Saturday, March 14, 2020

கம்பராமாயணம் 64




சம்பாதிப் படலம்

4649.
'விரிந்து, நீர், எண்
   திசை மேவி,நாடினீர்,
பொருந்துதிர் மயேந்திரத்து'
   என்று போக்கிய
அருந் துணைக் கவிகள்
   ஆம் அளவு இல்சேனையும்
பெருந் திரைக் கடல்
   எனப் பெரிது கூடிற்றே.

'நீங்களனைவரும் பிரிந்து
எட்டு திக்குகளுக்கும் செல்லுங்கள்.
செல்லுமிடங்களிலெல்லாம் சீதையைத் தேடுங்கள்.
பின்னர் மகேந்திர மலைக்கு வந்து சேருங்கள்'
என்று முன்னம் அங்கதன் உரைத்தது போல,
இன்னொரு கடல் போன்ற சேனைகள் யாவும்
பெருந்திரளாக வந்து சேர்ந்தனர்
(அனுமான் இருந்த இடத்திற்கு )



4669.
என்றலும் கேட்டனன் எருவை
   வேந்தன், தன்
பின் துணை ஆகிய
   பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினான் என்ற சொல்;
   புலம்பும் நெஞ்சினன்;
குன்று என நடந்து
   அவர்க் குறுகல் மேயினான.

(சீதையைத் தேடுவோம், கிட்டாதுபோயின்
சடாயு போல் உயிர் துறப்போம்)
என்று சொன்னான் அனுமான்.
அச் சொற்களைக் கேட்டுத் துடித்தான்
கழுகின் அரசன், சம்பாதி என்பான்.
எனக்குப் பின் பிறந்தவன்,
சத்தியத்தைத் தவறாது கடைபிடிப்பவன்
இறந்தான் என்ற செய்தி கேட்டுப் புலம்பினான்.
மலை போல் நடந்து வந்து
அந்த வானர வீரர்களை அணுகினான்.



4707.
'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி 
   கடல் இலங்கை; அவ் ஊர் 
பாச வெங்கரத்துக் கூற்றும் 
   கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம் 
   நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள் 
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் 
   பரிசு இயைவது?' என்றான்.

(சடாயு பற்றி அனுமான் உரைத்தான்.
சம்பாதி தன் வரலாறை உரைத்தான்.
சீதையைத் தேடி வந்தது பற்றி 
அனுமான் உரைத்தான்.
இராவணன் அவளைக் கவர்ந்து சென்றதைத் 
தான் கண்டதாய் சம்பாதி உரைத்தான்)

இங்கிருந்து நூறு யோசனை^ தூரம் இருக்கும்.
இலங்கை, ஒலி எழும் கடலால் சூழப்பட்டிருக்கும்.
கொடிய பாசக்கயிறு கொண்டுள்ள யமனுக்கும் 
அந்தப் பக்கம் நோக்க அச்சம்.
அக் கொடிய அரக்கனின் கோபம் 
நெருப்பையும் எரித்திடும்.
நல்ல உள்ளம் கொண்டவர்களே, 
நீங்கள் அங்கே செல்வது எங்ஙனம் ?' 
என்று கேட்டான் சம்பாதி.

^ஒரு யோசனை - 13 KMs


மயேந்திரப் படலம் 

4729.
'ஏகுமின், ஏகி, எம் உயிர் 
   நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் 
   இன்னல் குறைவு இல்லாச் 
சாகரம் முற்றும் தாவிடும் நீர் 
   இக் கடல் தாவும் 
வேகம் அமைந்தீர்!' என்று 
   விரிஞ்சன் மகன் விட்டான்.

'விரைந்து செல்க; அவ்வாறு சென்று, 
எங்களுக்கு உயிர் தந்த பெருமை கொள்க;
நல்ல செய்தியைக் கொண்டு வருக;
உம் தலைவன் இராமனின் 
துன்பம் முழுவதையும் நீக்க வழி செய்க;
இந்தக் கடலைக் கடந்து செல்லும்  
வலிமை பெற்றவரே, கிளம்புக' 
என்று பிரம்மகுமாரன் சாம்பவான் 
அனுமானைத் தூண்டிவிட்டான்.

4739.
மின் நெடுங் கொண்டல் தாளின் 
   வீக்கிய கழலின் ஆர்ப்ப 
தன் நெடுந் தோற்றம் வானோர் 
   கட்புலத்து எல்லை தாவ 
வல் நெடுஞ் சிகர கோடி  
   மயேந்திரம் அண்டம் தாங்கும் 
பொன் நெடுந் தூணின் பாத 
   சிலை என, பொலிந்து நின்றான்.


(இலங்கை செல்ல ஒத்துக்கொண்ட அனுமான்)
மின்னலொடு கூடிய மேகங்கள் 
காலில் கட்டப்பட்ட கழல் போல் ஒலிக்க,
பேருருவம் எடுத்தத் தோற்றம், தேவர்களின் 
பார்வை படும் தூரம் தாண்டிச் செல்ல,
சிகரம் பல உடைய மகேந்திர மலை 
அண்டத்தையே தாங்கி நிற்கும் தூண்களின் 
அடியிலிட்ட கல்லைப் போலத் தெரிய  
மலை உச்சியில் அனுமான் நின்றான்.


கிட்கிந்தா காண்டம் முற்றிற்று

(  தொடரும் )

Friday, March 13, 2020

கம்பராமாயணம் 63



தானை காண் படலம்

4426.
கை அஞ்சு ஆயுதம் உடைய
   அக் கடவுளைக் கண்டும்
மெய் அஞ்சாதவன், மாதிரம்
   சிறிது என விரிந்த
வையம் சாய்வரத் திரிதரு
   வானர சேனை
ஐ-அஞ்சு ஆயிரகோடி கொண்டு
   அனுமன் வந்து அடைந்தான்.

சுட்டெரிக்கும் வெயிலை ஆயுதமாகக் கொண்டு
உலவும் சூரியனைக் கண்டு அஞ்சாதவன்,
திசைகள் அளவில் சிறியதாகுமாறு
நிலம் கணம் தாங்காது சாய்ந்து விடுமாறு
இருபத்தைந்தாயிரம் கோடி வானர சேனைகளை
வழிநடத்தியபடி அனுமன் வந்து சேர்ந்தான்.



4431. 
ஒடிக்குமேல், வட மேருவை 
   வேரோடும் ஓடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக 
   முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல், பெருங் காற்றையும் 
   கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் 
   குடங்கையின் குடிக்கும்;

வானரப் படை -
ஒடிக்கச் சொன்னால்,
வடக்கிலுள்ள மேரு மலையை 
வேரோடு ஒடிக்கும் வல்லமை பொருந்தியது.
இடிக்கச் சொன்னால்,
பரந்து விரிந்த ஆகாயத்தையும் 
இடித்துத் தகர்க்கும் வல்லமை பொருந்தியது.
பிடிக்கச் சொன்னால்,
காற்றையும், எமனையும் கூட   
பிடித்துவிடும் வல்லமை பொருந்தியது.
குடிக்கச் சொன்னால்,
ஏழு கடலையும் உள்ளங்கையில் அள்ளிக் 
குடித்துவிடும் வல்லமை பொருந்தியது.



நாட விட்ட படலம்


4453.
'தென் திசைக்கண் 
   இராவணன் சேண் நகர் 
என்று இசைக்கின்றது, என் 
   அறிவு, இன்னணம் 
வன் திசைக்கு இனி 
   மாருதி நீ அலால் 
வென்று இசைக்கு உரியார் 
   பிறர்  வேண்டுமோ ?'

'இராவணனின் நீண்ட பெரிய நகரம் 
தெற்கு திசையில் உள்ளதாக 
என் அறிவு உணர்த்துகின்றது.
இப்பொழுது அந்தப் பக்கம்,
மாருதி உன்னையல்லால் வேறு யார் 
செல்ல முடியும் என்று தோன்றுகிறது.
அங்ஙனம் சென்று, வென்று புகழ் பெற 
நீ ஒருவனே போதும், 
வேறாரும் வேண்டுமா என்ன ?' 
என்று சொன்னான் சுக்ரீவன்.



4519.
இனைய ஆறு உரைசெயா 
   'இனிதின் ஏகுதி' எனா,
வனையும் மா மணி நல் 
   மோதிரம் அளித்து, 'அறிஞ! நின் 
வினை எலாம் முடிக!' எனா 
   விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான் 
   அருளொடும், போயினான்.

இவ்விதம் இராமன் அனுமானிடம், சீதையின் 
அங்கஅடையாளங்களை உரைத்தான்,
சீதைக்கும் தனக்குமிடைய நடந்த 
சில உரையாடல்களை எடுத்துரைத்தான்,
'இனிதாகச் செல்வாய்' என்று வாழ்த்தினான்.
தன் இரத்தின மோதிரத்தைத் தந்தான்.
'அறிஞனே, நீ மேற்கொண்ட செயல் 
இனிதே முடியட்டும்' என்று விடைகொடுத்தான்.
நீண்ட வீரக் கழல் அணிந்த அனுமான் 
அக்கணமே அங்கிருந்துக் கிளம்பினான்.



( தொடரும் )

Thursday, March 12, 2020

கம்பராமாயணம் 62




கிட்கிந்தைப் படலம்

4269.
அன்ன காலம்
   அகலும் அளவினில்
முன்னை வீரன்
   இளவலை, 'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின்
   ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்;
   என் செய்தவாறுஅரோ ?

கூதிர்^காலம் முடியும் தருவாயில்,
மூத்தவன் வீரன் இராமன் தம்பியை நோக்கி
'வலிமையானவனே,
தவணைக் காலம் நான்கு மாதம் கழிந்தது,
சுக்ரீவனால் தாமதம் ஆகிறது,
அவன் சொன்னபடி இங்கு வரவில்லை,
என்ன செய்கிறானோ தெரியவில்லை'
என்று வருத்தத்தோடு பேசினான்.

^ - ஐப்பசி, கார்த்திகை




4272.
'வெம்பு கண்டகர் விண்
   புக வேர் அறுத்து
இம்பர் நல் ஆறாம்
   செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங்
   கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு' என்று
   சொல்லு, நம் ஆணையே.

'கொடியவர்கள் அழித்து
நல் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு,
கையிலேந்திய வில் இருக்கு என்று சொல்;
எமன் அருகிலேயே இருக்கிறான் என்று சொல்;
வாலியைக் கொன்ற,
வானரங்களைக் கொல்லக்கூடிய
அம்பும் இன்னும் இருக்கு என்று சொல்;
இது என் ஆணை என்றும் சொல்'
என்று சொல்லி இலக்குவனை அனுப்பினான்.



(கோபத்தோடு வந்தான் இலக்குவன்
பயந்து போயினர் வானரங்கள்
குடி மயக்கத்தில் கிடந்தான் சுக்ரீவன்
அங்கதன் அனுமான் தாரையிடம் ஓடினர்
நல்வார்த்தை பல பேசி, தாரை 
சாந்தப்படுத்தினாள் இலக்குவனை,
'நீயும் மறந்தனையோ ?' என்று
இலக்குவன் அனுமானைக் கேட்க)

4333.
'மறந்திலன் கவியின் வேந்தன்;
   வயப் படை வருவிப்பாரைத்
திறம் திறம் ஏவி, அன்னார்
   சேர்வது பார்த்துத் தாழ்த்தான்;
அறம் துணை நுமக்கு உற்றான் தன்
   வாய்மையை அழிக்கும் ஆயின்
பிறந்திலன் அன்றோ? ஒன்றோ?
   நரகமும் பிழைப்பது அன்றால்.

மறக்கவில்லை மந்திகளின் மன்னன்.
வலிமையான வானரப்படைகளை
அழைத்து வர தூதுவர்களை
பல திக்கிலும் அனுப்பியுள்ளான்.
அவர்கள் வந்து சேர காலதாமதம்
ஆவதை எண்ணி வருந்துகிறான்.
தரும சிந்தனை நிறைந்த தங்களைத் 
துணையாகக் கொண்ட சுக்ரீவன்,
சத்தியத்தை மறந்துபோனால்
இவ்வுலகத்தில் பிறவாதவனாவான்.
அது மட்டுமா ?
நரகத்திலிருந்து தப்பவும் முடியுமா ?'
என்று அனுமான் சொன்னான்.




4342.
'தாழ்வித்தீர் அல்லர்; பல்
   நாள் துருக்கிய அரக்கர்தம்மை
வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல்
   வருவித்தீர்; மரபின் தீராக்
கேள்வித்  தீயாளர் துன்பம்
   கிளர்வித்தீர்; பாவம்தன்னை
மூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர்
   முடிவின்' என்றான்.

'கால தாமதம் மட்டுமா செய்தீர்கள்,
அரக்கர்களின் வாழ்நாளை வளர்த்துள்ளீர்கள்,
அதனால் தேவர்கள் துன்பம் அடையச் செய்துள்ளீர்கள்,
வேள்வி செய்யும் முனிவர்கள் வருத்தத்தை
மிகுதியாக்கியுள்ளீர்கள்;
பாவங்கள் இன்னும் வளர துணை புரிந்துள்ளீர்கள்;
முடிவாக, கோபமே கொள்ளாத இராமனை
கோபமடைய வைத்துள்ளீர்கள்'
என்று இலக்குவன் உரைத்தான்.



4386.
'போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என
ஏயினன் அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணினான்.

'சென்றுள்ள தூதுவர்கள் கொண்டு வரும் சேனையை
உன்னோடு அழைத்து வா - நீதி நெறியில் வல்லவா!
அதுவரை நீ இங்கேயே இரு'
என்று அனுமானிடம் கூறினான்.
தலைவன் இராமன் தங்கியிருந்த இடத்திற்கு
சுக்ரீவன் விரைந்தான்.

( தொடரும் )


Wednesday, March 11, 2020

கம்பராமாயணம் 61




அரசியல் படலம்


4116.
அது காலத்தில், அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் -
'கதிரோன் மைந்தனை, ஐய! கைகளால்,
விதியால் மௌலி மிலைச்சுவாய்' எனா,


அப்பொழுது, கருணைக் கடல் இராமன்,
அறிவு நிறைந்த தம்பியை நோக்கி,
'சூரியனின் புதல்வன் சுக்ரீவனுக்கு,
 ஐயா ! உன் கரங்களால் விதிமுறைப்படி
முடிசூட்டு, விரைந்து' என்று கட்டளையிட்டான்.



4128.
" 'நாயகன் அல்லன்; நம்மை நனி 
   பயந்து எடுத்து நல்கும் 
தாய்' என இனிது 
   பேணி தாங்குதி தாங்குவாரை;
ஆயது தன்மையேனும், அற 
   வரம்பு இகவாவண்ணம்  
தீயன வந்தபோது 
   சுடுதியால் தீமையோரை".


"அரசன் அல்ல, 
நம்மை பெற்றெடுத்துக் காக்கும் தாய்"
என்று மக்கள் கொண்டாடுமாறு 
காக்கவேண்டியவர்களைக் காத்திடு;
அதுவே அரசின் இயல்பு எனினும்,
தீமை நேருமாயின்,
அத் தீயச் செயலைச் செய்வாரை, 
அறநெறி உரைக்கும் வரம்புக்குள் தண்டித்திடு"
என்று இராமன் சுக்ரீவனுக்கு அறிவுறுத்தினான்.



4138.
'அரசியற்கு உரிய யாவும் 
   ஆற்றுழி ஆற்றி, ஆன்ற 
திரை செயற்கு உரிய சேனைக் 
   கடலோடும், திங்கள் நான்கின் 
விரசுக என்பால்; நின்னை வேண்டினென்
   வீர!' என்றான் 
உரை செயற்கு எளிதும் ஆகி 
   அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான்.

"அரசாட்சிக்கு உரியவற்றை 
செய்யவேண்டிய முறைப்படி செய்;
பெரிய அலைகள் எழும்பும் 
கடல் போன்ற சேனையைத் திரட்டு;
நான்கு மாதங்கள் கழிந்த பின்,
என்னை வந்துப் பார்;
இதுவே உன்னை நான் கேட்பது, வீரனே"
என்றான், 
சொல்வதற்கு எளிதான 
கடைபிடிப்பதற்கு அரிதான ஒழுக்க நெறியைத்  
தவறாது பின்பற்றும் இராமபிரான்.


கார்காலப் படலம் 

4151.
நஞ்சினின், நளிர் நெடுங் கடலின், நங்கையர் 
அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின்,
வஞ்சனை அரக்கர் தம் வடிவின், செய்கையின்,
நெஞ்சினின், இருண்டது - நீல வானமே.

விடத்தைப் போன்று கறுத்தது.
குளிர்ந்த பெரிய கடல் போன்று,
மை பூசிய பெண்களின் கண்களைப் போன்று,
பரந்து விரிந்த கூந்தல் போன்று கறுத்தது.
கொடுமை செய்யும் அரக்கர்கள் போன்று,
அவர்களின் கொடுஞ்செயல் போன்று,
அரக்கர்களின் இரக்கமில்லா நெஞ்சம் போன்று 
இருண்டுபோனது, நீல வானம்.




4212.
'காலம் நீளிது, காரும் மாரியும்
   வந்தது என்ற கவற்சியோ ?
நீலமேனி அரக்கர் வீரம்
   நினைந்து அழுங்கிய நீர்மையோ ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்
   நாட வாரல் இலாமையோ ?
சாலும் நூல் உணர் கேள்வி வீர!
   தளர்ந்தது என்னை? - தவத்தினோய்!


'கார்காலம் இன்னும் நீள்கிறது,
மழையும் வருகிறது என்ற கவலையோ?
கருநீல மேனியாராகிய அரக்கர்களின்
வீரம் பற்றி எண்ணி வருந்துகிறாயோ ?
சீதையைச் தேடுவதற்கு, வாலியின் சேனை
இன்னும் வந்தபாடில்லை என்பதனாலா ?
நல்ல நூல்களைக் கற்றும், கேள்வி அறிவும்
நிறைந்த வீரனே, தவநெறியில் சிறந்தவனே,
நீ தளர்ந்திருப்பது ஏனோ?'
என்று வினவினான் இலக்குவன்.

( தொடரும் )

Tuesday, March 10, 2020

கம்பராமாயணம் 60




4021.
'அரக்கர் ஓர் அழிவு செய்து
   கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
   மனு நெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
   எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால்
   புகழை யார் பரிக்கற்பாலார்?'

அரக்கன் ஒருவன் உனக்குத் தீங்கு செய்தான் எனில்,
அதற்கு வேறுபட்ட ஒரு குரங்கு இனத்து அரசனை
கொள்ளவேணும் என்று எந்த நீதி நூலில் படித்தாய்?
உனக்குரிய கருணை குணத்தை எங்கு தொலைத்தாய்?
என்னிடத்தில் என்ன குற்றம் கண்டாய் ?
ஐயா! இப்படி நீயே பழியைச் சுமந்தாயெனில்
கிட்டும் புகழையெல்லாம் கொள்வார் யார் ?


4026.
'வீரம் அன்று; விதி
   அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின்
   மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று;
   பண்பு அழிந்து
ஈரம் இன்றி, இது
   என் செய்தவாறுஅரோ ?

( நீ செய்த செயல் )
'வீரத்தைக் காட்டும் செயல் இல்லை,
விதிமுறைகட்கு ஒத்ததும் இல்லை;
உண்மையைச் சார்ந்ததும் இல்லை;
உன் பூமிக்கு என் உடல் சுமையும் இல்லை;
உனக்கு நான் பகைவன் இல்லை;
உன் பெறுமை குன்றுமாறு, இரக்கம் இல்லாது
ஏன்  செய்தாய் இச்செயலை ?'



4059.
'முன்பு நின் தம்பி வந்து
   சரண் புக, 'முறை இலோயைத் 
தென் புலத்து உய்ப்பென்" என்று
   செப்பினன்; செருவில், நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி
   "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல் மறைந்து
   நின்று எய்தது' என்றான்.

('மறைந்து நின்று அம்பு விடுத்தது ஏன்?'
என்று கேட்ட வாலிக்கு)

"உன் தம்பி முன்னர் வந்து சரணடைந்தான்.
'முறைதவறிய உன்னை தென்திசையிலுள்ள
யமனுலகு அனுப்புவேன்'
என்று வாக்கு தந்தான், என் அண்ணன்.
போர்க்களத்தில் நீயும் உயிர் மீது பற்று கொண்டு
"நானும் உன் அடைக்கலம்" என்று கேட்டுவிட்டால்
என்ன செய்வது என்பதாலேயே, என் அண்ணன்
மறைந்து நின்று அம்பு எய்தினான்"
என்று பதில் தந்தான் இலக்குவன்.



4068.
'ஓவிய உருவ! நாயேன் உளது
   ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி
   புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல்
   சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும்
   கூற்றினை ஏவல்' என்றான்.

அழகான சித்திரத்தை ஒத்தவனே,
நாய் போன்ற நான், உன்னிடம்
வேண்டிப்பெறுவது ஒன்று உண்டு;
மலர்களிடத்து மதுவை அருந்தி,
புத்தி கேட்டு, தீய செயல்கள் செய்திடினும்
என் தம்பி மீது, கோபம்  கொண்டு
அம்பு எய்தி, எனைக் கொன்றது போல்
அவனையும் கொன்றுவிடாதே'
என்று இராமனிடம் வேண்டினான் வாலி.



4089.
'பாலமை தவிர் நீ; என் 
   சொல் பற்றுதிஆயின், தன்னின் 
மேல் ஒரு பொருளும் இல்லா 
   மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று 
   கட்புலக்கு உற்றது அம்மா!
'மால் தரும் பிறவி நோய்க்கு 
   மருந்து' என, வணங்கு மைந்த!'

'சிறுபிள்ளைத்தனமாய் அழுவதை நிறுத்து;
நான் சொல்வதை உறுதியாகப் பற்றிடு;
தனக்கு மேல் ஒரு பொருள் 
இல்லாப் பரம்பொருள்,
கையில் வில்லை ஏந்திக் கொண்டு,
திருவடி மண்ணில் படும்படி,
நான் கண்ணால் காணும் வண்ணம் நிற்கிறது;
மயக்கத்தைத் தரும் பிறவி நோய்க்கு மருந்து இது,
வணங்கு, மகனே'
என்று வாலி தன் மகன் அங்கதனுக்கு உரைத்தான்.



4093.
தன் அடி தாழ்தலோடும் 
   தாமரைத் தடங் கணானும் 
பொன் உடைவாளை நீட்டி, 'நீ 
   இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் 
   ஏத்தின; இறந்து வாலி 
அந் நிலை துறந்து வானுக்கு 
   அப் புறத்து உலகன் ஆனான்.

அங்கதன் இராமனை வணங்கினான்;
தாமரை மலர் போன்ற கண்களை உடையவன் 
தன் உடைவாளை நீட்டி 
'இதைப் பெற்றுக்கொள்' என்று சொன்னான்.
அவ்வாறு சொன்ன பொழுது ஏழு உலகங்களும் 
இராமனை துதித்தன;
வாலி தன் உடலைத் துறந்து, 
வானுலகிற்கு அப்பாற்பட்ட 
உயர்த்த இடத்தைப் பெற்றான்.



( தொடரும் )

Monday, March 9, 2020

கம்பராமாயணம் 59



3978.
'வில் தாங்கு வெற்பு அன்ன
   விலங்கு எழில் தோள! "மெய்ம்மை
உற்றார் சிலர்; அல்லவரே
   பலர்" என்பது உண்மை.
பெற்றாருழைப் பெற்ற பயன்
   பெறும் பெற்றி அல்லால்,
அற்றார் நாவை என்றலுக்கு
   ஆகுநர், ஆர்கொல்?" என்றான்.

வில்லைத் தாங்கிய, மலையை ஒத்த
அழகிய தோள்களை உடையவனே,
இவ்வுலகில் தவறில்லாத ஒழுக்கம் நிறைந்தவர்
ஒருசிலரே; அவ்வாறில்லாதவர் பலர்;
இதுதான் உண்மை;
நம்மைப் பெற்றவரிடம் உள்ள
நற்குணங்களின் பயனை
நாட வேண்டுமே தவிர,
அவர் குற்றமற்றவர் என்று சொல்வதற்குரியவர்
யாருளர் ?' என்று பதிலுரைத்தான் இராமன்.



3989.
உரத்தினால் மடுத்து உந்துவர்;
   பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசைத்து எற்றுவர்;
   கடிப்பர்; நின்று இடிப்பர்;
மரத்தினால் அடித்து உரப்புவர்;
   பொருப்புஇனம் வாங்கிச் 
சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்;
   தெழிப்பர்; தீ விழிப்பர்;

இருவரும் ஒருவரை ஒருவர் 
மார்பினால் தாக்கித் தள்ளினர் ;
கால்களால் உதைத்துக்கொண்டனர்; 
கைகளால் தாங்கினர்;
கடித்தும், இடித்துக்கொண்டனர்;
மரங்களைப் பெயர்த்தெடுத்து 
அடித்துக்கொண்டு, அதட்டினர்;
மலைகளைத் தூக்கி 
தலைமேல் வீசி தாக்கிக்கொண்டனர்;
ஆரவாரித்து, 
தீ பறக்க சினத்து நோக்கிக் கொண்டனர்.




3995.
மலைந்தபோது இனைந்து இரவி சேய் 
   ஐயன்மாடு அணுகி 
உலைந்த சிந்தையோடு உணங்கினன்,
   வணங்கிட, 'உள்ளம் 
குலைந்திடேல்; உமை வேற்றுமை 
   தெரிந்திலம்; கொடிப் பூ 
மிலைந்து செல்க; என விடுத்தனன்;
   எதிர்த்தனன் மீட்டும்;

வாலி கடுமையாகத் தாக்கினான்,
நிறைய அடிவாங்கிய சூரியனின் மைந்தன் 
இராமனிடம் ஓடி வந்தான்,
வருந்தி நின்றான், வாட்டமுற்றான்,
பணிந்து வணங்கினான்,
'உள்ளம் வருந்தாதே, உனக்கும் அவனுக்கு 
வேற்றுமை காண முடியவில்லை,
நீ கழுத்தில் இந்த கொடிப்பூ சுடிக் கொள், 
போருக்கு மீண்டும் செல்' 
என்று சொல்லி அனுப்பினான் இராமன்.
சண்டையிட திரும்பிச் சென்றான் சுக்ரீவன்.



3999.
'எடுத்துப் பாரிடை எற்றுவென் 
   பற்றி' என்று இளவல் 
கடித்தலத்தினும் கழுத்தினும் தன் 
   இரு கரங்கள் 
மடுத்து மீக் கொண்ட வாலிமேல் 
   கோல் ஒன்று வாங்கி 
தொடுத்து நாணொடு தோள் 
   உறுத்து இராகவன் துரந்தான்.


'இவனைப் பிடித்து எடுத்துத் தூக்கி 
தரையில் அடிப்பேன்' என்று எண்ணினான்,
தன் தம்பியின் இடையிலும் கழுத்திலும் 
தன் இரு கரங்களால் மேலே தூக்கினான்.
அவ்வமயம் 
ஒரு அம்மை எடுத்து, வில்லில் பூட்டி,
தன் தோள் வரை நாணை இழுத்து 
வாலிமேல் செலுத்தினான் இராகவன்.


4013.
மும்மை சால் உலகுக்கு எல்லாம் 
   மூல மந்திரத்தை, முற்றும் 
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் 
   பெரும் பாதத்தை, தானே 
இம்மையே, எழுமை நோய்க்கும் 
   மருந்தினை, 'இராமன்' என்னும் 
செம்மை சேர் நாமம்தன்னைக் 
   கண்களின் தெரியக் கண்டான்.

(யாருடைய அம்பு? என்று வாலி 
அந்த அம்பை உருவிப் பார்க்க) 
மூன்று உலகு^க்கும் பொருந்தும் 
மூல மந்திரத்தை,
முழுவதும் தம்மையே அர்ப்பணித்து 
வழிபடும் அடியார் உச்சரிக்கும் சொல்லை,
இந்தப் பிறவியிலேயே, ஏழுவகைப் பிறப்பு 
நோய் வராது தடுக்கும் மருந்தை,
'இராமன்' என்னும் சிறந்த திருநாமத்தை, 
தன் கண்களால் கண்டான்.

^ - இப்பிறவி, முற்பிறவி, இனி வரும் பிறவி 

( தொடரும் )


Sunday, March 8, 2020

கம்பராமாயணம் 58



3929.
'கொடுந் தொழில் வாலியைக்
   கொன்று, கோமகன்
கடுங் கதிரோன் மகன்
   ஆக்கி, கை வளர்
நெடும் படை கூட்டினால்
   அன்றி, நேட அரிது
அடும் படை அரக்கர்தம்
   இருக்கை - ஆணையாய்!'

'வலிமை நிறைய உடைய வாலியைக் கொல்லணும்,
சூரியன் மகன் சுக்ரீவனை அரசனாக்கவேணும்,
செயல் திறம் மிக்க பெரிய படையினை
ஒன்றுசேர்க்க வேணும், அவ்வாறில்லாது
அழிக்கும் தன்மை உடைய அரக்கர்கள்
இருக்கும் இடம் நுழைவது கடினம்'
என்று அனுமான் சொன்னான்.


வாலி வதைப் படலம்

3946.
இடித்து உரப்பி 'வந்து போர்
   எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று
அடித்தளங்கள் கொட்டி, வாய் மடித்து
   அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல்
   புக்கது என்ப - மிக்கு இடம்
துடிப்ப, அங்கு உறங்கு வாலி
   திண் செவித் துளைக்கணே.

சத்தமாய்க் கத்தினான்.
'போர் புரிய வா' என்று ஓலமிட்டான்.
'உன்னைக் கொல்வேன்' என்று சூளுரைத்தான்.
கால்களால் தரையில் மிதித்தான்.
உதடு கடித்தான். தோள்களைத் தட்டினான்.
வலிய போருக்கு அழைத்த
சுக்ரீவன் செய்த ஆரவாரம், கிட்கிந்தையில்
இடது கண், இடது தோள் துடிக்க^,
உறங்கிக்கொண்டிருந்த வாலியின் காதில் விழுந்தது.

^ - கெட்ட சகுனம்


3958.
'கொற்றவ! நின் பெருங்
   குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள்
   ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந் திறல்;
   பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது நெடுந் துணை
   உடைமையால்' என்றாள்.


'அரசே, உன் வலிமைக்கு முன்
வெல்ல முடியாது முன்னர் ஓடியவன், அந்த சுக்ரீவன்.
அதன்பின் பெரிய ஆற்றல் ஏதும் பெறவில்லை அவன்.
இன்று வலிய வந்து போருக்கு அழைக்கிறான் எனில்,
ஏதோ பெரிய வலிமைத் துணையோடு வந்திருக்கிறான்'
என்று தாரை வாலியிடம் சொன்னாள்.



3966.
'இருமையும் நோக்குறும் 
   இயல்பினாற்கு இது 
பெருமையோ? இங்கு இதில் 
   பெறுவது என்கொலோ ?
அருமையின் நின்று, உயிர் 
   அளிக்கும் ஆறுடைத் 
தருமமே தவிர்க்குமோ 
   தன்னைத் தான்அரோ?

(துணைக்கு இராமன் என்பவன் வந்திருக்கிறான் 
என்று சொன்ன தாரையிடம்)
'இம்மை மறுமை இரண்டையும் எண்ணி செயல்படும் 
இராமனுக்கு பெருமையாகுமா நீ சொன்னது ?
அவ்வாறு சுக்ரீவனுக்கு துணை புரிவதால் 
அவன் என்ன பெறப்போகிறான் ?
உலக உயிர்களைப் பாதுகாக்கும் 
தருமமே, தன்னை அழித்துக்கொள்ளுமோ ?'
என்று பதில் சொன்னான் வாலி.



3969.
'தம்பியர் அல்லது தனக்கு 
   வேறு உயிர் 
இம்பரின் இலது என 
   எண்ணி ஏய்ந்தவன் 
எம்பியும் யானும் உற்று 
   எதிர்ந்த போரினில் 
அம்பு இடை தொடுக்குமோ 
   அருளின் ஆழியான்?

'தம்பியரே தன் உயிர், 
தனியாக உயிர் என்று வேறேதும் தனக்கில்லை 
இவ்வுலகில் என்று எண்ணி வாழ்பவன்,
என் தம்பியும் நானும் போர் புரிய 
இடையில் புகுந்து அம்பைத் தொடுப்பானா 
என்ன, கருணைக் கடலான இராமன்'
என்று கேட்டான் வாலி.


3976.
ஆற்றாது பின்னும் பகர்வான் 
   'அறத்தாறு அழுங்கத் 
தேற்றாது செய்வார்களைத் தேறுதல் 
   செவ்விது அன்றால்;
மாற்றான் எனத் தம்முனைக் 
   கொல்லிய வந்து நின்றான்,
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் 
   என்? வீர!' என்றான்.

தன் மனதில் தோன்றியதை மறைக்காது,
'தரும நெறி கெடுமாறு, தெளிவு இன்றித்  
தீயச் செயல்கள் செய்பவர்களை நம்புதல் 
நன்மை தராது;
'பகைவன்' என்று தன் தமையனையே கொல்ல, 
உறவினர் அல்லாத நம்மோடு வந்திருக்கிறான், 
இவன் நல்ல துணையாதல் எவ்வாறு? வீரா'
என்று கேட்டான் இலக்குவன், இராமனிடம்.


( தொடரும் )