Tuesday, November 1, 2022

தமிழமுது 17

திருக்குறள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். (84)

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.    110

 கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்ட வளரமாட்ட முறைமாறி வரமாட்ட துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்ட எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (ஒருவனது வினைப்பயன் குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்)

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
   
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
   
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
   
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
   
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே (8.9.1)

 

தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே
  (10.7.9)

பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment