Tuesday, May 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 54

407. காலை மாலை எல்லா நேரமும் உன் ஞாபகம் வருது
நெஞ்சில் கவிதை வரிகள் அருவி போல் சுழலுது
உனை என்று காண முடியுமென்று மனம் தவிக்குது
உன்னிடம் என்னென்ன பேசலாம் என்ற யோசனை உதிக்குது
உன் நடை உடை பாவனை மீண்டும் பார்த்து ரசிக்க ஆவல் எழுது
நல்ல சகுனம் பல நெஞ்சில் மின்னலாய்த் தோன்றுது
'சுபம் சுபம் சுபம்' என்ற சத்தம் எங்கிருந்தோ கேட்குது
உள்ளத்தில் உற்சாகம் பொங்குது.
இதோ இதோ *இளங்காத்து வீசுது*


406. மிதிலையில், அண்ணலும் நோக்க அவளும் நோக்க, காதல் பூத்தது.
தந்தை கதை சொல்ல கண்ணன் மேல் ஆண்டாளுக்கு காதல் பூத்தது.
அன்னப் பறவையின் தூதில் நளன் தமயந்தி இடையே காதல் பூத்தது.
இடும்பனை வீழ்த்த தங்கை இடும்- பிக்கு பீமன் மேல் காதல் பூத்தது.
அகலிகையின் அழகை நாரதர் கூற கௌதமர் மனதுள் காதல் பூத்தது.
உன் அன்புப் பார்வையா, பேசும் பழகும்  விதமா, அக்கறையா,
எதுவோ ஆனால் என்னுள் இதோ ...
காதல் *அழகாய்ப் பூக்குதே*


405. கைகேயி வரம் கேட்க தசரதனுக்கு வந்தது துக்க மயக்கம்.
இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லக்குமனுக்கு மாய மயக்கம்.
சத்யபாமா போரிட நரகாசுரன் முன் கண்ணன் கொண்டது பொய் மயக்கம்.
யக்ஷனின் குரலை நிராகரித்த பாண்டவர்க்கு கர்வ மயக்கம்.
பெரிய யானை அருகில் வந்துப் பிளிர வள்ளிக்கு பய மயக்கம்.
ஜானு ராம் நெஞ்சில் கை வைத்துப் பார்த்த போது எந்த மயக்கமோ,
உன்னைப் பார்க்கையிலெல்லாம் என்னுள் *காதல் மயக்கம்*

404. வேர்வை வழிவதெல்லாம்
   தென்றல் வீசும் வரை தான்
பசி மயக்கம்
   உணவு கிட்டும் வரை தான்
கனவு வருவதெல்லாம்
   உறக்கம் கலையும் வரை தான்
கற்பனை என்பதெல்லாம்
  காட்சி தெரியும் வரை தான்
துன்பம் துயரம் எல்லாம்
   துணைக்கு ஆளில்லா வரை தான்
நிலவின் ஒளி மிளிர்வதெல்லாம்
   *புத்தம் புது காலை* வரை தான்

403. அமிர்தாஞ்சன் கழுத்துப் பக்கம் தடவுகையில் உறுமி மிரட்டுவது அழகு.
நான் பார்ப்பதைப் பார்த்து இங்கு அங்கு இழுத்து விட்டுக் கொள்வது அழகு.
என் தட்டிலிருந்து எடுத்துத் தின்று பின் ஒன்றும் தெரியாதது போல் முழிப்பது அழகு.
யாரும் நமை பார்க்காப்பொழுது உதட்டை ஈரமாக்கிக் கண்ணடிப்பது, அழகு.
நேற்று அந்த காங்ரா சோளி முடிச்சி போட்டு விடும் போது தான் பார்த் ... ஐயோ நீ செம்ம செம்ம அழகு.
மொத்தத்தில் நீ செய்யும் எதுவும், உனைச் சார்ந்ததெல்லாம் *அழகே ... அழகு*


402. அடேய் ... லூசுப்பயலே !
என்ன கேட்கலாம் எதைக் கேட்கக் கூடாதுன்னு வரைமுறை இல்லை,
'அவளோடது வாடாமல்லி கலர்,
உன்னோடது?' இது ஒரு கேள்வியா?
அவள் தாண்டியா ஆடுறா, உனக்கு தெரியாதான்னு கேட்டா ... எருமை.
எனக்கு பரதநாட்டியம் தெரியும், அவளுக்கு ? சொல்லு பக்கி
இந்த வயசுல ரட்டை சடை யாரும் போடமாட்டாங்கடா, ஏன்னு கேட்டா என்ன சொல்றது பொறம்போக்கு.
காஞ்சிபுரத்தில இருந்தா பட்டு தான் கட்டணுமா? மதுரை ல இருக்கச்ச சுங்குடி வாங்கலேன்னா தப்பா ?
கேக்குறா பாரு எசகு பிசகா பேக்கு.
நீ வாயத் தொரந்தாலே எதாச்சும் விவகாரமாத்தான் கேட்பேன்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சி போச்சி.
தயாராத்தான் இருக்கேன், இன்னும் ஒரு கேள்வி.... மவனே மீடூ ல உன் பேர சேர்த்து விடுறேன்,
கேளுடா ... கேளு நீ கேன ...
*கேள்வியின் நாயகனே*


401. அதர்மம் தலைதூக்கும் போதெலாம் தர்மம் அதை அழித்து ஜெயிக்கும்.
பின் நன்றி தெரிவிக்கும்.
*
விபீஷணனுக்கு ரங்க விமானத்தை அளித்து நன்றி் சொன்னான் ராமன்
கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி நன்றியுரைத்தான் கண்ணன்
பரவையாரிடம் சுந்தரருக்காக தூது சென்று நன்றி காட்டினான் சிவன்.
சபரிமலையில் கோவில் கட்டி தன் நன்றி சொன்னான் பந்தள ராஜன்.
கம்பன் 1000 பாடலுக்கொருமுறை சடகோபருக்கு நன்றி பாடினான்.
சேவை எதுவோ, தாஜ்மஹால் கட்டி நன்றி தெரிவித்தான் ஷாஜஹான்.
*
நான் எப்படி யாரைச் சொல்ல; பொதுவாய் எல்லாருக்கும்,
முக்கியமாய் ... அன்பே ரகசியமாய்
*நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி*


400. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
அதுவே இன்று எழுதியிருந்தால், தடை செய்யப்பட்டிருக்கும்.
பஜ கோவிந்தம் - ஆதி சங்கரர்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

Sunday, April 21, 2019

பொன்மாலைப் பொழுதில் 53


399. சீதையைத் தேடும் பணி துவங்கியது மழைக் காலம் முடிந்த பின் தான்.
கண்ணனைச் சுமந்து வசுதேவர் கோகுலம் வர வழியெங்கும் நல்ல மழை.
கோவர்த்தன மலை தூக்கி கோவிந்தன் மக்களைக் காக்கக் காரணம் பெரும் புயல் மழை.
சிவனடியார் புசிக்க முன்தினம் தான் நட்ட நெல்மணிகளை சேகரிக்க இளையான்குடி நாயனார் விரைந்தோடினார் மழையில்.
பஞ்சம் போக்க ஸ்ரீராகவேந்திரர் யாகம் செய்ய தஞ்சையில் பொழிந்தது மழை.
புராணத்தில் சரி, நிகழ்காலத்தில் உனைப் பற்றி எண்ணையில்
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*

398. வசந்த காலம் - குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம்.
ராமன் பிறந்தது வசந்த காலம்.
பஞ்சவடியில்* சீதையுடன் மகிழ்ந்து வாழ்ந்து வந்தது வசந்த காலம்.
அவளைப் பிரிந்து கிஷ்கிந்தையில் துயரத்தில் துடித்தது வசந்த காலம்.
காலங்களில், தான் வசந்த காலம் எனச் சொல்கிறான் கிருஷ்ணன்.
சிவன் மீது மன்மதன் பானம் எய்து பின் சாம்பலானது வசந்த காலம்.
சாபம் பற்றித் தெரிந்தும் பாண்டு மாத்ரி இணைந்தது வசந்த காலம்.
மோகினி அவதாரம் பார்த்து சிவம் மோகம் கொண்டது வசந்த காலம்.
ஆம்...இதோ இந்த வசந்த காலம் ...
என்ன தான் நாம் இருவரும் விலகி விலகி நின்றேப் பழகினாலும்,
ஒருவரை ஒருவர் வெறுக்காது ஒதுங்கியே நின்றிருந்தாலும்
நாட்கள் தானே நகருது,
காலம் வீணே ஓடுது,
*வசந்த காலங்கள் கசந்து போகுது*

397. கோதா கூந்தல் சுகந்த மாலையை ரங்கமன்னார் கேட்டதும் பெரியாழ்- -வாரை சந்தோஷ மின்னல் ஒரு கோடி தாக்கியது.
'இனி எமை தொடாதீர், இது சிவம் மீது ஆணை' என்று மனைவி
சொல்ல திருநீலகண்டர் மனதில் மின்னல் கோடி தாக்கியிருக்கும்.
வழி மறித்த காவல் தெய்வம் லங்கிணி மார்பில் அனுமன் விட்ட குத்து மின்னல் ஒரு கோடி தாக்கியதற்கு சமமானது.
கூடப்படித்த துருபத அரசன் 'யார் நீ?' எனக் கேட்டதும் உதவி கேட்க வந்த ஏழை துரோணருக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியதாய் இருந்தது.
தேவகியின் எட்டாவது பிள்ளை சிறை தப்பிய செய்தி கேட்டதும் கம்சனுக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்திருக்கும்.
பாம்புகள் தீண்டியும் தீ சுட்டெரித்தும் மலையுச்சியிலிருந்து வீசப்பட்டும் ப்ரகலாதன் இறக்கவில்லை என்ற செய்தி ஹிரண்யகசுபுவிற்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்தது.
உன் ஒரு ... ஒரே ஒரு முத்தம் தான் தந்தாய், என்னைத் தாக்கியதோ
*மின்னல் ஒரு கோடி*.


396. பரந்தாமனின் பரிந்துரைபடி பரமசிவனைப் ப்ரார்த்தித்து பசுபதஸ்திரம் வேண்டினான் பார்த்தன்.

'பெருமாளே உம் பவளவாய் பார்த்தபடி இருத்தல் போதும், இந்திரப் பதவி வேண்டா' என்று வேண்டினார் பெரியாழ்வார்.

காலம் தவறாத மழையும், வயல் நன்கு  விளையவும், கொட்டிலில் மாடு கன்று நிறையவும் வேண்டியது ஆண்டாள்.

'பிறவாமை வேண்டும், பிறந்தாலோ இறைவ, உமை மறவாமை வேணும்' என்று வேண்டியது ஔவையார்.

'பால் தேன் வெல்ல பாகு நானுக்குத் தர சங்கத் தமிழ் நீ எனக்குத் தா' என்ற வேண்டலும் ஔவையாரே.

'உன் புகழ் நான் பாடுகிறேன், என் குடி நீ காத்திடு' வேண்டியது பாரதி.

'கல்லானால் தணிகை மலையில், மரமானால் பழமுதிர் சோலையில்' என வேண்டியது சௌந்தர்ராஜன்.

உன்னோடு உன் அருகில் அமர்ந்து 96 பார்க்கணும். இது போதும். எனக்கு *வேறென்ன வேறென்ன வேண்டும்*


395. இலங்கை நோக்கிக் கிளம்பு முன், அனுமனிடம், சீதையும் தானும் மட்டும் அறிந்து சில சேதிகளை ராமன்  எடுத்துரைத்தான்.

கர்ணனைக் கொன்ற காண்டிபன் கதற, அவனை ஏற்கனவே பல பேர் கொன்ற சேதிகளை கண்ணன் விவரித்தான்.

பல மாறு வேடங்களணிந்து வள்ளியை மணந்த பின், அவள் பூர்வ ஜென்ம சேதிகளை முருகன் உரைத்தான்.

தன் வம்சத்தை அழிப்பதேன் என்று கேள்வி  கேட்ட போது சந்தனுவிடம் அஷ்டவசுக்கள் பற்றிய சேதியை கங்கை சொன்னாள்.

நரகம் கிட்டும் என்று தெரிந்தும் கோவில் கோபுரமேறி நாராயண மந்திர சேதிகளை ராமானுஜன் சொன்னான்.

ஆக இவ்வளவு பேருக்கு சொல்ல ஏதோயிருக்க, எனக்குள்ளும் இருக்கே; *மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு*


394. முன்பெலாம் மனமுழுதும் விசனம்
எதைப் பார்த்தாலும் உதாசீனம்
வாய் திறந்தாலே வெளிபடும் சினம்
அழகை ஆராதிக்காத முட்டாள்தனம்
உன் மேல் படிந்தது என் கவனம்
வாழ்வில் கிட்டியது ஒரு பிடிமானம்
பிடித்திருக்கு உன் பிள்ளைத்தனம்
அதிராது ஓரிரு வார்த்தை வசனம்
கொஞ்சும் சிரிப்பே உன் மூலதனம்
இதுவே தினம் தினம் என் தியானம்
சலனமில்லா வதனம் தந்த ஞானம்
கை கோர்த்து கனவுகளூடே சயனம்
பேசிப் பழகி ஒன்றியது இரு மனம்
நீயுன் நெஞ்சில் தந்தாய் ஆசனம்
என் தவத்திற்கிட்டிய வெகுமானம்
உன் யவ்வனம் கவிதைக்கு தீவனம்
இதோ மழை, வானம் தரும் தானம்
கேட்குதா, பறவைகளின் கானம் ?
புறப்படுவோமா, இது நல்ல சகுனம்
நிறைய வரும் ஏளனம் விமர்சனம்
நல்லது என்று பேசும் நம் ஜனம் ?
அவர் தம் வாய் மூடுவது கடினம்
துறந்து வா, நாம் போகுமிடம் ...
*பனி விழும் மலர் வனம்*

Tuesday, April 16, 2019

பொன்மாலைப் பொழுதில் 52


393. வாலி அனுப்பிய ஆட்களோ என்று ரிஷிமுக் மலையிலிருந்த அனுமன் எண்ணினான் ராம லக்குமனை முதல் முறை பார்த்த போது.
'பித்தன் இவன்' என்று பழித்தான் கிழ வேடத்தில் இருந்தச் சிவனை முதல் முறை பார்த்த சுந்தரன்.
தன் பெண்ணை திருமணம் செய்து தர திட்டமிட்டான், அர்ச்சுனனின் வீரத்தை முதல் முறை பார்த்து ரசித்த பாஞ்சாலன்.
முகத்தில் பல தையல்களிருக்க நல்லாவை தீவிரவாதியோ என்று யுகித்தான் முதல் முறை அன்பரசு.
ராம் பதறி மயங்கி விழுந்தது ஜானகி அவன் நெஞ்சில் முதல் முறை கை வைத்துப் பார்த்த போது.
நீ என் கவிதை படித்துப் பாராட்டியது பெரு மகிழ்ச்சி; வாழ்க்கையில் இன்று தான் என்னையே நான்
*முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்*


392. மனம் மகிழ்ந்து கிடக்கிறது.
உனைக் கண்டதிலிருந்து உற்சாகம் பீறிட்டெழுகிறது.
உன்னருகில் அமர்ந்து பேசிச் சிரித்து, உண்டு, பகிர்ந்து ...
ஒருசில கேள்விகள் நறுக்கென்று ... உனைப் பார்த்ததும் மறந்துவிட்டது.
அற்புதமான இச்சூழலுக்காக இத்தனை வருடம் காத்திருந்தது தகும் என்று இன்று தோன்றுகிறது.
நீ, உன் அன்பு இன்னும் கொஞ்சம் கூட மாறாதது பார்க்க, புரிய நெஞ்சம் பூரிக்கிறது.
இரவு முழுதும் இருவரும் உறங்காது சுற்றித் திரிந்தது, நீ தந்த பல புது அனுபவங்களில் முதன்மையானது.
இன்னும் ... கொஞ்சம் நேரத்தில் நான் கிளம்பணும் ... புரிகிறது.
மீண்டும் உனை எங்கு எப்போது பார்ப்பேன் என்று தெரியாது பதற,
விடியாதே இன்று இருந்துவிடக் கூடாதா என்று நெஞ்சு ஏங்க
*இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே*

391. பரத்வாஜ் முனிவர் சொல்படி சீதா, ராம், லக்குமன் சித்ரகூடம் வந்தது யமுனையைக் கடந்து.
கண்ணனை தலையில் சுமந்துபடி மழையில் நந்தகோபர் நடந்தது
யமுனை ஆற்றின் மத்தியில்.
சத்தியின் மறைவுக்குப் பின் சிவம் தன் கோபம் தனிய குளித்தது
யமுனை ஆற்றில்.
இறக்கும் முன் அர்ச்சுனன் பேரன் பரீக்ஷித் தவம் செய்ய அமர்ந்தது
யமுனை ஆற்றங்கரை.
கண்ணனின் காளிங்க நடனம், ராசலீலை அரங்கேறியதெல்லாம்
யமுனை ஆறு, கரை.
பாவியரின் பாவங்களைப் போக்கப் பாடுபட்டு இன்று பாழாகிக் கிடக்கு யமுனை ஆறு.
அந்த  *யமுனை ஆற்றிலே ... ஈரக் காற்றிலே*

390. பேசணும் என்ற அவசியமில்லை.
பார்த்தாகணும் என்றெல்லாம் கட்டாயமில்லை.
விலகி நின்றாலும், புரியும் பதறாது.
தனியே தவித்தாலும், வெறுக்காது.
மின்னல் போலொரு தாக்கம்,
எப்பொழுதாவது ஏற்பட்டிருக்கும்.
அது ஒன்றே போதும். எண்ண எண்ண நெஞ்சு குழையும்.
உள்ளே ஏங்கும், அழும்; கூடவே நம் நலம் நாடும் ஒரு ஜீவன் எங்கோ இருக்கு என்றுணர்ந்து மகிழும்.
உங்களுக்குத் தெரியும் தானே, இல்லை இதுதான் அது என்று  புரியுமுன் காலம் மாறிடிச்சா ?
வெற்றியோ தோல்வியோ, காதல் ஒன்றும் பந்தயம் இல்லையே.
அது ஒரு அனுபவம்; உணரணும்.
வலிக்கும், கொதிக்கும், ஆர்பரித்து அடங்கும்; அதுவரை அமைதியாய் காத்திருப்போம் ... அன்போடு.
ஏனெனில் ... *பேரன்பே காதல்*.

389. காகுந்தன் காடு நோக்கி நகர, அவன் பின்னே அயோத்தி நகரமே போனது, சோகமாய் ஊர்வலமாக.
அங்கதேசத்தையும் அளித்து கர்ணனை கௌரவர் தம் தோளில் தூக்கி வந்தனர், ஊர்வலமாய்.
திருமணம் முடித்து, கம்சன், தேவகி நந்தகோபரை போஜ நாட்டுக்குள் அழைத்து வந்தான், ஊர்வலமாய்.
கண்ணனை தரிசித்த சுதாமாவை பூரணகும்பம் தந்து வரவேற்க ஊரே ஒன்றுகூடி நின்றது ஊர்வலமாய்.
இதோபார்... நானுன் சொல் பேச்சு கேட்டு நடக்க, நீ என் தேவைகளை பூர்த்தி செய்ய, சம்மதமெனில்
*போவோமா ஊர்கோலம்?*


388. அசுரர்கள் அழிக்கப்பட அதற்கு நன்றி கூறும் விதமாக என்றாவது இவ்வாறு தேவர்கள் சொல்லியிருப்பார்களா தெரியாது;
தன் குலம் வளர உதவியதற்கு தாய் சத்யவதி வியாசரிடம் இதைக் கூறியிருப்பாளா தெரியாது;
சுக்ரீவன் இல்லை விபீஷணன் ... ஒருவராவது ... தெரியாது;
அள்ளித் தந்தவனிடம் கண்ணீர் மல்க சுதாமா சொன்னானா தெரியாது;
கர்ணன் பலமுறை சொல்லியும், தன் செயலிலும் காட்டியதுண்டு.
ஆண்டாள் சொன்னாள், அதற்குப் பிறகு நான் தானோ சொல்கிறேன்...
தெரியவில்லை, அதனாலென்ன
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

387. கண் விழித்ததும் கைப்பேசியில் காலை வணக்கம் அனுப்புகிறேன்.
நீ பதிலனுப்பும் வரை படுக்கை விட்டெழாது காத்திருக்கிறேன்.
சாப்டியா குளிச்சியா என்றெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்
நீ திருப்பி எனை கேட்கணுமென்று எதிர்பார்க்கிறேன்.
உன் மொக்கை பேச்சையெல்லாம் வெட்கிச் சிரித்து ரசிக்கிறேன்.
உன் ஆடை நிறத்திற்கொத்த நிறத்தில் நானும் அணிகிறேன்.
தயக்கமே இல்லாது பேசி உளரி உன்னோடே ஊர் சுற்றுகிறேன்.
நீ இல்லாது என்னால் தனியே வாழ முடியும் என்றெண்ணக் கூட முடியாது ... சுருங்கச் சொன்னால் ...
நீரின்றி நாடா?
*நீயின்றி நானா ?*

Sunday, March 31, 2019

பொன்மாலைப் பொழுதில் 51

386. மறுபடி மறுபடி அதைப் பற்றியே சொல்ல, என்செய்ய உங்கள் சினம் கூடலாம்.
வாலிக்கு, அவன் முன் நிற்பவர் வீரத்தில் பாதி, அவன் வீரத்தில் கூடிடுமாம்.
சீதை மறுக்கும் போதெல்லாம் அரக்கனுக்கு அவள் மேல் ஆசை கூடியதாம்.
கயிறு எடுத்து உரலோடு கட்டக் கட்ட கண்ணனின் வயிறு அளவு கூடியது.
துணி எடுத்துச் சுற்ற சுற்ற வானரத்தின் வால் நீள அளவு கூடியது.
காதலில் நாம் கலந்த பிறகு,
உனக்கெப்படியோ தெரியவில்லை
*மாலையென் வேதனை கூட்டுதடி*

385. டேய் நண்பா, கொல்லாதேப்பா
எதற்கெடுத்தாலும் புராணம் பற்றிக் கதைக்கிறாயே,
கோசலராமனுக்கு கோதண்டம், பரசுராமன் கையில் கோடாரி,
பலராமன் கையில் வேறு பொருள்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
தரையில் ஓடும் எலி அண்ணனுக்கு
வானில் பறக்கும் மயில் தம்பிக்கு;
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
இரு வேறு லோக சண்டை, க்ருதா யுகம் (அமிர்தம் கடைதல்).
பூலோகத்தில் இரு வேறு நாட்டு
சண்டை, த்ரேதா யுகம் (ராமாயண்)
ஒரே நாட்டு மக்களிடையே சண்டை, கலியுகம் (பாரதம்).
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
முதலிலெல்லாம் ஆணோடு பேசார், அதன்பின் கதவு மறைவிலிருந்து, அப்பறம் கால் மேல் கால் போட்டு;
இப்போதோ பேசவே பயப்படும் ... ஆடவர்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
நீ மட்டும் ... இன்னும் மாறாது,போன ஜென்மத்து நினைவலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறாயே.
தம்பி, என்னை இந்த க்ருப்பை விட்டு ஓட வைக்காதே.
பழைய பாட்டே போட்டு கொல்லாதே
போதும் *புதிய பாடல் ~பாடு~* போடு.


384. பாற்கடலில் பாம்பு மெத்தையில்
பள்ளி கொள்பவன்;
பாவங்கள் பரவும் பொழுதெல்லாம்
பாருலகைப் பாதுகாக்கப்
பிறவியெடுப்பவன்;
*
அயோத்தியில் அவதரித்து
அரசகுமாரனாய் வளர்ந்து
ஆரண்யம் புகுந்து
அத்திரம் தொடுத்து
அரக்கர்களை அழித்து
அனைத்தும் அழகுற
ஆண்ட ஆண்டவன்.
*
மயிற்பீலி சூடி
மாடு மேய்த்து
மாயம்பல புரிந்து
மங்கையர் மனங்கவர்ந்து
மாமனையே கொன்று
மகாபாரதத்தில் தேரோட்டி
மாகீதை சொன்னவன்.
*
தானே தெய்வம் என்றவனைக் கொல்ல தூணை பிளந்து வந்தவன்
மூன்றடி மண் கேட்டு முக்தி தந்தவன்.
*
ஸ்ரீநிவாசனாய் கோவிந்தராஜனாய் நாராயணனாய் ராகவனாய்
கிருஷ்ணனாய் வெங்கடேசனாய்
கோபாலனாய் ஆராவமுதனாய்
பெயரெதுவான போதும் பொருள்
ஒன்றாய் விளங்கும் அந்தத்
*திருமால் பெருமைக்கு நிகரேது?*

383. ராமனின் பாதத்துகள் கல்லின் மேல் பட அகலிகை உருவானாள்.
காந்தாரியின் கரு பானைகளில் நிரப்பப்பட  கௌரவர் உருவானர்.
காக வடிவிலிருந்து கமண்டலத்தை கவிழ்க்க காவிரி உருவானது.
சிவனின் நெற்றிக் கனலிலிருந்து வடிவேலன் உருவானான்.
விந்தைகளே வரமான போது அதை வெல்ல நரசிம்மம் உருவானது.
அவள் ... பஞ்சு போன்று, இத்தனை மென்மையாய், ஒருவேளை ...
*வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?*


382. ச்சே, இப்படி ஒரு கேள்வி கேட்டு,
இதற்கு நான் என்ன சொல்வேன், எதைச் சொல்லி புரிய வைப்பேன்.
முழிக்கிறேன் தவிக்கிறேன் தத்தளிக்கிறேன் தடுமாறுகிறேன்;
இதுவரை என்னிடம் யார் யாரோ என்னென்னவோ கேட்க,
எதையோ எப்படியோ சொல்லி சமாளித்திருக்கிறேன்;
பணம் பாசம் கல்வி நட்பு போன்று பல தலைப்புகளில் பொய் பேசி,
ராமன் ஆடிய சூதாட்டம், தருமரின் சூழ்ச்சி, கர்ணனின் கஞ்சத்தனம் பற்றியெல்லாம் பலவாறு கதை அளந்து சமாளித்திருக்கிறேன்.
ஆனால் ... ஆனால் ... நீ இப்படி ஒரு கேள்வி கேட்டாயே, இதற்கென்ன சொல்ல, எப்படி விளக்க; புரியாது ...
ம்ம்ம் ... காதல் என்பது ...
*கண்மணியே, காதல் என்பது ...*


381. குரங்கு தானே, என்ன செய்து விட முடியும் என்று குறைத்து எண்ணி
     ராவணன் ஏமாந்தான்.
அழகு மோகம் மயக்க மணந்து பிள்ளையரை கங்கையில் இழந்து
     சந்தனு ஏமாந்தான்.
கர்ணன் இருக்க கவலை எதற்கு என்று எண்ணி பீஷ்மரை பகைத்து
     துரியோதனன் ஏமாந்தான்.
கண்ணன் தனை மறந்திருப்பான் என்று எண்ணி தயங்கியே வந்த
     சுதாமா ஏமாந்தான்.
தவ வேடம் தரித்தவன் தவறேதும் செய்யான் என்று நம்பி அழைத்து
     மெய்ப்பொருளான் ஏமாந்தான்.
வந்தது யாரென்று விளங்கிக் கொள்ளாது தந்ததையும் பார்க்காது
     பாண்டியன் ஏமாந்தான்.
இளம் கன்னியரை மலர் என்று எண்ணிக் கற்பனை செய்துப் பாடி
     *கம்பன் ஏமாந்தான்*.


380. பிடித்திருக்கிறது.
உன்னைப் பார்த்தாலே ஒரு பரவசம் குதூகலம் பற்றிக் கொள்கிறது.
*
தலை குளித்து, கூந்தலிலிருந்து நீர் முதுகுப்பக்கம் சொட்ட,
நெற்றியில் குங்குமம், சவ்வாது வீபுதி; கொல்லையில் பறித்த மல்லி தலையில்;
ஒற்றைக் கண்ணால் எனைப் பார்த்தபடி துளசி சுற்றி, தேவாரம் பிரபந்தம் பாடி, பாதி காஃபி தந்து மீதி நீ குடித்து தாவணியில் (உன்) வாய் துடைத்து சொருகிக் கொல்லும் நேர்த்தி;
கதை கவிதைகளில் நாட்டம், வீடு முழுதும் வண்ணக்கோலம்.
*
ம்ம்ம் ... மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது.
உன்னாலே உன்னோடே ~என்~ நம் வாழ்வு நலம்பெற வேண்டுமென்று ஆண்டவனை வேண்ட, அவ்வமயம்
*டிங்டாங் கோவில் மணி நான் கேட்டேன்*

Monday, March 18, 2019

பொன்மாலைப் பொழுதில் 50

379. பிடித்திருக்கப் பழகினோம்.
விரும்பியே இணைந்திருந்தோம்.
சிரித்துப் பேசுகையில் கிடைக்கும் பரவசம்,
கை பற்றி நடக்கையில் பரவும் மின்சாரம்,
காணாப் பொழுதினில் உள்ளே எழும் ஓலம் விரும்பியே அனுபவித்தோம்.
ஒருநாள் ... தவறு என்னுடையதே.
புரியாது உளறியது உண்மையே.
வேலை அதிகம், இரவு நேரம்,
வெளியே மழை, தனியே பயம்.
வீடு வரை துணையாய் வந்தாய்
விரல் பற்றிக் கவிதை சொன்னாய்.
பாராட்டி ரசிக்க, 'பரிசு?' என்றாய்.
உள்ளே வந்தால் தேநீர் என்றேன்.
தயங்கியே நீ வெளியில் நின்றாய்.
கையில் இருந்த சாவியைக் காட்ட
ஓகோவென்று நீ விசிலடிக்க
சாதாரணமாகவே வெடவெட என்று சுற்றித் திரிபவன்
*யாருமில்லாத் தனியரங்கில் ...*


378. கர்ணன் எப்பவுமே துரோகத்துக்கு துணை போகணுமா என்ன?
சண்டைன்னா முறைச்சுக்கணும் அடிச்சுக்கணும்னு அவசியமில்லை.
ஆள் சண்டியரானாலும் சத்தியம் தர்மம் தவறாம இருப்பது சாத்தியம்.
சகுனியோ கூனியோ சமரசமாய் வாழ வழி சொல்லலாம்.
அதனால, சொல்வது என்னன்னா ...
ரொம்ப வருஷமாச்சி, பார்க்கலை பேச்சு வார்த்தை இல்லை.
அதற்காக, மறந்துடணும்னு அவசியமில்லை.
அட ___ நாதரே, இந்த உலகத்தின் தோழரே, மறவாதீரும், இந்தப் பொட்டை சிறுக்கி *நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*


377. கையில் வில் இல்லை, எனவே நீ இராமனோ அர்ச்சுனனோ  இல்லை.
ஹிஹி, என்னதான் ஜாடை நிறைய ஒத்துப்போனாலும், வால் இல்லையே, எனவே நீ ___ இல்லை.
வள்ளி தெய்வானை பற்றித் தெரியவில்லை கையில் வேல் இல்லை, எனவே முருகன் இல்லை.
வர்ணமிரைத்து வரைந்திடினும் அவ்வளவு தத்ருபமில்லை, எனவே நீ ராஜா ரவிவர்மா இல்லை.
வெட்டி அதிகாரம் மட்டும் தூள் பறக்கிறது. கொஞ்சம் கருப்பு தான் என்றாலும் கையில் ...
ஒருவேளை... *அன்பே நீ என்ன அந்தக் கண்ணனோ மன்னனோ ?*

376. வெளிச்சம் நுழைய முயன்றுத் தோற்கும் அடர்ந்த ஒரு வனம்.
மனிதக் கால்கள் இதுவரை படாது, இப்புவியில் புனிதமான ஒரு இடம்.
இது பறவை விலங்குகளுக்கு இறைவன் தந்த வரம்.
உள்ளே நாம் நுழைந்துவிட்டோம் அன்றோ, இனி அவைகள் பாவம்.
கிடக்கட்டும், கண் முன் தெரியுதா, அற்புதமான ஒரு அருவி.
இங்குமங்கும் சிறகடித்துப் பறக்கும் பலவிதமானப் பறவைகளின் ஒலி.
சுழன்றடிக்கும் சுத்தமான காற்று,
மனதைக் கிறங்கடிக்கும் பூ வாசம்
இதமான தட்பவெட்ப நிலை.
இயற்கையோடு இணைந்து வாழ, ஏகப்பட்ட சுகமுண்டு;
நகர வாழ்வு நரக வாழ்வானதற்கு நம் பங்கு நிறைய உண்டு.
பேராசைக்கு விலையுண்டு என்று சொல்லுதோ, அருகில் மரத்தில்
*நீலக்குயில்கள் (இ)ரண்டு*


375. என்ன இது, எதற்காக, ஏன் இப்படி ?
பிடித்திருக்கு என்று மட்டும் தானே சொன்னான், அதற்கு?
பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் தெரியணுமா என்ன?
இத்தனை குழப்பம் இதுவரை என்னுள்ளே இருந்ததில்லையே;
ஐயகோ, இன்றென்ன வியாழனா திங்களா, I mean வெள்ளியா?
வேதியல் தேர்வு இன்றா நாளையா?
H2O வின் ஃபார்முலா என்ன?
காப்பர் சல்ஃபேட் கருப்பா சிவப்பா?
பல் தேய்த்தேனா? டம்ளர் இருக்கே, அப்போ காஃபி ஆச்சா, பசிக்குதே;
இந்த ஆடை இன்று அணிந்ததா ? நேற்று என்ன அணிந்தேன் ?
கண்ணாடி பார்க்க பயமாயிருக்கு; பின்னாடி அவனுருவம் ஒருவேளை தெரிந்திடுமோன்னு பதட்டமிருக்கு;
இது ஆசையா ஏக்கமா தேடலா? இல்லை எதிர்பார்ப்போ?
அந்தந்த சமயத்தில் அந்தந்த எண்ணம் தானே வந்து விடுகிறதே.
ஓ அப்போ இது..இதுதான்..அதுவா?
*என்ன இது ... என்ன இது என்னைக் கொல்வது?*

374. முதல் நாள் கல்லூரியில் எனைப் பார்த்ததும் மறைந்து கொண்டாய்.
மெல்ல மெல்ல பயந்து பயந்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசினாய்.
அன்பு அறிவு அடக்கம் நளினம் எல்லாம் இணைந்த அதிசயமாம் நீ.
உன் அடாவடி ரகளை அத்துமீறல் எல்லாம் என்னிடம் மட்டும் தானோ?
நான் வாங்கி வைத்த உணவை கேட்காது உண்பதும்,
டீ சுவைத்து விட்டு முகம் சுளிப்பதும் ...
சத்தமின்றி என் அறையினுள் நுழைந்து அரட்டை அடித்து உறக்கம் கலைத்து ...
பேனா பென்சிலில் ஆரம்பித்து ஷூ
ஜீன்ஸ் கேட்பதும் அடுத்து என்ன
கேட்பாயோ என நான் விழிப்பதும்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது,
மெல்ல மெல்ல நீ என்னை, என் உடைமைகள் எல்லாம்
*ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்*

373. குந்தி மந்திரம் சொல்லி அழைக்க உடன் வந்தவன் பகலவன்.
அபயமென்று பாஞ்சாலி கை கூப்பி  அழைக்க, வந்தானே பரந்தாமன்.
பசியென்று பாலகன் அழ பால் தர வந்தாளே பார்வதி.
ஆறுமுகன் அண்ணா என்றழைக்க அக்கணமே வந்தான் ஆனைமுகன்.
நீ மட்டும் ... இத்தனை தாமதம் ...
இன்றுதானே வருவதாய்ச் செய்தி அனுப்பினாய், காத்திருக்கேன் வா.
அப்பம் அக்காரவடிசல் பருப்பு உசிலி தயார், ஆறிப்போகுமுன் வா.
உன்னோடு உறவாட உறங்காதுத் தவமிருக்கிறேன், வா.
இதோ ... இதோ ... காலடிச் சத்தம் ... நீ தான், இது நீ தான்
*வா வா வா ... கண்ணா வா*

Tuesday, February 26, 2019

பொன்மாலைப் பொழுதில் 49

372. வேர் இல்லாது மரம் நில்லாது
விதை இல்லாது செடி முளைக்காது
மலரில் மணம் மறைந்திருக்கும்
கடல் எனில் அலை நுரை உண்டு
சுருக்கமாக எல்லாவற்றுக்கும் அடிப்படையில் ஏதோ ஒன்றுண்டு.
கவிதைகளும் கற்பனைகளும் கூட இதற்கு விதிவிலக்கன்று.
அட தினம் வரும் ஒரு கவிதை, இதன் பின்னும் ஒரு காதல் கதை.
காதல் என்று வந்த பின்பு காதலி என்று ஒருத்தி இல்லாதெப்படி ?
யாரென்று சொன்னதில்லை தான்,
ஆனால் இல்லையென்று இதுவரை இயம்பியதில்லை தானே.
ஆம், *எனக்கொரு காதலி இருக்கின்றாள்*

371. இப்போ எதுக்கிவ்ளோ குதிக்குறே?
காஃபி சூட இல்லே அவ்ளோதானே, சூடாக்கிக் குடி; சிம்புள்.
இன்னும் எவ்ளோ நாள் இந்தக் கெட்ட பழக்கம்,
பொண்டாட்டி காஃபி தரணும் சோறு பொங்கணும், ஆணாதிக்க புல்ஷிட்.
உன்னல்லா ... எவ்ளோ பாரதி வந்தாலும் திருத்த முடியாது,
பெண்ணடிமைக்கு விடுதலை கிடைக்காது.
தக்காளி மிதந்தா ரசம் இல்லியா சாம்பார், போவியா,
உப்பு இல்லே காரம் பத்தலே, நைநைநை ன்னு;
ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வரணுமா, சரி வழில எவ்ளோ கடை இருக்கு.
நீயும் கொட்டிக்கிட்டு எனக்கும் ஏதாவது வாங்கிட்டு ...
பொம்பளைன்னு ஒருத்தி வீட்ல இருந்தா நாலு எடத்துல தலை முடி விழத்தான் செய்யும்; வேலைக்காரி வர்லே, என்ன செய்ய;
இவ்ளோ சொல்றியே, ஒருநாள், ஜஸ்ட் ஒருநாள்,
சீரியல் நடுப்பற டிஸ்டர்ப் செய்யாத
*கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா?*

370. கிறுக்குப்பய, ரவுடியாத் தெரியறா, பாசமாப் பழகுறா ன்னு பார்த்தா ...
தனி ஆளா நின்னு திருவிழா தேரை ஓட வச்சதுக்கு பாராட்னா ...
ரஜினி போல தலை முடியை ஸ்டைல் செய்வதும் கண்ணாடியை சுத்தி சுத்தி மாட்டுவதும்;
புகை விடாதவனா இருக்கணும்.
2 முறுக்கு அதிரசம் தந்ததுக்கே 'தேவாமிர்தம்'ங்கானே, லூசுப்பய.
கொல்லையில குளிக்கையில அவ நெனப்பா ... ஐய நாந்தே லூசோ ?
இருந்தாலும் ... இப்டியா சடங்கான பொண்ணு கிட்ட வந்து 'அம்சமா இருக்கே' ன்னு ....
*அய்யய்யோ என் உசுருக்குள்ள தீயை வச்சா அய்யய்யோ*


369. ஆரம்பத்தில் அசமந்தன், கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லித் தந்தாய்.
விழி பேசும் வார்த்தைகளையும் சிரிப்பின் அர்த்தத்தையும் புரிய வைத்தாய்.
அழகாய் உடுத்தி அளவாய் உண்டு உன்னிடம் கற்றுக் கொண்டேன்.
வீணை மீட்டி விளையாடுகிறாய், உன் விரல் தொட்டு வணங்க வெட்கிச் சிவக்கிறாய்.
கவிதையென்று என்ன எழுதித் தந்தாலும் படித்துப் பாராட்டுகிறாய்.
கை கோர்த்து மழையில் நனைந்து, மடியில் படுத்து நிலவை ரசித்து;
'எனக்கா, எனக்கே எனக்கா?' என்று எண்ணி மகிழ்ந்துப் போகிறேன், கனவுலகில் திரிகிறேன்.
மேகத்தினிடையில் மிதக்கிறேன், சிறகின்றி ... மெல்ல மெல்ல
காதல் என்னை உந்தித் தள்ள
*நான் போகிறேன் மேலே மேலே ...*

368. நினைத்துப் பார்க்கிறேன்.
ஞாபகம் வர ரசிக்கிறேன்.
நீல உருளை ஏதும் சுழலாது புகை சூழாது பின்நோக்கி நகர்கிறேன்.
அன்றொருநாள் ...
கன்னி, எனை நோக்கி வந்தனை.
காற்றில் பறக்கும் கருங்கூந்தல்,
மை தடவிய கரு விழி
விரலி பூசிய வதனம்
விரல்களில் மருதாணிச் சிவப்பு
மஞ்சள் பாவாடை, பச்சை தாவணி,
காதில் நீல ஜிமிக்கி, முத்து மாலை
மூக்குத்தி மின்னும் மரகதப் பச்சை
சிகப்பு சாயம் பூசிய உதடு, கையில் தங்க கிண்ணம் மஞ்சள் வண்ணம்.
உள்ளே வெள்ளை கொலுகட்டை,
கோவைப்பழ உதடு பாதி சுவைத்து ஊட்டிவிடுகிறாய் எனக்கு.
நீளும் என் கை விரல், சட்டென்று இழுத்து மறையும் சந்தன இடை.
இன்னும் ... இன்னும் உனை எண்ண எண்ண, ஆசை பொங்க
*நெஞ்சமெலாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே*


367. உசந்தது எது என்பதில் வேறுபடும் ஒவ்வொருவரின் கருத்தும்.
தாய்க்கு பிள்ளைகளின் நலத்தை விட
உசந்தது எதுவுமில்லை.
பசித்தவனுக்கு ஒரு கைப்பிடி உணவு,
வேறேதும் உசந்ததில்லை.
உழவனுக்கு வயல் விளைச்சலை விட
உயர்வானது வேறு இல்லை.
பேராசைக்காரனுக்கு பணம் பொன் பொருள் தவிர
பிற ஏதும் பிரதானமில்லை.
காதலனுக்கு தன் காதலியின் ஒரு பார்வை, சின்னச் சிரிப்பு, முத்தம்
வேறேதும் உசந்ததில்லை.
எனக்கு, ஆருயிரே *உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லே*


366. 'கண்டேன் சீதையை !' என்று ஓடி வந்துச் சொன்னது அனுமன்.
'எடுக்கவோ, கோர்க்கவோ ?' என்று சொன்னது துரியோதனன்.
'இன்னொரு கண் இருக்க கவலை எதற்கு?' சொன்னது கண்ணப்பன்.
மண் திங்கவில்லை என்று பொய் சொன்னது மாயக் கண்ணன்.
'பித்தா' என்றே தொடங்கிப் பாட சுந்தரர்க்குச் சொன்னது சிவன்.
தாகம் அடங்க மோகம் தொடங்க ... வள்ளியிடம் சொன்னது வடிவேலன்
நாலைந்து நாட்கள் கவிதை வரலை அதற்காக இப்படியா சொல்வது ?
சந்தேகமாய் இருக்கு எனக்கு,
*சொன்னது நீ தானா?*

Sunday, February 17, 2019

பொன்மாலைப் பொழுதில் 48

365. நீ என்ன செய்தாலும்  யாராவது ஏதாவது சொல்லத்தான் செய்வார்.
உன்னைப் பற்றி வாய்க்கு வந்தபடி உளராவிட்டால் ஊரார் உறங்கார்.
நின்றுகொண்டிருந்தால் 'கவுக்க தயாரா நிக்கா' என்பர்.
சும்மா அமர்ந்திருந்தாலோ 'சோம்பேறி' என்பர்.
ஓடி ஓடி உழைத்தால் 'பேராசை பிடித்தவன்' என்பர்.
தர்மம் செய்தாலோ 'காசு அருமை தெரியாத பைத்தியம்' என்பர்.
புகழுரைக்கு மயக்காதே, யாரும்
பழித்தால் கலங்காதே, உனக்கு உன்னைத் தெரியும், குழம்பாதே.
அறிவை வளர்த்துக் கொள்.
நல்லதோ கெட்டதோ நீ முடிவெடு;
இருக்கையில் ஆடாதே, இல்லாப்பொழுது அழாதே.
தீர்மானி திட்டமிடு செயல்படு
அடுத்தவர் சொல் மற, துற.
தருமி என்பார், கருமி என்பார், *ராஜா என்பார், மந்திரி என்பார்*


364. சிறையில் அவதரித்தவன்
எங்கள் சிரமங்கள் விலகத் துணையிருப்பவன்.
இருள் நிறத்தவன்,
இப்புவிக்கு அருள் ஒளி தரும் மனம் படைத்தவன்.
கோபியர் ஆடை கவர்ந்தது அன்று,
பாவியர் பாதம் பணிய பாவம் தீர்ப்பது இன்று.
வெண்ணையை மட்டுமா திருடினாய்
எங்கள் நெஞ்சையும் அல்லவா களவாடினாய்.
காலிங்க நடனம் ஆடினாய்,
ராதையோடு காதல் கூத்து நடத்தினாய்.
உன் குழலோசை மயக்க பால் சுரந்தது, மரம் வளர்ந்தது,
நதி நிறைந்து ஓட, கிளி பேச ஆட
*பூ மலர்ந்திட, நடமிடும் பொன்மயில்*


363. பட்டுப்புடவை,
தலையில் கொண்டை, சுற்றி மல்லி
குளத்தில் இறங்குகிறாய்
பின்னால் தயங்கி நிற்கிறேன்
என் கை பிடித்திழுத்து
நெஞ்சில் நெஞ்சால் முட்டி ...
அழகுடி நீ.
*
நாற்காலியில் அமர்ந்திருக்கிறாய்.
காலை மேலே வைத்து, இரு கையால் இருக்கிக்கொண்டு;
கருநீலப் புடவை
அதே நிற ரவிக்கை
சந்தன நிறமா, எலுமிச்சையா,
சின்னக் கீற்று போல் தெரியும் உன் சிற்றிடை; ஐயகோ ...  அழகுடி நீ.
*
துணி துவைக்கிறாய் நீ, அதை உலர வைத்து உதவுகிறேன் நான்.
தேநீர் நீ தயாரிக்க, சூடேற்ற, குடிக்க  அருகிலேயே உதவிக்கு நான்.
பாடல் நீ பாட, அடுத்த வார்த்தை ஞாபகப்படுத்த உதவி நான்.
ஆடை அணிகிறாய், அரை கண்ணால் ரசித்தபடி நான்;
வாவ் ...அழகுடி நீ.
*
~புகைவண்டிப் பயணம், இரவு நேரம்~
~மடியில் நீ, பறக்கும் தாவணி~
....
....
*அழகே ... அழகு ... தேவதை*


362. பார்த்தேன் ப்ரமித்தேன்
மெய் சிலிர்த்தேன், மயங்கினேன்
~பல~ சிலமுறை யோசித்தேன்
பிடித்திருக்க, பேசிப் பழகினேன்
சிரித்தேன், சிரிக்க ரசித்தேன்.
தனிமையில் பரிதவித்தேன்.
பார்க்காப் பொழுது பிதற்றினேன்.
இணைந்திருக்க எனை மறந்தேன்.
பிரியாதிருக்க வழி யோசித்தேன்.
வரம் யாசித்தேன்.
கவிதை எழுதினேன்
வாசித்துக் காட்டினேன்.
பாராட்ட மகிழ்ந்தேன்
நிறைய சிநேகித்தேன்,
நிழலாய்த் தொடர்ந்தேன்
அவள் இல்லாதிருக்க வெறுத்தேன்
துதித்தேன், துவள்ந்தேன்
அன்பை அனுபவித்தேன்,
பாச மழையில் நனைந்தேன்
பார்வை அமுதம் பருகினேன்
என்னை மறந்தேன்
கை தொட்டேன், முத்தமிட்டேன்
அணைத்துக் கொண்டேன்
புரிந்தது, அவள் *தீண்டத் தீண்டத் தித்திக்கும் தேன்*


361. காலையிலேயே இன்றொரு நல்ல நாள் என்பதை உணர்ந்தேன்.
என் கோரிக்கை நிறைவேறப் போவதைப் புரிந்து கொண்டேன்.
சாளரத்தில் இரு சிட்டுக் குருவிகள் கொஞ்சிக் குலாவக் கண்டேன்.
தோட்டத்தில் புதிதாய்ப் பூத்த பூக்களின் வாசத்தை நுகர்ந்தேன்.
சாலையில் நடக்கையில் எங்கோ நல்ல இசை ஒலிக்கக் கேட்டேன்.
மழலையரோடு மழலையாகி நீ சிரித்து மகிழ்வதை ரசித்தேன்
'எனக்கென பிறந்தவள்' பாடலைப் பாடலாமா என்று எண்ணினேன்
மிதந்து கொண்டே *நிலத்தில் நடக்கும் நிலவைக் கண்டேன்*.


360. எதற்கு நாம் அறிமுகமானோம்.
ஏன் நீ என்னோடு சிரித்துப் பேசிப் பழகினாய்.
சரி பிடித்திருக்கட்டும், அதை எதற்கு என்னிடம் உரைத்தாய்
ஆரம்பத்தில் முறைத்து விலகினாய் இப்போதெதற்குத் திரும்பி வந்தாய்.
என்ன செய்து என் கவனத்தை உன் பக்கம் திருப்பினாய்.
நான்கு நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.
முன்பெல்லாம் ஊண் உறக்கம் என்று நேரம் போக்குவேன்.
இப்போதோ ஊண் இறங்கவில்லை, உறக்கம் நெருங்கவில்லை.
ஒருநாள் ஓட்டுவதே இத்தனை கடினமாய் இருக்குதே
இன்னும் மூன்று நாள் ... அய்யகோ.
நடுநிசி, நான் மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருக்க,
வீட்டிலுல்லோர் உறங்கியாச்சி,
இருமி இருமி உருமும் பக்கத்து வீட்டுத் தாத்தா படுத்திருச்சி
*ஊரு சனம் ... தூங்கிருச்சி*


359. அழகில் தெய்வீகம்
பேச்சில் சாத்வீகம்
பார்வையில் கம்பீரம்
உள்ளத்திலெப்போதும் உற்சாகம்
உதட்டில் திருவாசகம்
மனதில் திருமந்திரம்
நடையே நாட்டியம்
பாட, தேவ கானம்
பெண்குலத்திற்கு நீ வெகுமானம்
உனக்காருமில்லை சரி சமானம்
நீ பார்த்தால் பொழியும் கார் மேகம்
பழகப் பழகப் புரியும் பிள்ளை மனம்
பாவையுனைச் சுற்றி பூ வாசம்
பளபளவென்று மின்னும், உன்
*ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்*