Friday, January 9, 2015

மழை

மழை
இதே மழை தான் ...
ஒரு நாள் ..... ஒரு கல்யாணத்தில்,
தனியே நான், மண்டபத்தில்
கொஞ்சும் அவள், என் சிந்தனையில் ;
மின்னலோ ..... தேவதையோ ?
இல்லை .... இல்லை ....
என்னவள்
மேகத்தினிடையே எனை மிதக்கவைப்பவள்
மண்ணிலிறங்கி  மழையில் நடந்து
என்முன்வந்து நின்றாள்;
மணப்பெண் ஃப்ரண்டா ?
ஃப்ரண்டோட ஃப்ரண்டு
சொல்லிருந்தா வண்டிலேயே வந்திருக்கலாம்ல ? என்றேன்
தலை நனஞ்சிருக்குல்ல, துண்டு தரலாம்ல ? என்றாள்
தனியே அவளை தள்ளிக்கொண்டு என் அறைக்கு வந்தேன்;
தலை துடைக்க துண்டெடுத்துத் தந்தேன்;
துடைச்சிவுடுறது என்றாள்
சிரித்துக்கொண்டே சேவை செய்தேன்;
கரும்பு தின்னக் கூலியா என்றெண்ணும் பொழுதில் ...
கதவு படபடவென அடிக்கப்பட,
நான் திறக்க ...
டிபன் ஆச்சி மாப்ளே, தூக்கம் ... சாரி யாரிவங் ...
கரடி ... கரடி
எனத் திட்டிக்கொண்டே
எனையும் இழுத்துக்கொண்டு
சாப்பாட்டுக்கூடம் சென்றாள் .
இதே மழை நாளில் தான்
ஒரு நாள் .....
 

Saturday, November 22, 2014

தவறு புரிந்தது

 
ஏன் என்னோட யூனிபார்ம தோய்க்கல 
என்று வேலைக்காரியைக் கேட்ட பொழுது
புரியாத தன் தவறு,

ஒனக்கு ABCD கூட தெரியல
என்று அவளைப் பார்த்து சொன்ன பொழுது
புரியாத தன் தவறு,

இன்னிக்கு அதே பொடவையொட ஸ்கூலுக்கு வந்து நிக்காதே
என்றவன் கட்டளையிட்டப் பொழுது
புரியாத தன் தவறு,

எனக்கு டிராயிங்ல ஃபர்ஸ்ட் ப்ரைஸ்
என்றென் பையன் வேலைக்காரியிடம் ஓடிப்போய் சொன்ன பொழுது
இதுவரை புரியாத தன் தவறு...
தாய்க்குப் புரிந்தது;

Thursday, November 6, 2014

நான்

தினம்
விழித்து துதித்து
கழித்து குளித்து
தின்று வயிறு நிரப்பி
உட்கார்ந்து பணம் சேர்த்து
வருவோர் போவோரோடு வாயாடி
பொய்யாய் சிரித்து
புரம் பல சொல்லி
கூடிக்களித்து உறங்கி மடியும் மானிடன் நான்.

Wednesday, October 29, 2014

காபி

பார்த்தவுடனே ஒரு பரவசம்.
தொட்டுச் சுவைக்க துடிக்கும் நெஞ்சம்.
இதழ் வைத்து இழுக்க இழுக்கப் பேரின்பம்.
எத்துனை சுவைத்தாலும்
இல்லை இதற்கொரு எல்லை;

பல வடிவங்கள், பாதகமில்லை;
ஆனால் நிறத்தில் இருக்கு சுவையின் ஆழம்;
அமெரிக்க ஐரோப்ப வெள்ளை வேலைக்காகாது;
ஆப்ரிக்கக் கருப்பு சுவைக்காது;
இந்தியத் தோல் நிறமே
இவ்விடயத்தில் இனிமையானது;

இன்றியமையாதது - இதழ் சுட வேண்டும்,
சூடு இல்லையெனில் சுவையில்லை,
பருகுவதில் ஒரு பலனுமில்லை;

தஞ்சாவூர்க்காரன் நான்,
காபிக்கு அடிமையான ஆண்;

Friday, October 10, 2014

ஆண்டவனுக்கு நன்றி

கண் திறவாது உனைக்
கனவில் கண்டு களித்திருக்கும் போதும்

கண்ணடித்துச் சிரித்துப் பேசிப் பழகும் போதும்

விரல் தடவி விஷமம் செய்யும் போதும்

மெல்ல தோளில் இடித்து
நீ முறைக்கையில்
ஏதுமறியாதவன் போல் உனைப் பார்க்கும் போதும்

எனை ஆணாய்ப் படைத்த
ஆண்டவனுக்கு ஆயிரம் நன்றிகள் நவில்கின்றேன்.

Wednesday, September 17, 2014

உன்நினைவு

கருமேகத்தைக் காணும் போதெல்லாம்,
மழையில் நனையும் போதெல்லாம்,
பூத்து சிரிக்கும் பூவைக் காணும் போதெல்லாம்,
கரையை முட்ட ஓடிவரும் அலையைக் காணும் போதெல்லாம்,
இனிமையான காதல் பாட்டு கேட்டு ரசிக்கும் போதெல்லாம்
மறவாத உன்நினைவு
மறுபடி மறுபடி ஞாபகத்தில் வருவதை
மறுக்கமுடியாது நான் மகிழ்கிறேன்;

Monday, September 15, 2014

கண்ணே நீ வந்துவிடு

காலையில் கண் விழிக்குமுன்னே,
சூரியக் கதிர்கள் எனைச் சுடுமுன்னே,
குயில் வந்து கூவி என்னுறக்கம் களைக்குமுன்னே,
கண்ணே நீயென் கனவிலாவது வந்துவிடு;

காதலன் நானுனைக் கட்டிப்பிடித்து
காதலிக்க இடம்கொடு;

முத்தமிட்டு முத்தம் பெற்று எனை
மோகத்தீயில் ஆழ்த்திவிடு;

கடமைகள் எனை உருட்டி மிரட்டி அடக்கும் முன்
உனை ஆள விட்டுக்கொடு;