Tuesday, December 25, 2018

பொன்மாலைப் பொழுதில் 44


337. மண்ணில் பயிர் உயிர் வாழ முடிவதெல்லாம்
மழை பெய்யும் வரைதான்.
கதை கவிதை எல்லாம்
கற்பனை காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடும் வரையில் தான்.
நல்ல சாப்பாடு தூய அன்பு இதெல்லாம்
தாய் என்பவள் தரணியில் வாழும் வரை தான்.
பேச்சில் பணிவு கண்ணில் கனிவு எல்லாம்
காரியம் ஆகும் வரை மட்டும் தான்.
என் ஆட்டம் அலட்டல் எல்லாம்
சிநேகமே நீ என்னோடு இருக்கும் வரைதான்,
எனை விட்டுப்
*போகாதே ... போகாதே*

336. பிரச்சனைகள் ஏராளம்,
சிக்கல்கள் தாராளம்;
யாருக்குத்தான் துன்பமில்லை என்று அறிவு கேட்கிறது; மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
எந்த பிறப்பில் என்ன பாவம் செய்தேனோ, அனுபவிக்கிறேன்.
யாரீந்த சாபமோ, சிரமப்படுகிறேன்.
மனம் இசையாது எது நடந்தாலும் உடனே வருந்தி, அழுகிறேன், ஆத்திரப்படுகிறேன்.
அவசரமாய் என்னவோ எதையோ ஏனோதானோவென்று செய்து என் வெறுப்பை வெளிகாட்டுகிறேன்.
சில நேரம் கழித்து என்னசெய்தேன் என்றே புரியாது தடுமாறுகிறேன். மறந்து முழிக்கிறேன்;
காரணமில்லாமல் காரியம் இல்லை என்று கற்றறிந்த போதும் ...
இப்போது கூட ... என் நெஞ்சின் ஏக்கத்தை ஒரு சில வார்த்தைகளில் கவிதையாய் ...
இங்குதானே வைத்தேன்,
*எங்கே எனது கவிதை ?*

335. முடிந்தவரை கொடை, தானம் செய்வதுண்டு,
எனினும் கர்ணன் இல்லை நான்;
இலக்கு பார்த்து அடிப்பதுண்டு;
ஆனாலும் அர்ச்சுனன் அளவிற்கு இல்லை நான்;
கவாஸ்கர்  டெண்டுல்கர் ல்லாம் தெரியுமென்ற போதும்
கால்பந்து விளையாடியதில்லை நான்.
வாலி வைரமுத்து அளவிற்கில்லை எனினும்
கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்குபவன் நான்.
அட, சின்னதாய்க் கூட கோவில் எதுவும் கட்டியதில்லை
எனினும்  *ராஜ ராஜ சோழன் நான்*

334. சிரித்தால், கூட சேர்ந்து சிரிப்பேன், சிரிக்க வைத்து மகிழ்வேன்.
கெஞ்சினால் விட்டுத் தருவேன்.
கோபப்படுத்தினால் எரித்திடுவேன்.
எதிரில் நின்று மோத, ஒரு கை பார்க்காது விடமாட்டேன்;
யாராயிருந்தாலும் சரி;
பொய் பிடிக்காது, புகை போதை பழக்கமிருந்தால் விரட்டி விடுவேன்.
காலில் விழச் சொல்லவில்லை; ஆனால் விழவைக்க எண்ணினால் என்னிடமிருந்து தப்ப வழியில்லை.
மதியாரை மிதித்திடுவேன், பிடித்தாரோடு மட்டும் பழகுவேன்.
உனக்குப் பிடித்திருக்கா? சமாளிக்க முடியும் என்ற தெகிரியம் இருக்கா?
பார்க்கையில் மட்டும் சாந்தம்; பேசிப் பழக புரியும் நான் சரியான *சண்டை கோழி*


333. சொல்வதைக் கேட்க மறுக்கிறாய்
அதிகம் பேசினால் முறைக்கிறாய்
நவில்வது நாட்டு நன்மைக்குத்தான் என்றால் ஏற்க மறுக்கிறாய்.

ஸ்வர ஆலாபனை பூஞ்சோலையில் செய்வதால், இப்போது பார், குயில்கள் கூவ மறந்து உன் குரல் கேட்கக் காத்திருக்கின்றன.

பரத நாட்டியம் மாடியில் ஆடினால் பாதகமா ?
தோட்டத்தில் நீ ஆட அதைக் கண்டு ரசித்து மனம் லயித்து மயில்கள் மயங்கிக் கிடக்கின்றன.

ஏரிக்கரையிலெதற்கு நடைபயிற்சி?
அன்னம் உண்ணாது அன்னப் பட்சிகள் உன் அழகு நடை காண ஆவலோடு அமர்ந்திருக்கின்றன.

அடுத்து இந்த...வீணை வாசிப்பு... நாளையே உன் விரல்கள் மீட்டினால் மட்டுமே இசைப்போம் என்று வீணைகள் போராடினால்?

சரி சரி இப்போது என்ன செய்வது?
புல்லாங்குழல் ஊதுவதால் வந்தது.
கடன் கேட்கிறதே, மருதாணி
*உன் உதட்டோரச் சிவப்பை*

332. கட்டுமஸ்தான் உடம்பெல்லாம் கனவில் மட்டும் தான்.
வம்பு தும்பு எதிலும் ஈடுபட தெம்பு லேது.
நான் உண்டு, என் வேலையுண்டு என்று இருந்துவிடுவேன்.
என்னவோ அவளைப் பார்த்தால் மட்டும் ஒரு ... ஒரு ... ஈர்ப்பு ?
தேவையா என்ற கேள்வி, இவள் இல்லாது வாழ்வே வீண் இல்லையா என்று பதில் - எனக்குள் விவாதம்;
வரும் போதும் போகும் போதும் மெல்ல ஒரு பூஞ்சிரிப்பு.
சின்னச் சின்ன பரிமாறல்கள், பெரியப் பெரிய மாற்றங்கள்.
திடீர்ப் பின்னடைவு ... முழு மூச்சில் முன்னால் பாய உதவுமோ?
திந்நவேலியில் ஒரு திருமணம், திரும்ப மூன்று நாளாகும் என்று சொல்லியிருந்தாள்.
எந்நிலையை என்னென்று சொல்வேன் ஏதென்று சொல்வேன்.
எனை எண்ணியே ஏந்திழையாள் ஏங்குவாளோ என்று தவித்தேன்.
வனவாசம் முடிந்து வஞ்சி அவள் வருகைக்காக காத்திருக்கையில்,
எந்த நேரமும் எதிர்படலாம் என்று எண்ணுயிருக்கையில்,
பின்னாலிருந்து என் கண்ணை யாரே மூட,
வளையலோசை கேட்க,
மருதாணி வாசம் எனை மயக்க,
பரிதவிப்பு நீங்கி பரவசம் பிறக்க,
என் உள்ளுணர்வு உணர்ந்துக் கூவியது *கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*.

331. அடேய் தெரியுமடா உன்னை.
எப்போது எப்படி எப்படி நீ மாற்றிப் பேசுவாய் என்றறியேனா என்ன ?
'நல்லாருக்கு' என்றால் 'உனக்குப் பிடிக்குமென்று தான்' என்பாய்.
'எப்படி இப்படியெல்லாம்' என்று சொன்னால் 'எல்லாம் உன்னோடு பழகுவதாலே தான்' என்பாய்.
ஆளுக்கேற்றவாறு அரற்றுவாய்.
எது அணிந்திருந்தாலும் இத்தனை அழகு நீ அணிவதால் தானென்பாய்
நீ தொட்டுத் தந்ததால் இத் திரவம் அமிர்தமாய் இனிக்குதென்பாய்.
அறிவேனடா,  அழகா,
உன் தாய் யசோதை இல்லை
நீ யாதவ குலத்தில் பிறக்கவில்லை
உலகில் எங்கு வசித்தாலும் நீ உன் லீலையை விடுவதில்லை.
*கோகுலத்துக் கண்ணா*

329. மனிதனை மனிதனாக்கும்,
மனதளவிலும் முழுமையாக்கும்.
கல்லைக் கனியாக்கும்,
முள்ளை முல்லையாக்கும்.

கண்ணனோ காதரோ தப்பமுடியாது,
ஆணவத்தால் காரியம் எதுவும் செல்லுபடியாகாது.

மீராவும் ஸாராவும் மேரியும் மண்ணைப் பார்த்தே நடந்தாலும் மனதை எங்கோ தொலைக்கக்கூடும்.
கோவிலில் கண்கள் மோதும் காலம் வரும்.
சர்ச்சிலேயே கூட சம்மதம் சொல்ல நேரம் வரும்.

குருநானக் குருவாயூர் வரலாம், சேவை செய்யலாம்.
ஐயங்கார் ஊரெல்லையிலிருக்கும் ஐயனாரிடம் வரம் கேட்கலாம்.

பூணுல் அறுப்பதால் நீ இப் புவியை ஆள்ந்து விடப் போவதில்லை.
ஜாதி மறந்ததால் தலை வெடித்து செத்து விடப் போவதில்லை

தர்காவினுள் துர்கா வரலாம்.
மும்தாஜ் மண்டியிட்டு மேரி மாதாவைத் தொழலாம்.

ராபர்ட் ராமநவமி அனுஷ்டிக்கலாம்.
வெஜ்பிரியாணி சாப்பிட்டபடி வெங்கட் ஃபரிதாவைப் பார்த்துப் புன்னகைக்கலாம்.

மனிதனாய் வாழ்வதே முக்கியம்.
சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தேவைக்கேற்ப மாறுபடும்.

காதலெனும் வேதம், மந்திரம்
*சாதி மதமெனும் வியாதியைப் போக்கிடும்*.

Sunday, December 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 43


328. எத்தனை உதவிகள்... எதைச் சொல்ல, எதை மறக்க, மறைக்க.
அழைக்க நினைக்கும் போதே அருகில் வந்து நிற்பாயே;
என்ன வேணுமென்று கேட்டு செய்வாயே;
இன்றாவது என் நன்றியைத் தெரிவிக்க அனுமதி தருவாயா?
*
உனக்காக எல்லாம் உனக்காக.
மாவு பிசைந்து என் கையால் தட்டி, பொரித்து தேன்குழல், உனக்காக,
தேங்காய் போளி, முதல் முறையாக, என் கைபட, இதுவும் உனக்காக,
பாசமாய் பாசந்தி, என் கையால், கடையில் வாங்கியது, உனக்காக.
இனிப்பு எப்படி இருந்தாலும் பிடிக்கும் தானே, லட்டு செய்ய ஆரம்பித்து பூந்தியாகி .. உனக்காக.
மறந்திருக்கமாட்டாய், என் மடியில் படுத்துக் கொண்டு நிலவை ரசித்து,
கவிதை படித்து கனவு கண்டு ...
இன்று இந்தப் பௌர்ணமியில்,
சீக்கிரம் வா, காத்திருக்கிறேன்,
நிறுத்தி வைத்திருக்கிறேன், பிடித்து வைத்திருக்கிறேன்
உனக்காக *அந்த நிலாவத் தான்*

327. யோசித்துப் பார்க்கிறேன்,
நாம் எதைப்பற்றி இதுவரை விவாதித்ததே இல்லை என்று.
எனக்கென்னவோ நாம் பேசாத விடயங்களே இல்லை என்றுத் தோன்றுகிறது.
எந்த விஷயமெனினும் சரி எது தவறு எது என்று உன்னால் சொல்ல முடிகிறது.
படர்ந்த உன் அறிவைக் கண்டு நான் பலமுறை ப்ரமித்துப் போவதுண்டு.
உன்னோடுப் பழகிப் பழகி உன் அறிவின் முதிர்ச்சி என்னுள்ளும் தட்டுப்படுகிறது.
இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ என்ன செய்வாய் என்றெண்ணுகிறேன்.
இதோ இப்போது கூட நீ அருகில் அமர்ந்து அல்லாடும் என் நெஞ்சை ஆற்றுவதாய் உணர்கிறேன்.
கண் மூடிக் கிடக்க, இங்கே தான் நீ அருகில் எங்கோ இருந்து கொண்டு *ஆனந்த யாழை மீட்டுகிறாய்*.

326. தாள லயத்தோடு இணையும் ஒசைகள் எல்லாம் சங்கீதம்.
ஜதியோடு இணைந்த அசைவுகள் எல்லாம் நர்த்தனம்.
விவரம் தெரியாதவர்களுக்கு மட்டும் இது விநோதம்.
உண்மையில் இந்த ஆட்டம் பாட்டு எல்லாம் ஆண்டவன் அனுக்ரகம்.
நல்ல சரீரம் தரும் சாரீரம், நாட்டியம் தினம் பார்க்க கேட்க சுகம்.
இது முன் ஜென்மப் பலன், வரம், வெகுமானம்.
வாழ்வை தூய்மையாக்கி ஆனந்தமாய் மாற்றும் ரகசியம்.
மறந்து போகும் தேவையற்ற விசனம்.
புரிந்தால் புண்ணியம், புரியாது போனால் பாக்கியம்
கற்றுத் தந்தது *வேதம்,*
*அனுவிலும் ஒரு நாதம்*

325. திருப்பாவை தந்தருளிய ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம்.
ஐய்யப்ப சாமியின் சபரிமலைக்கு மாலை அணிய ஐப்பசி மாதம்.
மது மாமிசம் சேர்க்காது விரதம் இருக்க மார்கழி புரட்டாசி மாதம்.
உழைத்து விளைந்த வயலில் அறுவடை ஆவது தை மாதம்.
குதிரையில் கள்ளழகர் மதுரை வருவது சித்திரை மாதம்.
காரணமறியாது கணவன் மனைவி பிரிந்து இருப்பது ஆடி மாதம்.
நீ எனைக் காண எந்த மாதம் வந்தாலும் அது எனக்கு
*மன்மத மாதம்*.

324. வண்டு தேடி வருவது, மலர்ந்து
மலர் மணம் வீசும் போது தான்.

இடியும் மின்னலும் இணைவது மழை வெளுத்து வாங்கும் போது தான்.

உணவு தேடி உயிர்கள் அலைவது
பசி எடுக்கும் வேளையில் தான்.

பிரார்த்தனை பக்தி என்பதெல்லாம்
வேதனை ஏதும் வந்த பின்பு தான்.

ஆடை அவசியமாவது வெட்கம் நெஞ்சினுள் நுழைந்த பின்பு தான்.

ஏமாற்றம் என்பதெல்லாம் எதிர்பார்ப்பு ஏற்பட்ட பின்பு தான்.

எனை நான் கண்டு தெளிந்தது
*உன்னைக் கண்ட பின்பு தான்.*

323.. இதுவரை ஒரு சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிட்டியது, நன்றி.
இன்று ஒரு இடம் போகிறோம்.
கொஞ்சம் தைரியத்தைக் கூட எடுத்துக் கொள்ளவும்.
பயமில்லாத மாதிரி நடித்தால் போதும், அதுவே தைரியம் ஆகும்.
அமைதியாக வரவும், காது கண் திறந்தபடி, ~வாய் மூடியிருக்கட்டும்~.
இதோ இதுதான் அந்த குகை, இருட்டு தான்; ப..பயப்படக்கூடாது.
நொம்ப பயத்தால் கீழே ஓடுவது புழுவா பூச்சியா பூரானா என்று தெரியாது, பார்..ர்த்து வரவும்.
என்ன? என்னவோ கடிச்சதா ? சேசே ... பாம் ... ல்லாம் இருக்காது; பேடிக்கண்டா.
மலேஷியா ஐ மீன் மலேரியாக் கொசுவாயிருக்கும்.
உஷ்...அபா, மலேரியா என்று தானே சொன்னேன்;ஹெச்ஐவி அளவிற்கு உணர்ச்சி வசப்படுவது எதற்கு.
அதிகமாய் ஆர்ப்பாட்டம் செய்து உள்ளே தூங்கிட்டிருக்கும் சிங் ...
சீ ... சிங்கம்லா இல்லை வா;
இதோ இங்கு தான்; ஷ்ஷ் அமைதி; ஓரமாய் ... மெல்ல ... கேட்கிறதா ? எனக்குக் கேட்குதே; காதைத் தீட்டி வைத்துக் கொள்ள, கவனம்.
கேட்குதா ? கேட்குதா ? அடர்ந்த அடவியில், மாலை வேளையில்,
*என்ன சத்தம் இந்த நேரம் ?*

322. மாலை முடியும் வேளை
இருள் சூழத்தொடங்கும் சமயம்
மனதில் கவிதை கற்பனை சுறக்க
சுற்றி அமைதியான சாலை
ஆள் ஆரவாரமற்றப் பாதை
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி
தோகை விரித்தாடும் அழகு மயில்
ஆளை மயக்கும் பூ வாசம்
எங்கோ தூரத்தில் மெல்லிசை
அருகில் அருவியில் தண்ணீர் ஒலி
வானில் நிலவொளி
பக்கத்தில் ஒரு பைங்கிளி
கொஞ்சல் கிள்ளல் துள்ளலோடு
என் தோளில் சாய்ந்தபடி
அவ்வப்பொழுது முத்தம்
என் ஒரு கை அவள் இடை சுற்றி
இன்னொரு கை குடை பற்றி
இது *மழை பொழிந்திடும் நேரம்*

Monday, December 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 42


321. கொஞ்ச நாள் முன்பு வரை அவன் என் பின்னால் தான் அலைந்தான்.
காலையில் என் கோலம் காண வருவான்.
பார்வையாலேயே பாவை நெஞ்சை பறித்தான்.
அகநானூறு புறநானூறெல்லாம் அறிந்தவன் போல் அளப்பான்.
சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்;
ஏதாவது காரணம் சொல்லி இங்கு
அங்கு தொட்டு நோண்டுவான்.
ஒரே விசயத்தை எல்லோரிடமும் உளறிவிட்டு என்னிடம் மட்டும் இது பரம ரகசியம் என்பான்.
வைரமுத்து கவிதைகளை வரி மாறாது ஒப்பிப்பான்; வாலியின் வார்த்தை ஜாலத்தை ரசித்து சிலாகிப்பான்.
இன்று என் அருகில் இல்லாது எங்கோ இருக்கான், தெரியும்.
தன் எண்ணத்தில் எனை மறக்க முடியாதுத் தவிப்பான், பாவம்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள்
எனைத் தேடி அவன் வரு *வான் வருவான் வருவான்*



320. அடேய் என் இனியக் காதலா,
அறிவேனடா உன்னைப் பற்றி சில பல விஷயங்கள்.
இத்தனை நாள் பழகியிருக்க, பிடிபடாதா உன் சிந்தனைகள்?
நீ எப்போது எப்படி பேசுவாய் என்று சொல்ல முடியும் என்னால்.
நீ யோசிக்கும் விதத்திலிருந்தே
எதைப்பற்றி என்று யூகிக்க முடியும் என்னால்.
உன் கள்ளப் பார்வை சொல்லிடும்
உன் அடுத்த கட்ட நடவடிக்கை எதை நோக்கி இருக்குமென்று.
உன்னைப் பற்றி இத்தனையும் நான் உணர்ந்திருக்கையில்,
இன்று இங்கு நான் அருகிலேயே  இருக்கையில்,
அந்தப் பெண்ணை இப்படி மேய்கிறாயே, அழகா, புரிந்து கொள்.
 *கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ... கண்களுக்குச் சொந்தமில்லை*


319. என்னருமைக் காதலா,
என் பல முதல் களின் மூலவா,
எங்கு சென்றாய் ?
எப்படி இருக்கிறாய் ?
*
உன்னை முழுவதுமாய் நம்பினேன்
நீயே என் உயிராய் உறவாய் எண்ணி வந்தேன்.
நீயும் அப்படிதானேடா பழகினாய்,
திடீரென்று என்னாயிற்று உனக்கு?
விலகியிருப்பது எதற்கு விளக்கு.
*
நிழலாய் நீ தொடர்ந்ததால் தானே நிம்மதியாய் நான் இருந்தேன்.
கனவில் நீ வந்ததால் தானே கண்மூடி நான் உறங்கினேன்.
*
இப்போதெல்லாம் உனைக் காணாது கலங்குகிறேன்.
அலையினிடையில் அகப்பட்டக் கலமாய் அல்லாடுகிறேன்.
தண்ணீரில் தத்தளிக்கும் மானாய்
தரையில் மீனாய்த் துடிக்கிறேன்.
அருகில் நீ இல்லாது, *காதலா ... காதலா காதலால் தவிக்கிறேன்.*


318. ஒரு தொடர்வண்டிக்கு இரண்டு தண்டவாளங்கள், தேவை தானே.
ஏக் மார் தோ துக்கடா, நல்ல நகைச்சுவை.
ஒரே பூவில் காய்க்கும் இரண்டு கனிகள், அதிசயம்.
ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய், சாத்தியமே.
ஒரு பாடலில் இரண்டு ராகம், இசை வல்லுனர்கட்கு எளிமையானது.
ஒரு பதில், இரண்டு அர்த்தம் சர்வ சாதாரணம்.
ஆனால் ...  ஆனால்
*ஓ வெண்ணிலா, இரு வானிலா?*


317. சிறு தோட்டம், பச்சை பச்சையாய் இலை தழைகள்
காற்றைச் சுத்தப்படுத்த துளசிசெடி, நாற்புரமும்.
ப்ராணவாயுவிற்காக வேப்பமரம்
கூடவே தென்னை வாழை;
செடி கொடிகள், தக்காளி அவரை
பாகற்கா பெல்லாரி கருவேப்பிலை
மல்லிப்பூ, கனகாம்பரம்
நாய் ... ஆமாம் என்னை விடுத்து இன்னொன்று; நீ சிரிப்பை அடக்கு.
நாலைந்து கோழி, உண்பதில்லை வளர்க்கக் கூடாதா என்ன? கூடவே பசு மாடு;
ஓரத்தில் கிணறு, புல் மண் தரை.
நடுவில் சின்னதாய் ஒரு ஓட்டு வீடு.
வீட்டில் இரு உடல், ஒரு உயிர், அதில்
*நீ பாதி, நான் பாதி கண்ணே*

316. தொடங்கியதெல்லாம் முடிய வேண்டும் என்பது உலக நியதி.
ஆடியதெல்லாம் அடங்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
தூங்கிக்கொண்டு திரிந்தது எல்லாம் இறங்கியாகணும் இனி.
யாருக்கும் தெரியாது செய்த பாவங்கள்
கண் முன் நின்று கணக்கு தீர்க்கும் நேரம்.
தெரிந்தேப் புரிந்த துரோகங்கள், கூடவேப் பெற்ற சாபங்கள்
பழி வாங்கும் படலம்.
ஓடி ஒளியவும் முடியாது, தப்பித்துச் செல்லவும் வழி கிடையாது.
ஆணவமும் ஆடம்பரமும் செல்லாது
எல்லாம் முடிந்தது, போதும் இனி ~போய்வரு~ போகிறேன், இதோ பாடிவிட்டேன் *ஜன கன மன*


314. அருமையான கிராமம்
எளிமையான மனிதர்கள்
பாசத்திற்கு பஞ்சமில்லை
இருப்பதை ஈந்து இல்லையென்று சொல்லாது வாழ்பவர்கள்
மழையில் ஆடி பாடி நெல்லிக்காய் கிழங்கு சோளம் நுங்கு தின்று,
இளநீர் மோர் குடித்து ஆரோக்யமாய் வாழ்ந்தோம்.
ஆடு மாடு கோழிகளுக்கு பெயரிட்டு தோழியராக்கி விளையாடினோம்.
அண்ணே அக்கா அத்தே என்றே பாசத்தோடு அழைத்துப் பழகி ...
எல்லாம் பழைய கதை ஆனது.
பணம் தேடி பயணப்பட்டு பாரம்பரியம் மறந்து ...
போதும் என்று முடிவெடுத்து விட்டேன்.
பெற்றதை விட இழந்தது அதிகம் என்பதை உணர்ந்து விட்டேன்.
பணம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்பது புரிந்தது.
இழந்த என் பழைய வாழ்க்கையை தேடி எடுக்கப் போகிறேன்.
மாறாத என் மண் மணத்தை நோக்கிப் பயணப்படப்போகிறேன்.
இன்முகத்தோடு எனை வரவேற்கும்,
இருப்பதைக் கொண்டு இனி சந்தோஷமாய் வாழப்போகிறேன்
என் *தென்கிழக்குச் சீமையிலே*