Saturday, April 14, 2012

ஏனாதிநாத நாயனார் - 2

                                    ஏனாதிநாத நாயனார்

வாள் பயிற்சியால்
வந்த வருமானம் எல்லாவற்றையும்
வரும் போகும் சிவனடியார்களுக்கு
வாரிவழங்கினார்; இவ்வாறவர்
வாழும் ஊரிலே
வாழ்ந்து வந்தான்
ஆதிசூரன் எனும்
அயோக்கியன்;
அவனும் சொல்லித்தந்தான்
அண்டியோர்க்கெல்லாம் வாள்பயிற்சி;
ஆனாலும் அவனை நாடிச் சென்றோரில்லை;
சுத்தமில்லா நீரைச் சுவைப்பாரில்லை;

நாளுக்கு நாள்
தனக்கு வருவாய் வராது குறைவதையும்,
தான் வறுமையில் வாடுவதையும்,
தன் எதிரி ஏனாதி நாதருக்கு வருவாய் அதிகரிப்பதையும்
அறிந்த ஆதிசூரன்,
ஏனாதி நாதரை
எதிர்த்து போர் புரிந்து வீழ்த்திட
எண்ணினான்;
தன்னோடு சிலரைக் கூட
அழைத்துக்கொண்டான்;
ஏனாதி நாதரைப் போருக்கு
அழைத்தான்;
அவ்விருவருள் எவர் வலியவரோ
அவரே போர் வாள் பயிற்சி
அளிக்கத் தகுந்தவர் என்று சொன்னான்;

ஏனாதிநாதர் இசைந்தார்;
எதிரியோடு போர் புரிந்தார்;
போரில் தோற்றான்;
புறமுதுகு காட்டிப் பறந்தான்;
எண்ணியப்படி நேரெதிர் போர் புரிந்து
ஏனாதினாதரை வீழ்த்த முடியாதென்பதை
அறிந்து கொண்டான்
ஆதிசூரன்;

நயவஞ்சகன்
குறுக்கு வழியில்
எதிர்க்கத் துணிந்தான்.
எப்படி என்ன செய்வதென்று
யோசித்தான்;


       சேட்டாருங் கங்குல்
         புலர்காலைத் தீயோனும்
       நாட்டாரைக் கொல்லாதே
         நாமிருவெம் வேறிடத்து
       வாட்டாயங் கொள்போர்
         மலைக்க வருகவேனத்
       தொட்டார்பூந் தாரார்க்குச்
         சொல்லி வரவிட்டான்.


இருவருள் ஒருவர் உயிரோடு
இருக்கும்வரை,
இடைவிடாது போர் புரிய வேண்டும்,
இம்முறை தனியே ஓரிடத்தில்
அப்போர் நிகழ வேண்டும்;
அயலார் யாரும்
அவ்விடத்தே வருதல்
தவிர்க்கப்பட வேண்டும்;

வரைமுறைகள் வகுக்கப்பட்டது;
வாள்வீசிப் போர் புரிய
தேதி குறிக்கப்பட்டது;


                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment