதனா தவறு செய்கிறாய்' என்று  திருதிராஷ்ட்ரன் சொல்லத்தான் நினைத்தான்.
பெரிய பழுவேட்டையர் நந்தினியை மணந்தது தவறென்று சோழ நாடு சொல்லத்தான் நினைத்தது.
அகலிகையை அடைய இந்திரன்
மாறு வேடமணிவது தவறென சொல்லத்தான் நினைத்தனர்.
நானும் .... சத்தியமாய் ... உன்...
உன் அன்பு அறிவு ... ஈர்க்கப்பட்டு... பலமுறை ... சரி முடிவாக, உனை உனை நான் ... காதலிக்கிறேன் ....
..... ..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... ..... .....
என்ற உண்மையை *சொல்லத்தான் நினைக்கிறேன்*


442. வயதுக்கு வந்தாகிவிட்டாது.
அனவரதமும கனவில் மனம் மிதக்க ஆரம்பித்துவிட்டது.
நோக்கும் எல்லாவற்றின் மீதும்
நேசம் நெஞ்சில் நிறைகின்றது
காதலென்று இதைப்பெயரிட்டுக் கொள்ள ஆசையாயிருக்கிறது
கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் சுண்டிவிட்டால் போதும்,
கவிதை அருவியாய்க் கொட்டுகிறது.
எல்லாம் தயார்,
கூடக் கொஞ்சி விளையாட ஜோடி மட்டும் வேண்டும்
மண்ணிலிருக்கும் எவரும் எனை மதிப்பதில்லை, எனவே
*வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?*


441. முருகனின் கோபம் தணிய
பார்வதி சிவனின் சில திருவிளையாடற் சேதிகளை எடுத்துரைத்தாள்.
வியாசரின் சிஸ்யர் வைசம்பாயர்
ஜனமேஜயனுக்கு மகாபாரத சேதிகள் பலவற்றை சொன்னார்.
இலங்கை சென்று அருள்மொழி வர்மனை சந்தித்து
வந்தியத் தேவன் சேதி பல தெரிவித்தான்.
ஜானுவும் ராமும் ஒரே இரவில்
22 வருட சேதிகளைப் பரிமாறிக்கொண்டனர்.
என்னிடமும் இருக்கே சேதி சில, யாரிடம் சொல்ல? ம்ம்ம் ...
ஆம், அது தான் சரி, வேகமாய்ப் பரவும்,
*தென்றல் காத்தே ... சேதி ஒன்னு கேட்டியா?*


440. வருவேன் எனறாயே,
மழை வரும் முன் வந்திடுவேன் என்றாயே,
வாக்குறுதி வேறு தந்தாயே,
மழை நீர் மண் தீண்டு முன் தீண்டு தூரத்திலிருப்பேன் என்றாயே,
பச்சைப் புற்களின் மேல் பாவை வந்தமர்ந்திருப்பேன் என்றாயே,
நான் மழைக் கவிதை தர நீ மடி தருவேன் என்றாயே,
தாவணியைக் குடையாக்கி, நான் நனையாது காப்பேன் என்றாயே,
இதோ மழை ... நனைகிறேன் நான்
மறைந்து நின்று நான் தவிப்பதைக் கண்டு ரசிக்கிறாயோ ? இல்லை வர முடியாதுத் தவிக்கிறாயோ?
என் மனங்கவர்ந்தவளே, மயிலே,
*அடி நீ ... எங்கே?*

439. பரதன் நாடாளட்டும் ராமன் கானகம் புகவேண்டாமென்று கெஞ்சினான் தசரதன், கேட்கவில்லை கைகேயி.
இது பொய் மான், ஏதோ அசுரனின் சூழ்ச்சி, இது வேண்டாம் என்றான் லக்ஷ்மணன், கேட்கவில்லை சீதை.
ஏதோ பின்பலத்தோடு சண்டைக்கு நிற்கிறான், போகதே என்றாள் தாரை. கேட்கவில்லை வாலி.
சூது அதர்மம் கூடாதென்று பல அற உரை கூறினர் பீஷ்மரும் விதுரரும், கேட்கவில்லையே துரியோதனன்.
யாகத்திற்கு அழைக்கவில்லை தக்ஷன், நீ போக வேணாமென்றான் சிவன், கேட்கவில்லையே சக்தி.
இந்த வழியில் வந்தவள் தானே நானும், வழிதல் கூடாது, ஆவென்று பார்க்கக்கூடாது  என்று கட்டளை இட்டும் ... ம்ம்ம் ... *சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது*

438. விலகி விலகி நின்றேன்.
பழக பயந்தேன். கூச்சப்பட்டேன்,
மெல்ல நீ அன்பாய்ப் பேச சகஜமானேன்.
உண்மை உணர்ந்தேன், பால் தேன் போல் உன் நட்பு, சுவைத்தேன், ரசித்தேன், சிரித்தேன், விரும்பினேன், காத்திருந்தேன்,
நிறைய  எதிர்பார்த்தேன், பாராதிருந்தால் கோபம் கொண்டேன்.
அழுதேன், பிதற்றினேன், தொழுதேன், தவம் செய்தேன்,
வேறேதும் வேண்டேன், உண்மையைச் சொல்கிறேன்,
நான் *மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன்*

Tuesday, July 9, 2019

பொன்மாலைப் பொழுதில் 58

437. பார்த்து ப்ரமித்தது போதும். பிறவிப் பயன் தேடி பயணப்படுவோமா?
பேசி சிரித்துப் பழகியது போதும்,
அடுத்த கட்டம் நோக்கி நகர்வோமா?
கனவில் வந்தென் உறக்கம் களவாண்டது போதும். நிழலாய் எனை நீ நெருங்கி நில் வா.
கற்பனைகளில் காலம் கடத்தியது போதும், கை கோர்த்து சில பல கவிதை சொல்லிடு வா.
பார்க்கையில் பார்க்காது, பார்க்காத போது பார்த்து ரசித்தது போதும்.
பக்கம் வந்து வெட்கம் நீக்கி பாடம் கொஞ்சம் கற்றுத் தந்திடு வா
எட்டி நின்றே நாசி தொட்டது போதும்
*பூ மாலையே ... தோள் சேரவா*


436. தீயில் இறங்கச் சொன்னாலும் புனிதமானவள் என்று தெரியவர ராமன் மனைவியை ஏற்றுக் கொண்டானே.
எனை இனி தொடாதிரும் என்று சொன்ன பின்னும் இறை இறங்கி பரிந்துரைக்க திருநீலகண்டத்தை ஏற்றுக் கொண்டாரே அவர் திருமதி. 
கோபத்தில் திரு ஆவினன்குடி வந்தமர்ந்த பின், அன்னை சொல்லக் கேட்டு மனம் மாறி இறங்கி வரவில்லையா முருகன்.
இரண்டாய்க் கிழித்து, நரம்புகளை உருவி, இரத்தம் குடித்து ... பாலகன் ப்ரகலாதன் அருகில் வர கோபம் தனிந்ததே நரசிம்மம்.
நீ மட்டும் ஏனடா, இன்னும் ஏறுமுகத்தில்.
கொஞ்சம் விட்டுக் கொடு,
உனக்குப் பிடித்த பருப்புப் பாயசம், மிதக்கும் திராட்சை முந்திரியோடு
உண்டு கோபம் தனி, சரியா,
*கண்ணா ... வருவாயா ?*

435. கனவு கலையும், பொழுது விடியும்.
கைப்பேசி வழி உன் காலை வணக்கம் வரும்.
பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்துத் திரியும்.
இன்று என்ன கேட்கப் போகிறாயோ என்ற எண்ணம் தோன்றும்.
எசகு பிசகாய் ஏதாவது கேட்பாய், எனக்குக் கோபம் வரும்.
எருமை பன்னி என்றுனை பாராட்டி மகிழ்விக்க நேரிடும்.
கொஞ்ச நேரம் தான், என் மனம் குழையும், பேசத் தூண்டும்.
எதைச்சொன்னால் நீ சிரிப்பாய் என்று யோசிக்கத் தோன்றும்.
உன் பழைய வரிகளைப் படிக்க மனதுளுன் திருதிரு முகம் விரியும்
அதற்குள் மாலை மணி ஏழு ஆக அவ்வமயம்
*ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்*


434. என்ன சோகம் என்று கேட்ட தோழி, சொல்கிறேனடி கேளு நீ.
நீலச் சட்டை, நெற்றியில் பட்டை, நேற்று கோவிலில் பார்த்தோமே, நினைவிருக்கா? அத் திருவுருவம் என் நினைவை விட்டு நீங்கா.
என் நிறத்தை ஒத்தவன், நெஞ்சில் காதல் தீயை வைத்தவன்.
தேவாரம் பாடினான், தேனை என் காதில் ஊற்றினான்;
ஒரு சிறு பார்வை தான், மெல்லச் சிரித்தான், என்னை தன் பக்கம் சரித்துக் கொண்டான்.
என் கரம் பிடித்து கொஞ்சம் அதிகம் சுண்டல் தந்ததாய் நினைவு.
உறக்கத்திலெல்லாம் இனி அவன் வரவு, தினம் கனவு.
நேற்று யாருடைய மண்டகப்படி பாரடி, *என் நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி?*

433. பொய்யானப் பொன் மானை பிடிக்கப்போய் மெய்யான தன் பெண் மானை ராமன் தொலைத்தான்.
கர்வம் மோகம் வழி நடத்த அதர்மப் பாதையில் பயணித்து ராவணன் தன்னையே தொலைத்தான்.
ஏனென்று கேட்க முடியாது காமம் கண் மறைக்க சாந்தனு கங்கையில் தன் சந்ததியைத்  தொலைத்தான்.
பழி சொல்லுக்கு பயந்து, குந்தி தான் பெற்ற பிள்ளை கர்ணனை ஆற்றில் தொலைத்தாள்.
தன் விதி பற்றித் தெரிந்திருந்தும் தேவகியின் எட்டாவது பிள்ளையை கம்சன் தொலைத்தான்.
ஆலவாயனுக்கு ஆலயம் கட்டும் பணியில் அரசன் தந்த பணத்தை திருவாதவூரார் தொலைத்தார்.
உன் புன்சிரிப்பும் மென்பேச்சும் *என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன்*



432. கார்த்திகை பௌர்ணமி இன்று.
சிவபிரான் திரிபுரனை எரித்து தேவர்களைக் காத்த நாள் இன்று.
மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றிய தினம் இன்று.
நெற்றிக் கனலிலிருந்து கந்தன் அவதரித்தத் திருநாள் இன்று.
ராதையும் கண்ணனும் ராசலீலை புரிந்த தினம் இன்று.
முன்னோர்கட்கு முக்கியத்துவம் நல்கும் நன்னாள் இன்று.
குருஷேத்திர யுத்தம் தொடங்கியது பௌர்ணமி.
அட நீ பிறந்ததே பௌர்ணமி, என் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத *நீ ... பௌர்ணமி*


431. மறந்தததேயில்லை எனினும் ஏதாவதோர் வழியில் உன் ஞாபகம்.
நாளை கார்த்திகை, ஒரு பொரி உருண்டையை இருவரும் கொஞ்ச- ம் கொஞ்சமாய்த் தின்ற ஞாபகம்.
இன்று ஐஸ்கிரீம் விளம்பரம் எங்கு பார்த்தாலும் அன்று பேரடைஸில் நாம் அடித்தக் கூத்து ஞாபகம்.
பிறந்த நாள் யாருக்கு வந்தாலும், உனைக் கேட்காது பரிசு தந்து ஸ்கேலில் அடி வாங்கிய ஞாபகம்.
இன்று எந்தப் பந்தியில் சாப்பிட அமர்ந்தாலும் எக்ஸ்ட்ரா பாயசம் கேட்கும் உந்தன் ஞாபகம்.
'96 படத்தில் ராமின் வாயிலிருந்து ரொட்டி கவ்வுமே மான், பார்த்ததும் எனக்கு ... ஞாபகம்.
ஒருநாள் மதியம் மீன் குழம்பு கொண்ர்ந்து உண்ண வற்புறுத்தி, அன்றிலிருந்து கடிகாரம்
*ஒரு மணி அடித்தால், கண்ணே உன் ஞாபகம்*

Sunday, June 23, 2019

பொன்மாலைப் பொழுதில் 57

430. புயல் வருதாமே, பொறம்போக்கு இது எங்கே போச்சோ, தெரிலியே.
குட்டி போட்ட பூனையாட்டம் என்னையே சுத்தி சுத்தி வருவான்,
ரண்டு நாளா ஆளக் காணோம்.
எனக்கு அவன் நெனப்பாவே ...
கையில குடை இருக்கு, எங்கேனு போய் தேடுவேன், எருமை எருமை.
பக்கத்தில் இருந்தா ஏதாச்சும் தொணதொணன்னு  பேசுவான்.
கைய வச்சிக்கிட்டு சும்மாயிருக்க மாட்டான், கடங்கார கம்னாட்டி.
மழை ஆரம்பிச்சிடுச்சி, காய வச்ச துணியெல்லா ஈரமாகுது,
எனக்கோ அவன் நெனப்பா ... 
கோழி நனையுது, ஊற வச்ச சோளம் நனையுது, பாவிப்பய என் நெஞ்சில் அவ நெனப்பு எப்போதும்,
இரவோ பகலோ
மழையோ வெயிலோ
வேர்வையிலும் குளிரிலும்
சாமத்தில் சாய்த்த பின்னும்
*சாரக்காத்து வீசும் போதும்*

429. தீவை எறித்த பின், கட்டுண்டு நிற்பவனைப் பார்த்து ராவணன் கேட்டது 'யாரிந்த வானரம்?'
சகுந்தலை பிள்ளையோடு படியேற துர்வாச சாபத்தால் உறவு மறந்த துஷ்யந்தன் கேட்டது 'யார் நீ?'
திருமணத்திற்குத் தடை சொல்லும் கிழவனை பார்த்து சினத்தோடு சுந்தரன் கேட்டது 'யாரிந்த பித்தன்?'.
கையில் சிலம்பு, கண்ணில் கோபம், கண்ணகி நெடுஞ்செழியனைப் பார்த்துக் கேட்டது 'யார் கள்வன்?'.
சோ ராமசாமி எழுதி இயக்கி நடித்த புகழ் பெற்ற மேடை நாடகம் 'யார் ப்ராமணன்?'
இன்னும் ஒருவர் மட்டும் வரணும் என முரளி சொல்ல சுபா கேட்டது 'யார், ஜானுவா?'.
அன்பே சிவம் என்பதை அறிந்த நல்ல சிவம் இறைவன் பெயரில் ஏமாற்றுவாரைப் பார்த்துக் கேட்டது *யார் ... யார் ... சிவம்?*

428. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*

427. புராணங்களின் படி நான்கு வர்ணங்களுக்கு வண்ணம் உண்டு.
வேதம் சொல்வோர்க்கு வெள்ளை.
போர் புரியும் அரச குலத்தோர்க்கு சிகப்பு, வணிகர்க்கோ மஞ்சள்.
உடல் உழைத்து வேலை செய்வோர்- க்கு கருப்பு என்று குறிப்பு இருக்கு.
இது ஒருபுறமிருக்கட்டும்.
அதியமான் அவ்வைக்கு தந்த நெல்லிக்கனி பச்சை; நாரதர் கலகம் செய்த மாம்பழம் மஞ்சள்.
இது இப்படியிருக்க,
புல்வெளி பச்சை, குருதி சிகப்பு.
வானம் நீல வண்ணம்; விடிகாலை பொன்நிறம்; இரவு கருப்பு;
கோபத்தில் கண் சிவப்பாகும்.
நாணம் பயம் மகிழ்ச்சி  இவற்றுக்கு வேறு வேறு வண்ணம்  ... சரி சரி
*தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ ?*

426. இராமன் கேட்கவில்லையே,
விஸ்வாமித்ரர் தேடிச் சென்று கலை பல சொல்லித் தந்து ....
துரியோதனன் தேடவில்லை,
கர்ணன் வர, அர்ச்சுனனை வீழ்த்த அவனை தன் பக்கம் சேர்த்து ...
யசோதா கேட்டாளா என்ன?
கண்ணன் இரவோடு இரவாக தேடிச் சென்று ...
சுந்தரரோ கல்யாண கனவில்,
சிவன் அவனைத் தேடிச் சென்று, பித்தா என்றழைத்த போதும்...
பெரியாழ்வார் வேண்டவில்லை,
ரெங்கமன்னாரே தேடி வந்து ஆண்டாளை பெண் கேட்க...
ஜானுவோ ராமோ அறியவில்லை,
கேளாமலே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச 22 வருடம் ....
ஆம் நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் தானே ... எனக்கும் கூட
*கேளாமல் கையிலே வந்தாயே காதலே*


424. எல்லாரிடமும் நீ இப்படித்தான் ... பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
எனைச் சுற்றி சுற்றி வந்து, சிரித்து சிரித்துப் பேசி சிரிக்க வைத்தாய்.
கவிதை பல சொன்னாய். பதில் நான் சொல்ல கை தட்டி ரசித்தாய்.
உள்ளே எதையோ அசைத்து உனை பற்றி எண்ண வைத்து விட்டாய்.
நீ அருகிலில்லாத தருணத்தை நான் வெறுக்கும் அளவிற்கு ...
இப்படி நான் மாற அப்படி என்ன மாயம் செய்தாயடா, சிநேகிதா !
காணுமெல்லாவற்றிலும் உனைத் தொடர்புப் படுத்திப் பார்க்கிறேன்.
செல்லுமிடமெங்கும் உனை பற்றி பேசி பரவசித்து எனை மறக்கிறேன்
உன் விரல் பிடித்து ... ம்ம்ம்
முடிவெடுத்து விட்டேன், இனி பின்வாங்க மாட்டேன்.
உன் நிழலாய்த் தொடர்வேன்
*எங்கெங்கு நீ சென்ற போதும் ...*

423. இராவணன் தன் தவறை திருத்திக் கொள்ளாததால் தம்பி விபீஷணன் இடம் மாறினான்.
அரக்கு மாளிகை துரியோதனன் சூழ்ச்சியால் தீ வைக்கப்பட பாண்டவர் இடம் மாறினர்.
ஜராசந்தனோடு மல்போர் புரிந்து இரண்டாய்க் கிழித்து தலை கால் இடம் மாற்றி எறிந்தான் வீமன்.
வந்த காரியம் மறந்து சனாவின் கனவில்  கவிதை படித்தான் கவனம் இடம் மாறிய சிட்டி.
உடம்பு சரியில்லாது சில நாட்கள் கழித்து பள்ளி வந்த ஜானு, ராமைப் பார்த்துப் புன்னகைக்க
*இதயம் இடம் மாறியதே*

Wednesday, June 12, 2019

பொன்மாலைப் பொழுதில் 56

421. மகிழ்ச்சியாக இருக்கிறது.
நெஞ்சினுள் ஒரு புத்துணர்ச்சி புதிதாய்ப் புகுந்திருப்பது புரிகிறது.
காணும் அனைத்திலும் ஒரு ஈர்ப்பு.
கவிதை சுரக்கிறது; பார்த்தாலே பரவசம், பாராதிருந்தால் நானில்லை என் வசம்.
அகத்தில் ஆயிரம் மாற்றங்கள்
செய்யும் அனைத்திலும் புதுமைகள்
மனதிலுன்னோடு மல்லாடுகிறேன்.
என்னுள் நான்  அலவாடுகிறேன்.
அடிக்கடி உன் அருகாமையை அவதானிக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று சொல்ல வேண்டுமா என்ன?
உன்னாலே ஒரு புது மனிதனாய் உருவாகியிருக்கிறேன்.
*நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்*


420. கணவனுக்கு கண் தெரியாததால் தன்  கண்ணையும் துணி கொண்டு மூடிக் கொண்டாள் காந்தாரி.
தவ வேடத்திலிருந்த வியாசரின் கோர உருவம் காண முடியாது கண் மூடிக் கொண்டாள் அம்பிகை.
ஹஸ்தினாபுரத்து இளவரசர்கள் துரோணரிடம் பணிவாய் குனிந்து வாய் மூடிப் பாடம் கற்றனர்.
'மண் தின்றாயா?' என்று அன்னை வினவ 'திங்கலை' என்று வாய் மூடி பொய் சொன்னான் கண்ணன்.
பீஷ்மரின் நல்லறிவுரை ஏதும் கேட்கக்கூடாதென காதை இறுக்க மூடிக் கொண்டான் துரியோதனன்.
எந்த பாரபட்சமும் பாராது தீர்ப்பு சொல்வதற்காக நீதி தேவியின் கண்கள் எப்போதும் மூடியிருக்கும்.
தீயது பார்க்க கேட்க பேசக் கூடாதென காந்தியின் குரங்குகள் கண் காது வாய் மூடிக் கொண்டன.
இதெல்லாம் சரி, போதும் நிப்பாட்டு.
நீ மறைந்தே நிற்க கவிதை சுரக்கும் வேகம் மட்டுப்படுதே, எனவே
*முகத்தை எப்போதும் மூடி வைக்காதே*

419. ஒரு நாள் என்றால் பகல், இரவு என்று இரண்டு பாதி உண்டு;
மரம் எனில் வெளியே தெரியும் கிளை உள்ளே இருக்கும் வேர்.
இயற்கையிலேயே இப்படி இணைந்து அமைந்திருக்கும்.
சில விடயங்கள் சில சமயம் மாறிவிடும்.
எவ்வளவு பெரிய சிவபக்தன், மாறி இழிவான செயல் செய்தானே.
ஒன்றாய் இருந்தவர்கள் இரண்டு அணியாய் மாறி எதிரியானரே.
இன்று இப்படி, நாளை எப்படியோ; எது என்னாகும் என்று யாரரிவர்.
நமக்குள் கூடத்தான், தாமரை இலை மேல் தண்ணீர் போலத்தான்.
சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.
புகைவண்டி ஒன்று தான், சேர முடியாத தண்டவாளம் இரண்டு.
அட, '96 கதையும் இது தானே.
நானாக நான், இங்கு தனியே என் வழியில் ஒரு மூலையில்
நீயாக *நீ, உன் வானம், உனக்கென ஒர் நிலவு*



418. ஒரு வழியாக தீபாவளி முடிந்தது.
எத்தனை வேலை எத்துனைப் பணி எல்லாம் சரிவர செய்து விட்டாய்.
முருக்கு வடை லட்டு அதிரசம் பால் பாயசம் அப்பப்பா எத்தனை வகை தின்பண்டம் செய்ய நீ தெரிந்து வைத்திருக்கிறாய்.
மிகவும் களைத்திருப்பாய், சரி ஓய்வெடுத்துக் கொள்.
இங்கு வந்து உட்கார், கால் பிடித்து விடுகிறேன்.
தலை, தோள் மெல்ல அமுக்கி, பாதம் மத்தியில் கொஞ்சம் அழுத்தம்
பின்னங்கழுத்தில் பிடித்து விட உடல் வலி பறந்தோடும்.
சித்த நேரம் உறங்குகிறாயா?
*மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா?*

417. சாபம் பெற்ற தசரதன் சிரித்தான், ராமன் பிறந்தான்.
ஜானகி காதலால் நாணத்தோடு சிரித்தாள், சிவதனுசு முறிந்தது.
துரியோதனன் தடுமாற பாஞ்சாலி சிரித்தாள், பாரதப் போர் மூண்டது.
இறக்குமுன் ஈந்து சிரித்தான் கர்ணன், முக்தி தந்தான் கண்ணன்.
'முத்தைத்தரு' முதலடி தந்த முருகன் சிரிக்க, திருப்புகழ் கிடைத்தது.
தூக்குமேடையில் பகத்சிங் சிரிக்க இந்தியாவிற்கு சுதந்திரம் கிட்டியது.
இங்கு ஒரே கோலாகலம், காரணம்
*நான் சிரித்தால் ... தீபாவளி*.

416. சிவதனுஷை நாணேற்ற மிதிலை நகரே பார்த்து வியந்தது போல
இலங்கை நகரின் அழகைப் பார்த்து அனுமன் வியந்தது போல
வேலோடு நிற்கும் பால முருகனைப் பார்த்து சூரன் வியந்தது போல
அட எனை விடு, நான் உன்னோடு கொஞ்சம் பழகியிருக்க;
உன் நடை உடை பாவனை எல்லாம் ஓரளவு அறிந்திருக்க ...
கருங்கூந்தல், பூ, காட்டன் புடவை, கையில் வளையல், காலில் கொலுசு ... ம்ம்ம்
கோவில் சிலையோ, தரையில் மிதக்கும் தேவதையோ என்றெல்லாம்
*ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா?*

415. தினம் தினம் எனைப் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறாய்.
கனவில் நான் செய்த குறும்புகளை கரம் மசாலா சேர்த்து கதைக்கிறாய்.
மறைத்து என் கைக்குள் எதையோ திணித்து தின்னச் சொல்கிறாய்.
'நேத்து வாங்கிய நைல் பாலிஷ்'
கண்ணருகே விரல் நீட்டுகிறாய்.
'அது?' என்று கேட்டால் 'எது?' என்று முதலில் முழித்து, பின் 'எருமை லூசு' என்று திட்டுகிறாய்.
இடுப்பில் கிள்ளி 'ஆம்' என்று காதினுள் பேசி முத்தம் தருகிறாய்.
வேண்டாம் என்று சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாது,
என்னை அரைகுறை ஆடையோடு நிற்க வைத்து விட்டு ... ம்ம்ம்
*இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் ... அன்பே*

Wednesday, June 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 55

414. வெயில் மழை காடு மேடு பாராது இராமன் நாடு கடந்து போரிடக் காரணம் சீதை மேலிருந்தக் காதல்.
பீஷ்மர் துரோணர் கர்ணனை பாண்டவர் அழிக்கக் காரணம் பாஞ்சாலி மேலிருந்தக் காதலே.
ஏழை சுதாமா நண்பனை தேடிச் சென்றதற்கு காரணம் மனைவி பிள்ளையர் மேலிருந்தக் காதலே.
பாலகன் மணிகண்டன் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டுவரக் காரணம் தாய் மேலிருந்தக் காதலே.
வேடனாய் வந்து  கிழவனாய் மாறி யானை காட்டி மிரட்டி ... காரணம் வள்ளியின் மேலிருந்தக் காதலே.
தீக்ஷிதர்களிடம் வாதிட்டு திருமறை ஏடுகளை ராஜராஜன் கைபற்றக் காரணம் தமிழ் மீதிருந்தக் காதலே.
அப்பூதியடிகள் தன் சேவைகளுக்கு அப்பரடிகளின் பெயரிடக் காரணம் அவர் மேலிருந்தக் காதலே.
நான் தொடர்ந்து எழுதுவதற்கும் எழுதாத அன்று 'என்னாச்சி ?' என்று நீ கேட்பதற்கும் காரணம் *காதலே ... காதலே*

413. என் உயிர்த்தோழி உறங்குகிறாள்.
சாகசங்கள் பல புரிய வல்ல என் சகி சயனித்திருக்கிறாள்.
தன் தினக் கவலைகளை தூர வைத்து விட்டுத் துயில்கிறாள்.
நெஞ்சை அழுத்தும் சோகங்களை மறந்து நித்திரையிலிருக்கிறாள்.
யசோதையின் மடியில் கண்ணன் போல் கோதை என் மடியில் நிம்மதியாய்க் கண்ணயர்கிறாள்.
முல்லை நீ தொல்லை தராது தூர நின்று நாசி தீண்டு.
பால் நிலவே நீ மேகத்தின் பின் நின்று வெளிச்சம் குறைத்து ஒளிர்.
இடி மின்னல் இரண்டும் இந்தப் பக்கம் வராதிருக்க உத்தரவு.
இன்றைய பொன்மாலைப் பொழுது கேட்டபடியே தொடர்ந்து உறங்கு.
*தென்றலே ... தென்றலே ...*
*மெல்ல நீ வீசு*

412. லக்குமணுக்கு இராவணனின் சேதி 'நல்லதை உடனேயும், கெட்டதை காலம் தாழ்த்தியும் செய்யணும்'.
கிருஷ்ணன் மந்திரி உத்தவருக்கு சொன்ன சேதி உத்தவ கீதையாம்.
அரிமர்த பாண்டியன் வாதவூரார்க்கு குதிரைகளோடு விரைந்து வரணும் என்று சேதி அனுப்பினான்.
சிவன் பார்வதிக்கு சொன்னதில் முதலான சேதி உண்மை சத்தியம் காக்கப்பட வேண்டும் என்பதே.
பீஷ்மர் தருமருக்கு சொன்ன சேதி 'நல்லதும் கெட்டதும் அவரவர் சிந்தையில் இருந்து தோன்றுவதே'.
ஆதிசங்கரின் சேதி 'பரம்பொருளே மெய், பணம் பொருள் எல்லாம் பொய், மூடனே' என்பதாம்.
இத்தனை நெருங்கி நாம் பழகி, நீ மட்டும் ஏனடி ... சொல்லடி
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி...*

411. சீதையைத் தேடுவதற்கு கார்காலம் முடியக் காத்திருந்தான் காகுந்தன்.
வாலி மாயாவி சண்டை முடியும் வரை காத்திருந்தான் சுக்ரீவன்.
'இன்னும் ஒரு திங்கள் மட்டும் வரை காத்திருப்பேன்' என்று சீதை சேதி சொல்லியனுப்பினாள் அனுமனிடம்
8 வது பிள்ளை அவதரிக்கும் காலம் வர காத்திருந்தான் கண்ணன்.
வீரபாகு தூது சென்று விவரமறியும் வரை காத்திருந்தான் வடிவேலன்.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.
2 நாளோ 5 நாளோ சம்மதம் கிட்டும் வரை காத்திருந்தான் அமுதன்.
இதோ இங்கே *காதலெனும் தேர்வெழுதி காத்திருக்கும் மாணவன் நான்*


410. சீதையை சந்தித்த பின், தீவை நாசம் செய்த அனுமனை கட்டியது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரம்.
ஹிரண்யனைக் கொன்ற நரசிம்மம் கோபம் அடங்கி கட்டுப்பட்டது் ப்ரகலாதன் அன்பில்.
பாகிரதன் வேண்ட, கங்கையின் காட்டு வெள்ளத்தை கட்டுக்குள் வைத்தது சிவனின் ஜடா முடி.
தன் இன்னொரு கண்ணையும் பிடுங்க முயன்றவனை தடுத்தது 'கண்ணப்ப நில்' எனும் ஒலி.
புயலெனப் புறப்பட்ட ப்ரசன்னாவை போக விடாது தடுத்தது பைரவி கட்டிய சிறு கயிறு^.
நானெங்கும் நகர முடியாது நீ எனைக் கட்டி இழுத்து வைத்திருப்பது,
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*

^ அபூர்வ ராகங்கள்

409. அரியாசன் என்றார்கள், அமைதி காத்தேன், ஆடவில்லை.
அன்றிரவே ஆரண்யம் என்றார்கள், அலட்டிக்கவில்லை.
அப்படியா சரி என்று சொல்லி விட்டு கிளம்பி வந்து விட்டேனன்றோ.
அடக்கடவுளே, இப்படியாகிவிட்டதே என் செய்வேன்?
என் பெண்மான் ஒரு பொன் மான் கேட்டாள், அது ஒரு பிழையா?
மாயமான் பின் ஓடியது தவறோ?
இப்போது என் மட^மானை இழந்துத் தவிக்கிறேனே, தகுமா?
எங்கு சென்றாள்?யார் வேலை இது?
விதியோ இல்லை சதியோ?
நடந்தது என்ன?அறிந்தவர் உண்டா?
அடி சீதே, என் உயிரே,
*காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே?*


408. மூன்றாவது முறையாய் இன்று சந்தித்தேன், பார்க்கையிலேயே புரிகிறது, அவள் தேன் தேன்.
மெல்லிய தேகம், மல்லிப்பூ வாசம், ஒரு சில அடி தூரம் வரை வீசும்.
பார்வையில் கனிவு, பேச்சில் நடையில் பணிவு;
தள்ளி நின்று யானையை பார்க்கும் துணிவு, கிட்ட நின்று சிலையை ரசிக்கும் அழகு;
ஒரு சிலையே சிலையை ரசிக்குதே!
எனக்குப் பிடித்திருக்கிறது, பழக மனம் விரும்புது.
எங்கிருக்கிறாள், யார் ஏதும் தெரியாது, காதல் என்ன காலம் நேரம் எல்லாம் பார்த்தா வருது.
ஒரு மின்னல் போல்... சடாரென்று என்னுள் புகுந்து, தன்னை நோக்கி என்னை இழுத்து....
இப்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவள் ஞாபகம்.
எங்கு நோக்கினும் அவள் திருமுகம்
அயராதே கண் முன் சொப்பனம்
தள்ளிப் போய் விட்டது தூக்கம்
*விழிகளின் அருகினில் வானம்*

Tuesday, May 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 54

407. காலை மாலை எல்லா நேரமும் உன் ஞாபகம் வருது
நெஞ்சில் கவிதை வரிகள் அருவி போல் சுழலுது
உனை என்று காண முடியுமென்று மனம் தவிக்குது
உன்னிடம் என்னென்ன பேசலாம் என்ற யோசனை உதிக்குது
உன் நடை உடை பாவனை மீண்டும் பார்த்து ரசிக்க ஆவல் எழுது
நல்ல சகுனம் பல நெஞ்சில் மின்னலாய்த் தோன்றுது
'சுபம் சுபம் சுபம்' என்ற சத்தம் எங்கிருந்தோ கேட்குது
உள்ளத்தில் உற்சாகம் பொங்குது.
இதோ இதோ *இளங்காத்து வீசுது*


406. மிதிலையில், அண்ணலும் நோக்க அவளும் நோக்க, காதல் பூத்தது.
தந்தை கதை சொல்ல கண்ணன் மேல் ஆண்டாளுக்கு காதல் பூத்தது.
அன்னப் பறவையின் தூதில் நளன் தமயந்தி இடையே காதல் பூத்தது.
இடும்பனை வீழ்த்த தங்கை இடும்- பிக்கு பீமன் மேல் காதல் பூத்தது.
அகலிகையின் அழகை நாரதர் கூற கௌதமர் மனதுள் காதல் பூத்தது.
உன் அன்புப் பார்வையா, பேசும் பழகும்  விதமா, அக்கறையா,
எதுவோ ஆனால் என்னுள் இதோ ...
காதல் *அழகாய்ப் பூக்குதே*


405. கைகேயி வரம் கேட்க தசரதனுக்கு வந்தது துக்க மயக்கம்.
இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லக்குமனுக்கு மாய மயக்கம்.
சத்யபாமா போரிட நரகாசுரன் முன் கண்ணன் கொண்டது பொய் மயக்கம்.
யக்ஷனின் குரலை நிராகரித்த பாண்டவர்க்கு கர்வ மயக்கம்.
பெரிய யானை அருகில் வந்துப் பிளிர வள்ளிக்கு பய மயக்கம்.
ஜானு ராம் நெஞ்சில் கை வைத்துப் பார்த்த போது எந்த மயக்கமோ,
உன்னைப் பார்க்கையிலெல்லாம் என்னுள் *காதல் மயக்கம்*

404. வேர்வை வழிவதெல்லாம்
   தென்றல் வீசும் வரை தான்
பசி மயக்கம்
   உணவு கிட்டும் வரை தான்
கனவு வருவதெல்லாம்
   உறக்கம் கலையும் வரை தான்
கற்பனை என்பதெல்லாம்
  காட்சி தெரியும் வரை தான்
துன்பம் துயரம் எல்லாம்
   துணைக்கு ஆளில்லா வரை தான்
நிலவின் ஒளி மிளிர்வதெல்லாம்
   *புத்தம் புது காலை* வரை தான்

403. அமிர்தாஞ்சன் கழுத்துப் பக்கம் தடவுகையில் உறுமி மிரட்டுவது அழகு.
நான் பார்ப்பதைப் பார்த்து இங்கு அங்கு இழுத்து விட்டுக் கொள்வது அழகு.
என் தட்டிலிருந்து எடுத்துத் தின்று பின் ஒன்றும் தெரியாதது போல் முழிப்பது அழகு.
யாரும் நமை பார்க்காப்பொழுது உதட்டை ஈரமாக்கிக் கண்ணடிப்பது, அழகு.
நேற்று அந்த காங்ரா சோளி முடிச்சி போட்டு விடும் போது தான் பார்த் ... ஐயோ நீ செம்ம செம்ம அழகு.
மொத்தத்தில் நீ செய்யும் எதுவும், உனைச் சார்ந்ததெல்லாம் *அழகே ... அழகு*


402. அடேய் ... லூசுப்பயலே !
என்ன கேட்கலாம் எதைக் கேட்கக் கூடாதுன்னு வரைமுறை இல்லை,
'அவளோடது வாடாமல்லி கலர்,
உன்னோடது?' இது ஒரு கேள்வியா?
அவள் தாண்டியா ஆடுறா, உனக்கு தெரியாதான்னு கேட்டா ... எருமை.
எனக்கு பரதநாட்டியம் தெரியும், அவளுக்கு ? சொல்லு பக்கி
இந்த வயசுல ரட்டை சடை யாரும் போடமாட்டாங்கடா, ஏன்னு கேட்டா என்ன சொல்றது பொறம்போக்கு.
காஞ்சிபுரத்தில இருந்தா பட்டு தான் கட்டணுமா? மதுரை ல இருக்கச்ச சுங்குடி வாங்கலேன்னா தப்பா ?
கேக்குறா பாரு எசகு பிசகா பேக்கு.
நீ வாயத் தொரந்தாலே எதாச்சும் விவகாரமாத்தான் கேட்பேன்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சி போச்சி.
தயாராத்தான் இருக்கேன், இன்னும் ஒரு கேள்வி.... மவனே மீடூ ல உன் பேர சேர்த்து விடுறேன்,
கேளுடா ... கேளு நீ கேன ...
*கேள்வியின் நாயகனே*


401. அதர்மம் தலைதூக்கும் போதெலாம் தர்மம் அதை அழித்து ஜெயிக்கும்.
பின் நன்றி தெரிவிக்கும்.
*
விபீஷணனுக்கு ரங்க விமானத்தை அளித்து நன்றி் சொன்னான் ராமன்
கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி நன்றியுரைத்தான் கண்ணன்
பரவையாரிடம் சுந்தரருக்காக தூது சென்று நன்றி காட்டினான் சிவன்.
சபரிமலையில் கோவில் கட்டி தன் நன்றி சொன்னான் பந்தள ராஜன்.
கம்பன் 1000 பாடலுக்கொருமுறை சடகோபருக்கு நன்றி பாடினான்.
சேவை எதுவோ, தாஜ்மஹால் கட்டி நன்றி தெரிவித்தான் ஷாஜஹான்.
*
நான் எப்படி யாரைச் சொல்ல; பொதுவாய் எல்லாருக்கும்,
முக்கியமாய் ... அன்பே ரகசியமாய்
*நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி*


400. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
அதுவே இன்று எழுதியிருந்தால், தடை செய்யப்பட்டிருக்கும்.
பஜ கோவிந்தம் - ஆதி சங்கரர்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

Sunday, April 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 53


399. சீதையைத் தேடும் பணி துவங்கியது மழைக் காலம் முடிந்த பின் தான்.
கண்ணனைச் சுமந்து வசுதேவர் கோகுலம் வர வழியெங்கும் நல்ல மழை.
கோவர்த்தன மலை தூக்கி கோவிந்தன் மக்களைக் காக்கக் காரணம் பெரும் புயல் மழை.
சிவனடியார் புசிக்க முன்தினம் தான் நட்ட நெல்மணிகளை சேகரிக்க இளையான்குடி நாயனார் விரைந்தோடினார் மழையில்.
பஞ்சம் போக்க ஸ்ரீராகவேந்திரர் யாகம் செய்ய தஞ்சையில் பொழிந்தது மழை.
புராணத்தில் சரி, நிகழ்காலத்தில் உனைப் பற்றி எண்ணையில்
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*

398. வசந்த காலம் - குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம்.
ராமன் பிறந்தது வசந்த காலம்.
பஞ்சவடியில்* சீதையுடன் மகிழ்ந்து வாழ்ந்து வந்தது வசந்த காலம்.
அவளைப் பிரிந்து கிஷ்கிந்தையில் துயரத்தில் துடித்தது வசந்த காலம்.
காலங்களில், தான் வசந்த காலம் எனச் சொல்கிறான் கிருஷ்ணன்.
சிவன் மீது மன்மதன் பானம் எய்து பின் சாம்பலானது வசந்த காலம்.
சாபம் பற்றித் தெரிந்தும் பாண்டு மாத்ரி இணைந்தது வசந்த காலம்.
மோகினி அவதாரம் பார்த்து சிவம் மோகம் கொண்டது வசந்த காலம்.
ஆம்...இதோ இந்த வசந்த காலம் ...
என்ன தான் நாம் இருவரும் விலகி விலகி நின்றேப் பழகினாலும்,
ஒருவரை ஒருவர் வெறுக்காது ஒதுங்கியே நின்றிருந்தாலும்
நாட்கள் தானே நகருது,
காலம் வீணே ஓடுது,
*வசந்த காலங்கள் கசந்து போகுது*

397. கோதா கூந்தல் சுகந்த மாலையை ரங்கமன்னார் கேட்டதும் பெரியாழ்- -வாரை சந்தோஷ மின்னல் ஒரு கோடி தாக்கியது.
'இனி எமை தொடாதீர், இது சிவம் மீது ஆணை' என்று மனைவி
சொல்ல திருநீலகண்டர் மனதில் மின்னல் கோடி தாக்கியிருக்கும்.
வழி மறித்த காவல் தெய்வம் லங்கிணி மார்பில் அனுமன் விட்ட குத்து மின்னல் ஒரு கோடி தாக்கியதற்கு சமமானது.
கூடப்படித்த துருபத அரசன் 'யார் நீ?' எனக் கேட்டதும் உதவி கேட்க வந்த ஏழை துரோணருக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியதாய் இருந்தது.
தேவகியின் எட்டாவது பிள்ளை சிறை தப்பிய செய்தி கேட்டதும் கம்சனுக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்திருக்கும்.
பாம்புகள் தீண்டியும் தீ சுட்டெரித்தும் மலையுச்சியிலிருந்து வீசப்பட்டும் ப்ரகலாதன் இறக்கவில்லை என்ற செய்தி ஹிரண்யகசுபுவிற்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்தது.
உன் ஒரு ... ஒரே ஒரு முத்தம் தான் தந்தாய், என்னைத் தாக்கியதோ
*மின்னல் ஒரு கோடி*.


396. பரந்தாமனின் பரிந்துரைபடி பரமசிவனைப் ப்ரார்த்தித்து பசுபதஸ்திரம் வேண்டினான் பார்த்தன்.

'பெருமாளே உம் பவளவாய் பார்த்தபடி இருத்தல் போதும், இந்திரப் பதவி வேண்டா' என்று வேண்டினார் பெரியாழ்வார்.

காலம் தவறாத மழையும், வயல் நன்கு  விளையவும், கொட்டிலில் மாடு கன்று நிறையவும் வேண்டியது ஆண்டாள்.

'பிறவாமை வேண்டும், பிறந்தாலோ இறைவ, உமை மறவாமை வேணும்' என்று வேண்டியது ஔவையார்.

'பால் தேன் வெல்ல பாகு நானுக்குத் தர சங்கத் தமிழ் நீ எனக்குத் தா' என்ற வேண்டலும் ஔவையாரே.

'உன் புகழ் நான் பாடுகிறேன், என் குடி நீ காத்திடு' வேண்டியது பாரதி.

'கல்லானால் தணிகை மலையில், மரமானால் பழமுதிர் சோலையில்' என வேண்டியது சௌந்தர்ராஜன்.

உன்னோடு உன் அருகில் அமர்ந்து 96 பார்க்கணும். இது போதும். எனக்கு *வேறென்ன வேறென்ன வேண்டும்*


395. இலங்கை நோக்கிக் கிளம்பு முன், அனுமனிடம், சீதையும் தானும் மட்டும் அறிந்து சில சேதிகளை ராமன்  எடுத்துரைத்தான்.

கர்ணனைக் கொன்ற காண்டிபன் கதற, அவனை ஏற்கனவே பல பேர் கொன்ற சேதிகளை கண்ணன் விவரித்தான்.

பல மாறு வேடங்களணிந்து வள்ளியை மணந்த பின், அவள் பூர்வ ஜென்ம சேதிகளை முருகன் உரைத்தான்.

தன் வம்சத்தை அழிப்பதேன் என்று கேள்வி  கேட்ட போது சந்தனுவிடம் அஷ்டவசுக்கள் பற்றிய சேதியை கங்கை சொன்னாள்.

நரகம் கிட்டும் என்று தெரிந்தும் கோவில் கோபுரமேறி நாராயண மந்திர சேதிகளை ராமானுஜன் சொன்னான்.

ஆக இவ்வளவு பேருக்கு சொல்ல ஏதோயிருக்க, எனக்குள்ளும் இருக்கே; *மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு*


394. முன்பெலாம் மனமுழுதும் விசனம்
எதைப் பார்த்தாலும் உதாசீனம்
வாய் திறந்தாலே வெளிபடும் சினம்
அழகை ஆராதிக்காத முட்டாள்தனம்
உன் மேல் படிந்தது என் கவனம்
வாழ்வில் கிட்டியது ஒரு பிடிமானம்
பிடித்திருக்கு உன் பிள்ளைத்தனம்
அதிராது ஓரிரு வார்த்தை வசனம்
கொஞ்சும் சிரிப்பே உன் மூலதனம்
இதுவே தினம் தினம் என் தியானம்
சலனமில்லா வதனம் தந்த ஞானம்
கை கோர்த்து கனவுகளூடே சயனம்
பேசிப் பழகி ஒன்றியது இரு மனம்
நீயுன் நெஞ்சில் தந்தாய் ஆசனம்
என் தவத்திற்கிட்டிய வெகுமானம்
உன் யவ்வனம் கவிதைக்கு தீவனம்
இதோ மழை, வானம் தரும் தானம்
கேட்குதா, பறவைகளின் கானம் ?
புறப்படுவோமா, இது நல்ல சகுனம்
நிறைய வரும் ஏளனம் விமர்சனம்
நல்லது என்று பேசும் நம் ஜனம் ?
அவர் தம் வாய் மூடுவது கடினம்
துறந்து வா, நாம் போகுமிடம் ...
*பனி விழும் மலர் வனம்*

Tuesday, April 16, 2019

பொன்மாலைப் பொழுதில் 52


393. வாலி அனுப்பிய ஆட்களோ என்று ரிஷிமுக் மலையிலிருந்த அனுமன் எண்ணினான் ராம லக்குமனை முதல் முறை பார்த்த போது.
'பித்தன் இவன்' என்று பழித்தான் கிழ வேடத்தில் இருந்தச் சிவனை முதல் முறை பார்த்த சுந்தரன்.
தன் பெண்ணை திருமணம் செய்து தர திட்டமிட்டான், அர்ச்சுனனின் வீரத்தை முதல் முறை பார்த்து ரசித்த பாஞ்சாலன்.
முகத்தில் பல தையல்களிருக்க நல்லாவை தீவிரவாதியோ என்று யுகித்தான் முதல் முறை அன்பரசு.
ராம் பதறி மயங்கி விழுந்தது ஜானகி அவன் நெஞ்சில் முதல் முறை கை வைத்துப் பார்த்த போது.
நீ என் கவிதை படித்துப் பாராட்டியது பெரு மகிழ்ச்சி; வாழ்க்கையில் இன்று தான் என்னையே நான்
*முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்*


392. மனம் மகிழ்ந்து கிடக்கிறது.
உனைக் கண்டதிலிருந்து உற்சாகம் பீறிட்டெழுகிறது.
உன்னருகில் அமர்ந்து பேசிச் சிரித்து, உண்டு, பகிர்ந்து ...
ஒருசில கேள்விகள் நறுக்கென்று ... உனைப் பார்த்ததும் மறந்துவிட்டது.
அற்புதமான இச்சூழலுக்காக இத்தனை வருடம் காத்திருந்தது தகும் என்று இன்று தோன்றுகிறது.
நீ, உன் அன்பு இன்னும் கொஞ்சம் கூட மாறாதது பார்க்க, புரிய நெஞ்சம் பூரிக்கிறது.
இரவு முழுதும் இருவரும் உறங்காது சுற்றித் திரிந்தது, நீ தந்த பல புது அனுபவங்களில் முதன்மையானது.
இன்னும் ... கொஞ்சம் நேரத்தில் நான் கிளம்பணும் ... புரிகிறது.
மீண்டும் உனை எங்கு எப்போது பார்ப்பேன் என்று தெரியாது பதற,
விடியாதே இன்று இருந்துவிடக் கூடாதா என்று நெஞ்சு ஏங்க
*இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே*

391. பரத்வாஜ் முனிவர் சொல்படி சீதா, ராம், லக்குமன் சித்ரகூடம் வந்தது யமுனையைக் கடந்து.
கண்ணனை தலையில் சுமந்துபடி மழையில் நந்தகோபர் நடந்தது
யமுனை ஆற்றின் மத்தியில்.
சத்தியின் மறைவுக்குப் பின் சிவம் தன் கோபம் தனிய குளித்தது
யமுனை ஆற்றில்.
இறக்கும் முன் அர்ச்சுனன் பேரன் பரீக்ஷித் தவம் செய்ய அமர்ந்தது
யமுனை ஆற்றங்கரை.
கண்ணனின் காளிங்க நடனம், ராசலீலை அரங்கேறியதெல்லாம்
யமுனை ஆறு, கரை.
பாவியரின் பாவங்களைப் போக்கப் பாடுபட்டு இன்று பாழாகிக் கிடக்கு யமுனை ஆறு.
அந்த  *யமுனை ஆற்றிலே ... ஈரக் காற்றிலே*

390. பேசணும் என்ற அவசியமில்லை.
பார்த்தாகணும் என்றெல்லாம் கட்டாயமில்லை.
விலகி நின்றாலும், புரியும் பதறாது.
தனியே தவித்தாலும், வெறுக்காது.
மின்னல் போலொரு தாக்கம்,
எப்பொழுதாவது ஏற்பட்டிருக்கும்.
அது ஒன்றே போதும். எண்ண எண்ண நெஞ்சு குழையும்.
உள்ளே ஏங்கும், அழும்; கூடவே நம் நலம் நாடும் ஒரு ஜீவன் எங்கோ இருக்கு என்றுணர்ந்து மகிழும்.
உங்களுக்குத் தெரியும் தானே, இல்லை இதுதான் அது என்று  புரியுமுன் காலம் மாறிடிச்சா ?
வெற்றியோ தோல்வியோ, காதல் ஒன்றும் பந்தயம் இல்லையே.
அது ஒரு அனுபவம்; உணரணும்.
வலிக்கும், கொதிக்கும், ஆர்பரித்து அடங்கும்; அதுவரை அமைதியாய் காத்திருப்போம் ... அன்போடு.
ஏனெனில் ... *பேரன்பே காதல்*.

389. காகுந்தன் காடு நோக்கி நகர, அவன் பின்னே அயோத்தி நகரமே போனது, சோகமாய் ஊர்வலமாக.
அங்கதேசத்தையும் அளித்து கர்ணனை கௌரவர் தம் தோளில் தூக்கி வந்தனர், ஊர்வலமாய்.
திருமணம் முடித்து, கம்சன், தேவகி நந்தகோபரை போஜ நாட்டுக்குள் அழைத்து வந்தான், ஊர்வலமாய்.
கண்ணனை தரிசித்த சுதாமாவை பூரணகும்பம் தந்து வரவேற்க ஊரே ஒன்றுகூடி நின்றது ஊர்வலமாய்.
இதோபார்... நானுன் சொல் பேச்சு கேட்டு நடக்க, நீ என் தேவைகளை பூர்த்தி செய்ய, சம்மதமெனில்
*போவோமா ஊர்கோலம்?*


388. அசுரர்கள் அழிக்கப்பட அதற்கு நன்றி கூறும் விதமாக என்றாவது இவ்வாறு தேவர்கள் சொல்லியிருப்பார்களா தெரியாது;
தன் குலம் வளர உதவியதற்கு தாய் சத்யவதி வியாசரிடம் இதைக் கூறியிருப்பாளா தெரியாது;
சுக்ரீவன் இல்லை விபீஷணன் ... ஒருவராவது ... தெரியாது;
அள்ளித் தந்தவனிடம் கண்ணீர் மல்க சுதாமா சொன்னானா தெரியாது;
கர்ணன் பலமுறை சொல்லியும், தன் செயலிலும் காட்டியதுண்டு.
ஆண்டாள் சொன்னாள், அதற்குப் பிறகு நான் தானோ சொல்கிறேன்...
தெரியவில்லை, அதனாலென்ன
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

387. கண் விழித்ததும் கைப்பேசியில் காலை வணக்கம் அனுப்புகிறேன்.
நீ பதிலனுப்பும் வரை படுக்கை விட்டெழாது காத்திருக்கிறேன்.
சாப்டியா குளிச்சியா என்றெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்
நீ திருப்பி எனை கேட்கணுமென்று எதிர்பார்க்கிறேன்.
உன் மொக்கை பேச்சையெல்லாம் வெட்கிச் சிரித்து ரசிக்கிறேன்.
உன் ஆடை நிறத்திற்கொத்த நிறத்தில் நானும் அணிகிறேன்.
தயக்கமே இல்லாது பேசி உளரி உன்னோடே ஊர் சுற்றுகிறேன்.
நீ இல்லாது என்னால் தனியே வாழ முடியும் என்றெண்ணக் கூட முடியாது ... சுருங்கச் சொன்னால் ...
நீரின்றி நாடா?
*நீயின்றி நானா ?*

Sunday, March 31, 2019

பொன்மாலைப் பொழுதில் 51

386. மறுபடி மறுபடி அதைப் பற்றியே சொல்ல, என்செய்ய உங்கள் சினம் கூடலாம்.
வாலிக்கு, அவன் முன் நிற்பவர் வீரத்தில் பாதி, அவன் வீரத்தில் கூடிடுமாம்.
சீதை மறுக்கும் போதெல்லாம் அரக்கனுக்கு அவள் மேல் ஆசை கூடியதாம்.
கயிறு எடுத்து உரலோடு கட்டக் கட்ட கண்ணனின் வயிறு அளவு கூடியது.
துணி எடுத்துச் சுற்ற சுற்ற வானரத்தின் வால் நீள அளவு கூடியது.
காதலில் நாம் கலந்த பிறகு,
உனக்கெப்படியோ தெரியவில்லை
*மாலையென் வேதனை கூட்டுதடி*

385. டேய் நண்பா, கொல்லாதேப்பா
எதற்கெடுத்தாலும் புராணம் பற்றிக் கதைக்கிறாயே,
கோசலராமனுக்கு கோதண்டம், பரசுராமன் கையில் கோடாரி,
பலராமன் கையில் வேறு பொருள்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
தரையில் ஓடும் எலி அண்ணனுக்கு
வானில் பறக்கும் மயில் தம்பிக்கு;
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
இரு வேறு லோக சண்டை, க்ருதா யுகம் (அமிர்தம் கடைதல்).
பூலோகத்தில் இரு வேறு நாட்டு
சண்டை, த்ரேதா யுகம் (ராமாயண்)
ஒரே நாட்டு மக்களிடையே சண்டை, கலியுகம் (பாரதம்).
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
முதலிலெல்லாம் ஆணோடு பேசார், அதன்பின் கதவு மறைவிலிருந்து, அப்பறம் கால் மேல் கால் போட்டு;
இப்போதோ பேசவே பயப்படும் ... ஆடவர்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
நீ மட்டும் ... இன்னும் மாறாது,போன ஜென்மத்து நினைவலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறாயே.
தம்பி, என்னை இந்த க்ருப்பை விட்டு ஓட வைக்காதே.
பழைய பாட்டே போட்டு கொல்லாதே
போதும் *புதிய பாடல் ~பாடு~* போடு.


384. பாற்கடலில் பாம்பு மெத்தையில்
பள்ளி கொள்பவன்;
பாவங்கள் பரவும் பொழுதெல்லாம்
பாருலகைப் பாதுகாக்கப்
பிறவியெடுப்பவன்;
*
அயோத்தியில் அவதரித்து
அரசகுமாரனாய் வளர்ந்து
ஆரண்யம் புகுந்து
அத்திரம் தொடுத்து
அரக்கர்களை அழித்து
அனைத்தும் அழகுற
ஆண்ட ஆண்டவன்.
*
மயிற்பீலி சூடி
மாடு மேய்த்து
மாயம்பல புரிந்து
மங்கையர் மனங்கவர்ந்து
மாமனையே கொன்று
மகாபாரதத்தில் தேரோட்டி
மாகீதை சொன்னவன்.
*
தானே தெய்வம் என்றவனைக் கொல்ல தூணை பிளந்து வந்தவன்
மூன்றடி மண் கேட்டு முக்தி தந்தவன்.
*
ஸ்ரீநிவாசனாய் கோவிந்தராஜனாய் நாராயணனாய் ராகவனாய்
கிருஷ்ணனாய் வெங்கடேசனாய்
கோபாலனாய் ஆராவமுதனாய்
பெயரெதுவான போதும் பொருள்
ஒன்றாய் விளங்கும் அந்தத்
*திருமால் பெருமைக்கு நிகரேது?*

383. ராமனின் பாதத்துகள் கல்லின் மேல் பட அகலிகை உருவானாள்.
காந்தாரியின் கரு பானைகளில் நிரப்பப்பட  கௌரவர் உருவானர்.
காக வடிவிலிருந்து கமண்டலத்தை கவிழ்க்க காவிரி உருவானது.
சிவனின் நெற்றிக் கனலிலிருந்து வடிவேலன் உருவானான்.
விந்தைகளே வரமான போது அதை வெல்ல நரசிம்மம் உருவானது.
அவள் ... பஞ்சு போன்று, இத்தனை மென்மையாய், ஒருவேளை ...
*வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?*


382. ச்சே, இப்படி ஒரு கேள்வி கேட்டு,
இதற்கு நான் என்ன சொல்வேன், எதைச் சொல்லி புரிய வைப்பேன்.
முழிக்கிறேன் தவிக்கிறேன் தத்தளிக்கிறேன் தடுமாறுகிறேன்;
இதுவரை என்னிடம் யார் யாரோ என்னென்னவோ கேட்க,
எதையோ எப்படியோ சொல்லி சமாளித்திருக்கிறேன்;
பணம் பாசம் கல்வி நட்பு போன்று பல தலைப்புகளில் பொய் பேசி,
ராமன் ஆடிய சூதாட்டம், தருமரின் சூழ்ச்சி, கர்ணனின் கஞ்சத்தனம் பற்றியெல்லாம் பலவாறு கதை அளந்து சமாளித்திருக்கிறேன்.
ஆனால் ... ஆனால் ... நீ இப்படி ஒரு கேள்வி கேட்டாயே, இதற்கென்ன சொல்ல, எப்படி விளக்க; புரியாது ...
ம்ம்ம் ... காதல் என்பது ...
*கண்மணியே, காதல் என்பது ...*


381. குரங்கு தானே, என்ன செய்து விட முடியும் என்று குறைத்து எண்ணி
     ராவணன் ஏமாந்தான்.
அழகு மோகம் மயக்க மணந்து பிள்ளையரை கங்கையில் இழந்து
     சந்தனு ஏமாந்தான்.
கர்ணன் இருக்க கவலை எதற்கு என்று எண்ணி பீஷ்மரை பகைத்து
     துரியோதனன் ஏமாந்தான்.
கண்ணன் தனை மறந்திருப்பான் என்று எண்ணி தயங்கியே வந்த
     சுதாமா ஏமாந்தான்.
தவ வேடம் தரித்தவன் தவறேதும் செய்யான் என்று நம்பி அழைத்து
     மெய்ப்பொருளான் ஏமாந்தான்.
வந்தது யாரென்று விளங்கிக் கொள்ளாது தந்ததையும் பார்க்காது
     பாண்டியன் ஏமாந்தான்.
இளம் கன்னியரை மலர் என்று எண்ணிக் கற்பனை செய்துப் பாடி
     *கம்பன் ஏமாந்தான்*.


380. பிடித்திருக்கிறது.
உன்னைப் பார்த்தாலே ஒரு பரவசம் குதூகலம் பற்றிக் கொள்கிறது.
*
தலை குளித்து, கூந்தலிலிருந்து நீர் முதுகுப்பக்கம் சொட்ட,
நெற்றியில் குங்குமம், சவ்வாது வீபுதி; கொல்லையில் பறித்த மல்லி தலையில்;
ஒற்றைக் கண்ணால் எனைப் பார்த்தபடி துளசி சுற்றி, தேவாரம் பிரபந்தம் பாடி, பாதி காஃபி தந்து மீதி நீ குடித்து தாவணியில் (உன்) வாய் துடைத்து சொருகிக் கொல்லும் நேர்த்தி;
கதை கவிதைகளில் நாட்டம், வீடு முழுதும் வண்ணக்கோலம்.
*
ம்ம்ம் ... மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது.
உன்னாலே உன்னோடே ~என்~ நம் வாழ்வு நலம்பெற வேண்டுமென்று ஆண்டவனை வேண்ட, அவ்வமயம்
*டிங்டாங் கோவில் மணி நான் கேட்டேன்*

Monday, March 18, 2019

பொன்மாலைப் பொழுதில் 50

379. பிடித்திருக்கப் பழகினோம்.
விரும்பியே இணைந்திருந்தோம்.
சிரித்துப் பேசுகையில் கிடைக்கும் பரவசம்,
கை பற்றி நடக்கையில் பரவும் மின்சாரம்,
காணாப் பொழுதினில் உள்ளே எழும் ஓலம் விரும்பியே அனுபவித்தோம்.
ஒருநாள் ... தவறு என்னுடையதே.
புரியாது உளறியது உண்மையே.
வேலை அதிகம், இரவு நேரம்,
வெளியே மழை, தனியே பயம்.
வீடு வரை துணையாய் வந்தாய்
விரல் பற்றிக் கவிதை சொன்னாய்.
பாராட்டி ரசிக்க, 'பரிசு?' என்றாய்.
உள்ளே வந்தால் தேநீர் என்றேன்.
தயங்கியே நீ வெளியில் நின்றாய்.
கையில் இருந்த சாவியைக் காட்ட
ஓகோவென்று நீ விசிலடிக்க
சாதாரணமாகவே வெடவெட என்று சுற்றித் திரிபவன்
*யாருமில்லாத் தனியரங்கில் ...*


378. கர்ணன் எப்பவுமே துரோகத்துக்கு துணை போகணுமா என்ன?
சண்டைன்னா முறைச்சுக்கணும் அடிச்சுக்கணும்னு அவசியமில்லை.
ஆள் சண்டியரானாலும் சத்தியம் தர்மம் தவறாம இருப்பது சாத்தியம்.
சகுனியோ கூனியோ சமரசமாய் வாழ வழி சொல்லலாம்.
அதனால, சொல்வது என்னன்னா ...
ரொம்ப வருஷமாச்சி, பார்க்கலை பேச்சு வார்த்தை இல்லை.
அதற்காக, மறந்துடணும்னு அவசியமில்லை.
அட ___ நாதரே, இந்த உலகத்தின் தோழரே, மறவாதீரும், இந்தப் பொட்டை சிறுக்கி *நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*


377. கையில் வில் இல்லை, எனவே நீ இராமனோ அர்ச்சுனனோ  இல்லை.
ஹிஹி, என்னதான் ஜாடை நிறைய ஒத்துப்போனாலும், வால் இல்லையே, எனவே நீ ___ இல்லை.
வள்ளி தெய்வானை பற்றித் தெரியவில்லை கையில் வேல் இல்லை, எனவே முருகன் இல்லை.
வர்ணமிரைத்து வரைந்திடினும் அவ்வளவு தத்ருபமில்லை, எனவே நீ ராஜா ரவிவர்மா இல்லை.
வெட்டி அதிகாரம் மட்டும் தூள் பறக்கிறது. கொஞ்சம் கருப்பு தான் என்றாலும் கையில் ...
ஒருவேளை... *அன்பே நீ என்ன அந்தக் கண்ணனோ மன்னனோ ?*

376. வெளிச்சம் நுழைய முயன்றுத் தோற்கும் அடர்ந்த ஒரு வனம்.
மனிதக் கால்கள் இதுவரை படாது, இப்புவியில் புனிதமான ஒரு இடம்.
இது பறவை விலங்குகளுக்கு இறைவன் தந்த வரம்.
உள்ளே நாம் நுழைந்துவிட்டோம் அன்றோ, இனி அவைகள் பாவம்.
கிடக்கட்டும், கண் முன் தெரியுதா, அற்புதமான ஒரு அருவி.
இங்குமங்கும் சிறகடித்துப் பறக்கும் பலவிதமானப் பறவைகளின் ஒலி.
சுழன்றடிக்கும் சுத்தமான காற்று,
மனதைக் கிறங்கடிக்கும் பூ வாசம்
இதமான தட்பவெட்ப நிலை.
இயற்கையோடு இணைந்து வாழ, ஏகப்பட்ட சுகமுண்டு;
நகர வாழ்வு நரக வாழ்வானதற்கு நம் பங்கு நிறைய உண்டு.
பேராசைக்கு விலையுண்டு என்று சொல்லுதோ, அருகில் மரத்தில்
*நீலக்குயில்கள் (இ)ரண்டு*


375. என்ன இது, எதற்காக, ஏன் இப்படி ?
பிடித்திருக்கு என்று மட்டும் தானே சொன்னான், அதற்கு?
பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் தெரியணுமா என்ன?
இத்தனை குழப்பம் இதுவரை என்னுள்ளே இருந்ததில்லையே;
ஐயகோ, இன்றென்ன வியாழனா திங்களா, I mean வெள்ளியா?
வேதியல் தேர்வு இன்றா நாளையா?
H2O வின் ஃபார்முலா என்ன?
காப்பர் சல்ஃபேட் கருப்பா சிவப்பா?
பல் தேய்த்தேனா? டம்ளர் இருக்கே, அப்போ காஃபி ஆச்சா, பசிக்குதே;
இந்த ஆடை இன்று அணிந்ததா ? நேற்று என்ன அணிந்தேன் ?
கண்ணாடி பார்க்க பயமாயிருக்கு; பின்னாடி அவனுருவம் ஒருவேளை தெரிந்திடுமோன்னு பதட்டமிருக்கு;
இது ஆசையா ஏக்கமா தேடலா? இல்லை எதிர்பார்ப்போ?
அந்தந்த சமயத்தில் அந்தந்த எண்ணம் தானே வந்து விடுகிறதே.
ஓ அப்போ இது..இதுதான்..அதுவா?
*என்ன இது ... என்ன இது என்னைக் கொல்வது?*

374. முதல் நாள் கல்லூரியில் எனைப் பார்த்ததும் மறைந்து கொண்டாய்.
மெல்ல மெல்ல பயந்து பயந்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசினாய்.
அன்பு அறிவு அடக்கம் நளினம் எல்லாம் இணைந்த அதிசயமாம் நீ.
உன் அடாவடி ரகளை அத்துமீறல் எல்லாம் என்னிடம் மட்டும் தானோ?
நான் வாங்கி வைத்த உணவை கேட்காது உண்பதும்,
டீ சுவைத்து விட்டு முகம் சுளிப்பதும் ...
சத்தமின்றி என் அறையினுள் நுழைந்து அரட்டை அடித்து உறக்கம் கலைத்து ...
பேனா பென்சிலில் ஆரம்பித்து ஷூ
ஜீன்ஸ் கேட்பதும் அடுத்து என்ன
கேட்பாயோ என நான் விழிப்பதும்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது,
மெல்ல மெல்ல நீ என்னை, என் உடைமைகள் எல்லாம்
*ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்*

373. குந்தி மந்திரம் சொல்லி அழைக்க உடன் வந்தவன் பகலவன்.
அபயமென்று பாஞ்சாலி கை கூப்பி  அழைக்க, வந்தானே பரந்தாமன்.
பசியென்று பாலகன் அழ பால் தர வந்தாளே பார்வதி.
ஆறுமுகன் அண்ணா என்றழைக்க அக்கணமே வந்தான் ஆனைமுகன்.
நீ மட்டும் ... இத்தனை தாமதம் ...
இன்றுதானே வருவதாய்ச் செய்தி அனுப்பினாய், காத்திருக்கேன் வா.
அப்பம் அக்காரவடிசல் பருப்பு உசிலி தயார், ஆறிப்போகுமுன் வா.
உன்னோடு உறவாட உறங்காதுத் தவமிருக்கிறேன், வா.
இதோ ... இதோ ... காலடிச் சத்தம் ... நீ தான், இது நீ தான்
*வா வா வா ... கண்ணா வா*