Wednesday, August 27, 2014

காத்திருந்தேன்

மாலை வேளையில்
மலர்ச் சோலை மூலையில்
மன்னவனே உனக்காக
மங்கை நான் காத்திருந்தேன்;

கண்கவர் ஆடையிலே
கவிதையொன்று சொல்லிக்கொண்டு
காளை நீ வருவாயென்று
கன்னி நான் காத்திருந்தேன்;

பூவினுள் நுழைந்து வண்டு
புதுத்தேனை நிறையப் பருகி
போதையில் பாதை புரியாது
பறந்து திரிந்ததைப் 
பார்த்துச் சிரித்தேன்;

ஆண் மயிலும் பெண் மயிலும்
ஒன்றையொன்று உரசிக்கொண்டும்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் 
களித்துக் கிடந்ததைக்
காணமுடியாது கண்டுகிடந்தேன்;

நேரம் ஆக ஆக
நீ அங்கு வராது போக
எங்கோ ஒரு சோகப்பாடல் யாரோ பாட
என் கண்ணிலிருந்து கண்ணீர் ஓட
ஏனோ நான் உயிரில்லா உடல்போலே
எழுந்து போனேன்;

Thursday, August 7, 2014

நீ



கண் விழித்தால் அருகில் நீ;
'கண்ணா இங்கெப்படிடா வந்தாய் நீ'
என்றுகேட்டால்
அறைத்தோழி முறைக்கிறாள்;
'அட ராமா' என்று சொல்லிக்கொண்டே
குளியலறைக்குள் சென்றால்
அரையில் ஆடையோடு அங்கே நீ;
ஆடை அணிகையில்
இடையிலிருந்து கை எடுக்காது
இம்சிக்கிறாய் நீ;
உணவருந்த உட்கார்ந்தால்
ஒரு கவளம் கேட்கிறாய் நீ;
ஆண்டவனே துணை என்று
ஆலயம் தொழ சென்றால்
ஆடவன் நீ
அருகில் தொடுதூரத்தில்;
ம் ... வேறென்ன செய்ய
‘மாரியாத்தா காளியாத்தா
என்னையும் சீக்கிரம்
ஆத்தா ஆக்கு‘
என்று வேண்டிக் கொண்டு
வெளியே வந்தால்,
நாலு சக்கர வண்டியில்
எதிரில் நீ.

Tuesday, August 5, 2014

மழை - 3



அன்று...
மழை நாளில் ஒரு நாள்
அவள் விரலோடு விளையாடிக்கொண்டே நான்
என் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு அவள்;
கவிதை ஒன்று சொல்லேன் என்றாள்;
   இரு அற்புதக் கவிதைகளை
   இறுக்கி பிடித்துக் கொண்டு
   படிக்கவிடாத பாவையே...
என்று ஆரம்பித்தேன்;
முதுகில் குத்தினாள்;
வேறு சொல் என்று கட்டளையிட்டாள்; 
   நர்த்தனம் ஆடும் விழிகள்;
   நறுமணம் வீசும் மொழிகள்;
   நிலவின் நகல் முகம்...
ஆகா அற்புதம், அப்புறம் ... என்றாள்
  உண்மையைச் சொல்லடி
சொல்லுகிறேன், மேலே சொல் என்றாள்;
   உன் தங்கை மட்டும்
   எப்படி இப்படி அழகாய் இருக்கிறாள்
என்று முடித்தேன்;

கோபத்தில் என்னைக் கடித்து விட்டு
விருட்டென்று சென்றுவிட்டாள்;
இதே மழை நாளில் தான் ஒரு நாள்...